பக்கங்கள்

புதன், 31 டிசம்பர், 2008

நினைவை எட்டிய முதற்நூறு (1-20)


நினைவை எட்டிய முதற்நூறு (1-20)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

ரு நாளில் நாம் எத்தனையோ பாடல்களைச் செவியினூடே கேட்கிறோம், ஒரு சில பாடல்கள்தாம் நம்மைக் கவர்கின்றன, ஈர்க்கின்றன;
அப்படி ஈர்ப்பவையில் குறிப்பிட்ட ஓரிரு வரிகளில் நாம் விழுந்துவிடுவதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,
சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் பின்வருமாறு:
முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?
முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில் நினைவு முகம் மறக்கலாமோ?
2. உன் சேல காத்திலாட, என் நெஞ்சும் சேந்தாட
3. உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது... இது கம்பன்
பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது...
4. காதல்?... கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ஹூம்ம்ம் ம்ம்ம்... ம்ம்ம்?... நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவல்லோ...
5. அந்த நிலவை எடுத்து கவரி வீசவா, எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...
6. சகாயமே உன்னருகினில் நிலைப்பெறுவேனே, தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே...
7. அடிவானம் சிவந்தாலும் குடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே
8. அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
9. யாவும் நீயாய் மாறிப் போக நானும் நானில்லையே... மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே... தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்...!
10. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும், விலகிப் போகாதே தொலைந்துப் போவேனே நான்....!
11. என்ன இருந்தப் போதும் அவள் எனதில்லையே... மறந்துப்போ என் மனமே!
12. மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே... மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ...
13. மரபு வேலிக்குள் நீ இருக்க, மறக்க நினைக்கிறேன் முடியவில்லை!!!
14. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை, நெருக்கமே காதல் பாஷை
15. மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன?
16. பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன், கேளாமால் போன பாடலை எல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன்...
17. இழப்பதை இங்கே இன்பம் என்று கொண்டேன், நஷ்டங்களே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன் சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான், லயித்து கிடந்தேன் லட்சியத்தை முடித்தான்
18. அழகிய துளி, அதிசய துளி தொட தொட பரவசமே
19. நதியும் குளிக்கின்றதே, நனைய வா என்றதே, பார்த்த இன்பம் பாதி, இன்பம் நனைவேன் நானே
20. வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனித்துளி ஆவேனோ
(எஞ்சியவை பின்னாளில்)

வெள்ளி, 26 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (5)

(கடைசி பாகமுங்கோ)


கிசு கிசு குசுலக்குமாரி


... ... சுடலையின் தட்டும் காலியாகி விட்டது. தட்டில் எஞ்சி இருந்த ஈரமும் காய ஆரம்பித்துவிட்டது. உணவு எடுக்கச் சென்ற உப்புலி மட்டும் திரும்பி வரவில்லை. நேரமாவதால் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட நினைத்தான். அவன் கைப்பேசிக்கு இணைப்பு கிட்டியது, ஆனால் அவன் எடுக்கவில்லை. சுடலைக்குச் சந்தேகம் வலுத்தது.


(பாகம் 5)


ணவு எடுக்கும் இடத்திற்கு அருகில் கூட்டம் குழுவி இருந்தது. சலசலப்பான சூழ்நிலை சுடலையைக் கலவரப் படுத்தியது. என்ன, ஏது என மூக்கை நுழைப்பதில் நம்மவருக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? சுடலையும் ஆவல் ததும்ப எட்டி பார்த்தான். அதிர்ச்சி. ஆனால் அவனை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

அன்பு நண்பன் உப்புலிதான் கூட்டத்துக்குக் காரணம். அவன் மட்டும் அல்ல, அவனோடு குசுலக்குமாரியும். இருவரும் சேற்றில் வழுக்கி புரண்டு கொண்டிருந்தனர். சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அவர்களுக்கு உதவவில்லை, சினிமாவில் காண்பிப்பது போல. அந்த இக்கட்டிலும் கூட குசுல் தனது கருமத்தில் இருந்து பின் வாங்கவில்லை. முடிந்த வரை பத்திரிக்கையில் கிசுகிசு வரும் அளவுக்கு அத்தனை சேட்டைகளையும் செய்தாள்.

சுடலை மனசு கேட்காமல், கூட்டத்தைக் கலைத்து நண்பனுக்குக் கை கொடுத்தான். அவளும் எழுந்து வந்தாள். விசாரித்த போது, உப்புலி சொன்னது சிரிப்பு சிரிப்பாக வந்தது. உப்புலி உணவு எடுக்க சென்ற போது குசுலக்குமாரியைச் சந்தித்து இருக்கிறான். அவள் பேசிக் கொண்டே அவசரமாக நடந்திருக்கிறாள். தூக்கு சப்பாத்து; சொத சொதவென இருந்த புட்தரை; நடக்கும் போது கால் சேற்றில் மாட்டிக் கொண்டு தடுமாறி இருக்கிறாள். உப்புலியும் ஹீரோவைப் போல பாய்ந்து அவளைத் தாங்கி பிடிக்க, அந்த 80 கிலோ இம்சையைத் தூக்க முடியாமல் மூச்சடைத்து தானும் சேற்றில் விழுந்திருக்கிறான். பிறகு நடந்தது தான் தெரியுமே.


உப்புலியின் மீது ஒட்டிக் கொண்டிருந்த சேற்றைக் கழுவி விட்டு அவனைத் தன் மகிழுந்திலேயே ஏற்றிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். பாவம் உப்புலி, அரண்டு போய் இருந்தான். முகம் வெளுத்து இருந்தது. சுடலைக்கு இதில் என்ன மகிழ்ச்சியான விசயம் என்றால், தான் இதன் வழியாக பத்திரிக்கை செவ்வியில் இருந்து தப்பித்ததே. ஒரு கண்டம் மீண்ட தெம்பு அவன் முகத்தில். வாகனத்தைச் செலுத்திக் கொண்டே அடிக்கடி உப்புலியைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.

உப்புலியின் கைப்பேசி, குறுஞ்செய்திக்கான ஓசையை ஒலித்தது. அரை ஈரத்தோடு இருந்த காற்சட்டை பைக்குள் கையை விட்டு கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அதிர்ச்சி விழிகளோடு செய்தியைச் சுடலையிடம் பகிர்ந்துக் கொண்டான்.

அனுப்புனர்: குசுலக்குமாரி
செய்தி : “டியர் உப்புலி, நடந்தத எண்ணி வருத்தம் வேண்டாம், உங்க உதவிக்கு நன்றி, இனி அடிக்கடி சந்திக்கலாம். இன்று இரவு, இரவு வணக்கம் சொல்ல உங்களுக்கு அழைப்பு செய்வேன், காத்திருக்கவும்”

“ஹாஹா... ஐயோ.... மச்சா உனக்கு லாட்டரி அடிச்சிருச்சுடா... குசுலக்குமாரி மாதிரி ஒரு அட்டு பிகர் கேட்ட... இப்போ அவளே உன்னை தேடி வர்ர மதிரி தெரியுது... நீ சொன்ன சாமர்த்தியத்த இப்போ காட்டுடா மச்சா.”
அவனை வெறுப்பேற்றவே சொன்னான் சுடலை.
குசுல் இனி தன்னை அவ்வளவாக தொந்தரவு செய்ய மாட்டாள் என்று சுடலை உற்சாகமானான்.
அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளேயே உப்புலியின் கைப்பேசி அலற தொடங்கி விட்டது. அழைப்பு குசுலக்குமாரியிடம் இருந்து. எடுப்பதா இல்லையா என தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டே இருக்கிறான் உப்புலி.

(கிசுகிசு முற்றும்)

சனி, 20 டிசம்பர், 2008

எங்கே போகிறோம்? - நாவல்


எங்கே போகிறோம்?


- நாவல்


“எங்கே போகிறோம்”என்பது எனது கேள்வியன்று. அண்மையில் நான் படித்த ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளரின் பழைய புதினம். சென்னையின் ‘தாகம்’ நிறுவனத்தின் வெளியீடு. இது இலக்கிய பரிசு பெற்ற ஒரு நாவலும் கூட.



எனக்கு இதைப் பரிசாக அளித்தவர் நண்பர் விக்னேஷ்வரன் அடைக்கலம். அண்மைய சந்திப்பின் போது எனக்குள் வாசிக்கும் பழக்கத்தை விதைக்கும் பொருட்டு அவர் இதைப் பரிசளித்து இருக்க வேண்டும். முதலில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும். அவரின் அன்பு கட்டளைக்கு இணங்க இதோ அந்நாவலை பற்றிய எனது எண்ணங்கள். (விமர்சனமன்று)



இந்திய நாட்டில், சுதந்திரத்திற்குப் பத்தாண்டு காலத்துக்குப் பிறகு நிகழ்ந்த பல உண்மை சம்பவங்களைக் கற்பனை கதாப்பாத்திரங்களோடு சொல்ல முற்பட்டுள்ளார் கதை ஆசிரியர். சுதந்திரத்துக்குப் பின்பும் நாட்டின் எதிர்கால பின்னடைவுக்கு யார் காரணம், நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற கதைக்கருவையே சுற்றி கதையும் கதையின் பாத்திர அமைப்புகளும் பின்னப்பட்டுள்ளன.



காந்திய நெடி நாவல் முழுக்க வலம் வந்துள்ளது. அதன் நிறைகளை மட்டுமின்றி குறைகளையும் அதன் வீழ்ச்சிக்கு எவை வித்தாக அமைந்திருக்கக் கூடுவன என்பதையும் கதையினூடே சொல்லியுள்ளார். காந்தியத்தின் தெளிவான நோக்கம், அதைப் பற்றிய மக்களின் குறுகலான கண்ணோட்டம், சுதந்திரத்துக்குப் பின்பு எவ்வாறு அதைச் சாத்தியப் படுத்துவது - இவற்றை வாசகர் மனத்தில் விதைப்பதாகவே இந்நாவல் புனையப் பட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பத்தாண்டுகள் கடந்து வந்து சென்னையை மையமகாக் கொண்டு கதை துவங்கப் பட்டுள்ளது. சுதந்திரத்துக்காக பாடுவட்டவர் ராமலிங்கம். அவரது மனைவி லட்சுமிஅம்மாள். அவர்களுக்கு சிதம்பரம், பாரதி, சுபாஷ் என மூன்று குழந்தைகள். குழந்தைகளின் பெயர்களில் சுதந்திரப் போராளிகள் வாழ்கின்றனர். அகிம்சைவாதியாக காந்தியின் கொள்கையில் வாழும் ராமலிங்கமும் அவரது மூத்த புதல்வன் சிதம்பரமும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், இழப்புகள், போராட்டங்கள் என கதை நகர்கிறது. இளைய மகள் பாரதி மற்றும் மகன் சுபாஷ் இருவரும் கார்ல்மாக்ஸ் பாதையை வாழ்க்கையில் கடைபிடிக்கின்றனர். கார்ல்மாக்ஸ் – காந்தியம், இவை இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைகளையும் ஆசிரியர் இனம் கண்டுள்ளார். நாடு மற்றும் அரசியல் தொடர்புடைய கதை என்றாலும் கூட, குடும்ப அன்பும் தோழமை பரிவும் காதலும் ஆங்காங்கே கதைக்குச் சுவாரசியம் ஊட்டுகின்றன.

கதையின் ஓட்டத்தை வளப்படுத்த, ராமலிங்கத்தின் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து கதையில் இன்னும் பல பாத்திரப் படைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கதையில் வரும் கதைமாந்தர்களைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகையானது நாட்டுக்கு நல்லது செய்ய போராடும் கூட்டம். இந்த பட்டியலில் சிதம்பரம், ராமலிங்கம், சலீம், கணேசன், எழுத்தாளர் ரத்தினம், ராகவன், கோபாலன், அன்பானந்தம், வளநாடன், நரசிம்மன், சுபாஷ், ராமநாதன், போன்றோரைச் சேர்க்கலாம்.

இரண்டாம் வகையானது, முன்னம் சொல்லப்பட்டதுக்கு மாறுபட்டு இருப்பது, அதாவது நாட்டுக்குத் துரோகம் இழைத்து, சொத்து குவிக்க அலைபவர்கள். இந்த வகை பட்டியலில் பொன்னையா, பஞ்சாபகேசன் (பஞ்சு), துரைசாமி, பாலசுந்தரம், சுந்தரேசன், உஷா, நடிகர் குமரேசன், சியாமளா, காதர்பாவா, கன்னையாலால், திருவேங்கிடம் போன்றோர் அடங்குவர்.

இந்த இரு வகைகளிலும் சம்பந்தப் படாமல் இருக்கும் பாத்திரப் படைப்புகளும் உள்ளன. லட்சுமிஅம்மாள், பாரதி, டாக்டர் ராஜன், மீனா போன்றோர் அவர்கள்.

இந்த இரண்டு வகைகளிலும் கலந்து இருப்பவள், கதைக்கு நாயகி தரம் கொடுக்கப்பட்ட புவனா (புவனேசுவரி). முரண்பாட்டான பாத்திரப் படைப்பு. நல்லதும் செய்கிறாள், கெட்டதும் செய்கிறாள், ஆனால் நல்லவள்தான் என்று ஆணித்தரமாக உடனுக்குடன் வலியுறுத்துகிறார் ஆசிரியர். அவள் ஒரு புரியாத புதிர் என்று ஆசிரியரே ஓரிடத்தில் சொல்கிறார்.

‘விடிவெள்ளி’ கோபாலன், நடிகை சியாமளா, ராமநாதன் போன்றோர் கதைக்குத் தேவைப்பட்ட நிழல் கதாப்பாத்திரங்கள்.

கௌரவத் தோற்றம் போன்று, இந்தியப் பிரதமர் நேருவை ஒரு கட்டத்தில் கதைக்குள் திடீர் கதாப்பாத்திரமாக நுழைத்துள்ளார் ஆசிரியர்.

ஆசிரியர் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் மிக அருமையாகவே கையாண்டுள்ளார். தாம் சொல்ல வந்த கருத்தைச் சலிப்பு தட்டா வண்ணம், கதைமாந்தர்கள் வழிகாயாகவே சொல்லி இருக்கிறார். அவர்கள் நினைவு கூர்வதாகச் சொல்லி வரலாற்றின் முக்கிய கூற்றுகளை அழகாக இந்த தலைமுறைக்கு எடுத்துரைத்து உள்ளார். ஆயினும், முதல் சில அத்தியாயங்கள் சுவாரசியம் குன்றி இருப்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

விலைமாதுவாக புவனாவை அறிமுகப்படுத்தி, அவளைவிட கேவலமானவர்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் என சுட்டிக் காட்டி இருப்பது ஆசிரியரின் துணிச்சல். சிதம்பரம் மற்றும் எழுத்தாளர் ரத்தினத்தின் மூலமாக ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவும் வாழவும் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தம்மைப் போன்ற எழுத்தாளர்களின் பலத்தையும் சொல்லாமால் இல்லை. ‘புது வாழ்வு’ பத்திரிக்கையின் நோக்கங்கள் என பட்டியல் போட்டுக் காட்டும்போது, ஒரு பத்திரிக்கைக்கான இலக்கணத்தை மறைமுகமாக மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

புவனாவின் கதாப்பத்திரத்தில் பல மர்மங்களைப் புகுத்தி பின் கதையோட்டத்தில் மர்மங்களை உடைத்துள்ளார். ஆசிரியருக்குக் கதையின் நாயகன் சிதம்பரத்தின் மீது என்ன கோபமோ? போராட்டம் குணம் இருப்பவனாய் காட்டினாலும், அடிக்கடி அழுது கரைபவனாகக் காட்டி இருக்கிறார். மற்றவர் இடித்துரைத்தப் பின்னே அதை உணரும் அப்பாவியாய் சில இடங்களில் சித்தரிக்கப் படுகிறான். மேலும், தழுதழுத்தக் குரல் ஆங்காங்கே அவன் மட்டுமின்றி பலர் வடிவிலும் ஒலித்துள்ளது.

ஐந்நூறு ரூபாயும் அதன் மடங்குகளும் (ஐயாயிரம், ஐந்து லட்சம்) அடிக்கடி கதையில் அடிபடுகிறது. புவனாவின் வரதட்சணை, அவளது ஒரு மணிநேர ஊதியம், சலீம் தந்து உதவும் பணம் இப்படி பல இடங்களில்.

கதையில் நரசிம்மன் என்ற பாத்திர புகுத்தல், ஆசிரியரின் ஆற்றலைப் பிரமிக்க வைக்கும் ஓர் உதாரணம். காரணம், பஞ்சுவின் பத்திரிக்கை கூட்டத்துக்கு அழையா விருந்தினராய் அவரைப் புகுத்தி, ஆசிரியர் தனது கொள்கை கருத்தை அங்கேயும் தெவிட்டாமல் சொல்லி இருக்கிறார். ஆயினும், ஆசிரியர் மற்ற பல இடங்களில் வரலாற்று சம்பவங்களை வலிய திணிப்பது நெருடல்தான். சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஹிட்லர் வீழ்ச்சியை எளிய முறையில் சொல்லி இருப்பது அருமை.

உஷா, சியாமளா, பஞ்சு, குமரேசன் முதலியோர் பந்தாடப்படுவது சிரிப்புக்கு விருந்து. சிதம்பரமும் புவனாவும் சந்திக்கும் தருணங்கள் பக்குவப்பட்ட காதலின் வெளிப்பாடு.

பக்கம் 225ல், கால விரயம் – பண விரயம் இதில் ஏதாவது ஒன்றை அடைந்தே இன்னொன்றைத் தவிர்க்க முடிகிறது என்பதை எடுத்துக்காட்டோடு எதார்த்தமாகச் சொல்லி இருக்கிறார்.

பக்கம் 221ல், 22வது வரியில் நாவலின் தலைப்பை ஞாபகப் படுத்தும் வண்ணம், சலீம் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் “இந்த நாடு இப்ப எங்கே போகுது?” என்று வினா எழுப்பப்படுகிறது. இதன்வழி “எங்கே போகிறோம்?” என்ற கேள்வியானது நாட்டு மக்களைப் பார்த்து கேட்கப் படுவதாக உணரப்படுகிறது.

நீங்களும் உடனே இந்த நாவலைப் படித்து (ஏற்கனவே படித்திராத பட்சத்தில்) உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமே!

புதன், 17 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (4)

கிசு கிசு குசுலக்குமாரி

சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.


(பாகம் 4)




சாப்பிட்டக் கையோடு உடனே கிளம்பி விட திட்டம் தீட்டினான். உட்கார இடம் தேடினான். தூரத்தில் சக நடிகன் உப்புலி உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவன் மேசையில் இடம் காலியாக இருந்தது. அங்கே விரைந்தான். உப்புலியும் சுடலையும் நல்ல நண்பர்கள். சற்றுமுன் குசுலிடம் பேசிக் கொண்டிருந்ததை அவனிடம் சொன்னான்.



உப்புலிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.
“மச்சா நீ ரொம்ப பாவம்டா”

“என்னை பார்த்தா சிரிப்பா இருக்குல்ல? சிரிடா சிரி”

“அதில்லடா, இந்த மாதிரி லூசெல்லாம் எப்படிடா சினிமால சேர்த்துக்குறாங்க?”

“என்னமோ நடிச்சி சாதனை படைச்சிட்ட மாதிரி, அப்புறமா ப்ரஸ்க்கு இண்டர்வியூ வேற, என்ன கொடுமைடா இது?”

“அத விடு மச்சா, உன்னைக் கூப்பிட்டதா சொன்னியே, போவ போறியா?”

“அதான்டா, எப்படி எஸ்கேப்பு ஆவுறதுன்னு தெரியல. எடக்கு மடக்கா ஏதாச்சும் அவ பேச, அவ வருங்கால புருசன் என்னை வகுந்திடப் போறான்”

“ஐய்யோ... என்னால சிரிக்காம இருக்க முடியலடா....”

“இப்போ உன்னை சிரிக்க வேணாமுன்னு யாரு அழுதா”
சுடலைக்கு வெறுப்பை யாரிடம் காட்டுவது என்று தெரியவில்லை.

சுடலைக்கு எண்ணமெல்லாம் வரப் போகும் பேட்டியின் மீதே இருந்தது. முந்தைய பேட்டியின் போது அவள் அவனைத் தொட்டு தொட்டு பேசி, அவசியமின்றி நொடிக்கொரு முறை கெக்கபுக்கெ என சிரித்து வைத்து அவன் பெயரையும் சேர்த்து நாறடித்தாள். செவ்விகளின் போது, அவளது பெரும்பேச்சுக்கும் பெறுமை பேச்சுக்கும் அவளுக்கு அவளே நிகர். கூடுதல் மழலை கொஞ்சி குலாவும். அவள் செய்யும் “நோனா” தர வித்தைகளைக் கண்டு சிரிக்காமல் இருப்பதற்கே ஆயிரம் முனிவர்களின் பக்குவம் தேவை. வெறுமனே தன்னோடு நடிக்கும் நடிகரோடு, தான் அன்னோன்யமாக இருப்பதைப் போலவே பேசுவாள்; காட்டிக் கொள்வாள். யோசித்துப் பார்த்தால் இப்படியும் ஒருத்தியா என நமக்கே வியப்பாய் இருக்கும்.



இன்றைய பேட்டியின் போது, அந்த அரசியல்வாதியான தயாரிப்பாளர் அரிவாளோடு நின்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒரு வகையில் அவனை மெச்சியாகவே வேண்டும், இவளைக் கட்டி மேய்க்கும் பலப்பரீட்சையில் குத்தித்தற்கு. அவனும் லேசு பட்டவன் அல்லன். நடிகையைக் கரம் பிடித்தால் அரசியலில் எளிதாக வெற்றி காணலாம் என்ற குருட்டு நம்பிக்கை அவனுக்கு.


நண்பன் உப்புலி இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை. சிரித்துக் கொண்டே எழுந்தான்.
“இருடா மச்சா, ஊடான் சம்பால் ரொம்ப நல்லாருக்கு, போட்டுட்டு வந்திடுறேன்”



“டேய் ஊடான் அளவா தின்னுடா... இப்பவே அங்க இங்க சொறிஞ்சிக்கிட்டு இருக்கே... இப்படியே போனா, உன்னை சொறி சிரங்கு விளம்பரத்துக்குத்தான் கூப்பிடுவாங்க... எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...”


“ஏன்டா சொல்ல மாட்டே? உனக்கு சினிமால அடிக்கடி வாய்ப்பு கொடுக்கிற குசுலக்குமாரி மாதிரி எனக்கு ஏதாவது ஒரு அட்டு பிகரு மாட்டாமலா போயிடும்?”




“மச்சா, அந்த நரக வேதனை உனக்கு வேணாம்டா. அவ வளைய சொல்லுற இடத்துல வளைஞ்சாகனும், இதோ இப்ப இந்த பேட்டியிலேந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன் பாரு... இன்னும் இந்தியன் படத்துல கமல் நாடா கோக்குற வேலை மட்டும் தான் பாக்கி”




“அடப்போடா, உனக்கு சாமர்த்தியம் பத்தலை. அதைவிடு, உனக்கு ஏதாவது வேணுமா?” என தட்டைக் காட்டி கேட்டான்.




“ஒன்னும் வேணாம்டா சாமி, தட்டுல இருக்கிறத முடிச்சிட்டு முதல்ல வீடு போய் சேரணும்.”




சுடலையின் தட்டும் காலியாகி விட்டது. தட்டில் எஞ்சி இருந்த ஈரமும் காய ஆரம்பித்துவிட்டது. உணவு எடுக்கச் சென்ற உப்புலி மட்டும் திரும்பி வரவில்லை. நேரமாவதால் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட நினைத்தான். அவன் கைப்பேசிக்கு இணைப்பு கிட்டியது, ஆனால் அவன் எடுக்கவில்லை. சுடலைக்குச் சந்தேகம் வலுத்தது.





(கிசுகிசு தொடரும்)

செவ்வாய், 16 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (3)

கிசு கிசு குசுலக்குமாரி
"ஹேய் ஷுடால்"
காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.
(பாகம் 3)



சுடலையின் முதுகில் ஒரு தட்டு தட்டி,
“ஷுடால்... எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்?” என்றாள். .


ஐய்யயோ, இதை யாராவது பார்த்து தொலைத்தால் என்ன ஆவது, முதல்லயே திரும்பி பார்த்திருக்கனும், உனக்கு இது தேவையாடா? சுடலையின் சுயத்தின் முனகல் அது.


“அட ஆமாவா? சத்தத்துல கேட்கலை. அதென்ன ஷுடால், சுடலைன்னு கூட்ப்பிடுங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்?”


“ஷுடால் நல்லாத்தானே இருக்கு, கிளாமரா. இ..இ..இ..இ.. சாப்டாச்சா? எப்படி? நல்லாருக்கா?”


“என்ன கேள்வி இது, இன்னும் உணவு எடுக்கவே இல்லையே”


சுடலை என்ற அழகான பெயரை மாற்றி உச்சரித்த போதே அவனுக்கு மண்டையில் மணி அடித்தாற் போல் இருந்தது. மேற்கொண்டு இப்படி ஏரணமே இல்லாத ஒரு கேள்வி அவளுக்குத் தேவைதானா? சுடலையின் நேர்பதிலுக்கு வலிந்து சிரித்துக் கொண்டாள்.


“ஈ..இ.. ஈ.. இ...”
ஈயாடவில்லை.


“ அனேகமா நல்லாத்தான் இருக்கனும்”


“ எப்படி சொல்றிங்க?”


“ வாசம் மூக்கைத் துளைக்குதே”


“ ஆமாவா, நாய் மாதிரி உங்களுக்கு மோப்ப சக்தி வேற இருக்கோ”


அவள் செய்த ஆசியத்துக்கு அவளைத் தவிர வேறும் யாரும் சிரித்திருக்க வாய்ப்பில்லை. கூடவே ஒரு குண்டையும் போட்டாள்.


“சாப்பிட்டு உடனே கிளம்பிடாதிங்க, ஷுடால்”


“அது ஏன்?”


போச்சுடா, இந்த லூசு வில்லங்கமா ஏதாச்சும் செய்யறதுக்குள்ள, தப்பிச்சிடனும் எனத் தனக்குத் தானெ சொல்லிக் கொண்டான்.


“பத்திரிக்கை பேட்டி இருக்கு, நீங்களும் கலந்துக்கனும்”


“கண்டிப்பா. கலந்துக்கனும்ன்னு ஆசை தான், ஆனால்...”


“ஆனா ஊனான்னா இத ஒன்னு சொல்லிடுவீங்களே, என்ன ஆனா?”.


அப்போது குசுலின் கைப்பேசி அலற, அவள் பரபரப்பாகி விட்டாள்.
“எஸ் குஸ் மீ, வான் மினீட் ஆ...,” என்று அரை குறை ஆங்கிலத்தில் மேற்கத்திய நாகரிகத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.


சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.

(கிசுகிசு தொடரும்)

திங்கள், 15 டிசம்பர், 2008

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு




14 டிசம்பர் 2008 - மலேசிய தமிழ் வலைப்பதிவர் வரலாற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நாளாகவே இனி வருங்காலங்களில் உணரப்படும். தலைநகரில் செந்தூல் என்ற சிற்றூரில் முதலாவது மலேசிய தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடைப்பெற்றது.



கெடாய் காரி கெப்பாலா ஈக்கான் (மீன் தலைக்கறி கடை) என்ற உணவகத்தில் மதிய நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. இடத்தை தேடிப் பிடிக்கவே படாத பாடு பட்டோம், எங்களில் பலர். நான் பினாங்கில் இருந்து பேருந்தில் சென்று புடுராயா பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அங்கே விக்னேசும் டாக்டர் சிந்தோக்கும் காத்துக் கொண்டிருந்தனர். மெது உணவு அருந்திவிட்டு செந்தூலுக்கு எல்.ஆர்.டீ மூலம் சென்றோம். அங்கே இனியவள் புனிதாவும் உணவகத்தைத் தேடும் வேட்டையில் இணைந்துக் கொண்டார். மழை தூற, பக்கத்தில் இருந்த ஓர் உணவகத்தில் தஞ்சம் புகுந்தோம். அந்த உணவகம்தான் “மீன் தலைக்கறி கடை” என பின்பு உறுதி செய்யப்பட்டது.

னி விவரங்கள் செய்தி வடிவில்:


அங்கே எழுத்தாளரும் கவிஞருமான திரு ஏ.எஸ்.பிரான்சிஸ் காத்துக் கொண்டிருந்தார். ஓர் அகண்ட மேசையில் அமர்ந்தோம். ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வந்து சேர்ந்தனர். இடைப்பட்ட நேரத்தில், கவிஞர் பிரான்சிஸ் தமது “சாசனம்” மற்றும் “மக்கள் சக்தி” புத்தகங்களை எங்களிடம் விநியோகித்தார். ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ள அறிமுக சுற்று நடந்தது. பள்ளிகளில் ஒரியேண்டேஷன் என்பார்களே... அது போல
உணவகம் என்றாலே கூச்சலுக்கும் இரைச்சலுக்கும் பஞ்சம் இருக்காது. அங்கேயும் அதே நிலைதான். ஆதலால், அறிமுக சுற்றில் எல்லார் பேசியதையும் ஒரு குத்து மதிப்பாகக் கேட்டு தான் இங்கே எழுதி உள்ளேன், பொறுத்தருள்க, சந்திப்பில் கலந்துக் கொண்ட நண்பர்கள் - திருத்த தயாராய் இருங்கள்.


முதலில் கவிஞர் பிரான்சிஸ் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார். இதுவரை இருபது புத்தகங்கள் எழுதியுள்ளார். அண்மையில்தான் இணைய வலைப்பூவில் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்தார். “கயல்விழி” இவரது கைவண்ணத்தில் மலரும் வலைப்பூ.


அவரை அடுத்து திரு மு.வேலனின் அறிமுகம். “அரங்கேற்றம்” இவரது பதிவேற்றம். ஆக்டோபரில் பிள்ளையார் சுழியிட்டு இன்றுவரை எழுதி வருகிறார். பொதுவாக தன்னைச் சுற்றி நிகழ்வதை மையமாக வைத்தே தனது வலைப்பூ பின்னப் படுவதாகச் சொன்னார். பன்னிரண்டு காலமாக இணையத்தில் வெறும் வாசகராகவே இருந்தவர். வலைப் பதிவு மக்களிடையே நல்ல கருத்து பரிமாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மூன்றாவது அறிமுக நண்பர், திரு ஜேஷாண்ட் (பெயர் சரியாக எழுதப்பட்டுள்ளதா என நண்பர்களே, சரிபாருங்கள்). இவர் இன்னும் வலைப்பூ தொடுக்காத நண்பர், விரைவில் துவங்குவார். “இங்கே எதுக்கு வந்திருக்கேன்ன்னு எனக்கே தெரியலை” என்று சிரிக்காமல் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


இவரை அடுத்து குமாரி பவானிஸ்-இன் அறிமுகம்“கனைகள்” என்ற ஒரு மாத வயதான வலைப்பூவின் உரிமையாளர். கவிதைகள் நிறைய எழுதுவாராம். தன்னை வலை உலகத்துக்கு இட்டு சென்ற வேலனை அப்போது நினைவு கூர்ந்தார். பலருக்கு வலைப்பதிவைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று வருத்தப் பட்டார். பதிவர்களின் மொழி திறன் தன்னைப் பிரமிக்க வைப்பதாகச் சொன்னார்.


குமாரி இனியவள் புனிதா என்னைப் போலவே அமைதியாகவே இருந்தவரில் ஒருவர். ஈராயிரத்தாறில் இருந்து இவர் எழுதி வரும் வலைப்பூ – “ஜில்லென்று ஒரு மலேசியா" . இவர் ஓர் அரசாங்க அதிகாரி, ஆக நண்பர்களே சற்று கவனம்...


அடுத்து திரு அனந்தனின் அறிமுகம். என்னைப் பற்றி என்ன சொல்வது? வெறும் நான்கு மாதமாகத்தான் “முடிவிலானின் எழுத்துக்கள்” என்ற வலைப்பூவின் மூலம் எழுதி வருகிறேன். சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.


என்னை அடுத்து, திரு ஜி.எஸ்.ஷான் அவர்களின் அறிமுகம். இன்னும் வலைப்பதிவு ஏற்படுத்திக் கொள்ளாதவர். தன்னை ஓர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். திரு சதீசின் மூலம் இந்த சந்திப்பு தெரிய வந்ததாகச் சொன்னார். வலைப்பதிவில் காலடி வைக்க நிறைய உழைக்க வேண்டும் போல என புன்னகையோடு சொன்னார்.


அடுத்த அறிமுகம், வந்தவர்களில் பலருக்கு ஏற்கனவே அறிமுகம். இன்னும் சொல்லப் போனால் இந்த சந்திப்பின் காந்தம், திரு விக்கினேஷ்வரன் அடைக்கலம். “வாழ்க்கை பயணம்” இவரின் வலைப்பூ. 2006ல் இருந்து வாசிக்கத் துவங்கியவர் இவ்வாண்டு எழுதத் துவங்கி உள்ளார். இணையத் தாக்கம் இளையோரிடம் குறைந்துக் காணப்படுவதாகத் தெரிவித்தார். சிங்கை வலைப்பதிவர்களின் கன எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டினார். நமது வலைப்பதிவர்களின் கருத்து சுதந்திரத்தைப் பற்றியும் கேள்வி எழுப்பினார்.


அடுத்த அறிமுகம் டாக்டர் சிந்தோக். தனக்கென தனி வலைப்பதிவு ஒன்றைப் பின்னாமல் இருந்தாலும், நிறைய வலைப்பதிவை இன்றுவரை வாசித்து வருவதாகவும், வலைப்பூக்களுக்கு மறுமொழி இடுவதில்தான் தனக்கு விருப்பம் அதிகம் என சொன்னார். 2003 துவங்கி இவரது இணைய வலைப்பூ வாசிப்பு பழக்கம் இன்றுவரை நீடித்து வருகிறது. இணையத்தைப் பற்றியும் இணையத்தில் தமிழ் ஊடுருவல் பற்றியும் நிறையவே சொன்னார். “ஏன் நீங்கள் ஒரு தனி வலைப்பூ பின்னக்கூடாது?” - சபையில் எழுந்தக் கேள்விக்கு “சேம்பேறித்தனம்தான் காரணம்” என நகைச்சுவையோடு சமாளித்தார். வலைப் பதிவாளர்களுக்கு ஒரு முன்னோடி டாக்டர் சிந்தோக் என வர்ணித்தார், விக்னேஷ்.


திரு குமரன் மாரிமுத்து வேறொரு நிகழ்வில் கலந்துக் கொண்டு, கிட்டிய நேரத்தில் நம்மோடு இணைந்தார். விரைவில் வலைப்பூ துவங்க ஆவலாய் இருப்பதாய் சொன்னார். இவர் முன்பு வானொலியில் பேசி உள்ளதாகவும் தெரிவித்தார். நாளேடுகளுக்கு தான் அனுப்பும் எழுத்துக்கள் துண்டாடப் படுவதாகவும், இணையமே இனி நடுநிலை ஊடகம் என கோடி காட்டினார்.


திரு நேசா, ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதுபவர். கூடிய விரைவில் தமிழிலும் எழுதவுள்ளார். தமிழில் தட்டச்சு செய்வதைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டார், இங்கே கூடி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாய் தெரிவித்தார்.


சந்திப்பில் சஞ்சிகை வெளியீடு பற்றி பேசப்பட்டது. ஆண்டுக்கு இரு மலர்கள் என மு.வேலன் முன்மொழிந்தார். அச்சு இதழ்கள் எப்படி முறைப்படி செய்வது என விக்னேஷ், கவிஞர் பிரான்சிஸின் ஆலோசனையை நாடினார். பதிவர்கள் ஒருமித்த நோக்கத்தோடு எழுத வேண்டும் என பவானிஸ் முன்மொழிந்தார். அவ்வாறு செய்வதால், எழுத்தாளர் சுதந்திரம் மறித்துப் போகலாம் என விக்கினேஷ் தெரிவித்தார். பொது மக்களிடையே பதிவர் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என பவானிஸ் மேலும் கருத்து தெரிவித்தார். டாக்டர் சிந்தோக் பேசுகையில் இணையமே இனி மக்களுக்கு சிறந்த ஊடகம் என் ஆணித்தரமாகச் சொன்னார்.


முக்கிய அலுவல் இருப்பதால் பவானிஸ், முவேலன் மற்றும் ஜேஷாண்ட் விடைபெற்றனர்.


விக்னேஷும் டாக்டர் சிந்தோக்கும் வலைப்பூ எப்படி பதிவது, எவ்வாறு பின்னுவது போன்ற சூட்சமங்களைப் புதியவர்களுக்காக கற்று கொடுத்தனர்.
சில நேரம் கழித்து, எங்கே எங்கே என தேடப்பட்ட திரு மூர்த்தி வந்தார். கலகலப்பாக பேசினார். அவர் தான் அந்த சந்திப்புக்கான இடத்தை தேர்ந்தெடுத்தவர். அவர் அன்றைய இறுதி மற்றும் பன்னிரண்டாவது அறிமுகம். சித்த வைத்தியர். விக்னேஷின் தீவிர ரசிகர் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.


அடுத்த சந்திப்பு பற்றி பேசப்பட்டது. மேலும் சில நிமிடங்கள் பேசினோம், புகைப் படம் எடுத்துக் கொண்டோம். பின்பு மகிழ்ச்சியுடன் கிளம்பினோம்.


மேலும் விரிவான செய்திகளைப் பெற இதர நண்பர்களின் வலைப்பூக்களை வலம் வரவும்.


இப்போது கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்!

சனி, 13 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (2)


கிசு கிசு குசுலக்குமாரி


... ... ... குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.
குசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.

(பாகம் 2)

ரையில் கால் படாமல் தான் குசுலக்குமாரி விழாவில் உலாவிக் கொண்டிருந்தாள். அரைசாண் உயரத்தில் தூக்கு சப்பாத்து அணிந்து, நடக்க முடியாமால் நடந்துக் கொண்டிருந்தாள். அனைவருக்கும் அன்றைய வேடிக்கை அவளின்றி வேறு யார்? யாருமே அவளைக் கண்டுக் கொள்ளா விட்டாலும், வலிய சென்று பேசி, தான் பரபரப்பாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள தயங்கவில்லை. அப்படி யாருமே கிடைக்காத போது என்ன செய்திருப்பாள்? ஆம், அதே தான், கையில் இருக்கும் கைப்பேசியைக் காதோரம் வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் நண்பர்களை வழக்கம் போல வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.


உணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நடிகன் சுடலையைப் பார்த்து விட்டாள். சுடலையும் அவளைத் தூரத்திலே பார்த்து விட்டு பார்க்காதது போல் திரும்பிக் கொண்டான். குசுலக்குமாரி அவனை நோக்கித்தான் நடக்கிறாள்.


வாழ்த்து சொல்லி விட்டு கடமைக்குப் பரிசையும் கொடுத்துவிட்டு அப்பவே தப்பித்தோம் பிழைத்தோம் என நழுவினான் சுடலை. இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதாய் பத்திரிக்கைகளில் வெளிவந்த கிசுகிசுக்களைக் கண்டு அரசியல்வாதியின் ஆட்கள் அவனைப் பலமுறை மிரட்டி உள்ளனர். ஒருமுறை அவர்கள், தாட்கள் வெட்டும் கத்தியோடு அவனைச் சீவ வந்தனர். ஏதோ பேசி தப்பித்தான் நடிகன். இப்போது ஞாபகத்தில் அதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. கையில் அவன் ஏந்திக் கொண்டிருந்த தாள் தட்டும் அவனோடு சேர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.


சுடலை செய்த ஒரே பாவம், குசுலக்குமாரியோடு "காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்" என்ற இருபத்து நான்கு அத்தியாயங்களைக் கொண்ட ஓர் அறுவை நாடகத்தில் நடித்து தொலைத்ததுதான். குசுலைக் காட்டிலும் சுடலைக்கு நடிப்பு நன்றாகவே வரும். பொழிவான முகத் தோற்றம். திடமான உடல். கம்பீரமான குரல். பழக இனிமையானவன். சுருங்கச் சொன்னால், ரசிகன்களைக் காட்டிலும் ரசிகைகளின் எண்ணிக்கை தான் அதிகம்.

பகட்டு இல்லாத மனிதன். முக்கியமாக, மணமாகாத நடிகர்களில் இவனும் ஒருவன். "காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்" நாடகத்துக்குப் பிறகு சுடலையின் நிசக் காதல் கதையும் கண்ணீரில் மூழ்கியது என்பது பிரிதொரு செய்தி. அது குசுலக்குமாரிக்கு நல்ல வசதியாகி போயிற்று. படப்பிடிப்பு இடங்களில் சுடலையுடன் பல்லி போல ஒட்டிக் கொள்வாள். சுடலை விலகிச் சென்றாலும் விடமாட்டாள். காரணம், கிசுகிசுக்கள் மூலம் தனக்கு இன்னும் பிரபலம் கிட்டும் என்பதில் குசுலக்குமாரிக்கு அசைகக்க முடியா நம்பிக்கை. ஊடகங்களில் வரும் கிசுகிசுக்களைச் சேகரித்து தருவதற்கே ஒருவரை வேலைக்குச் சேர்த்துள்ளாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

"ஹேய் ஷுடால்"

காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.

(கிசுகிசு தொடரும்)

வெள்ளி, 12 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (1)

* பின்வரும் சிறுகதையும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் கற்பனை உலகின் பிம்பங்களே. யாரினது மனத்தைப் புண்செய்யும் நோக்கில் இது புனையப் படவில்லை. நன்றி.


கிசு கிசு குசுலக்குமாரி

ந்தி மூட்டையக் கட்ட, இருள் கடைத்திறந்த நேரம். கூரை துறந்த திறந்த வெளி. சற்றுமுன் தூறிய மழையால் சொத சொதவென இருந்த புட்தரை. கண்களைக் கூசும் மின்விளக்குகள். செவிகளைச் செவிடாக்கும் ஒலிப் பெருக்கிகள். அதிலிருந்து வந்த கதறல் இசை. அதையும் மிஞ்சும் வண்ணம் கூடியிருந்த மக்களின் அரட்டையும் கூச்சலும்.


பிரபலங்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்கள் கூடி களித்துக் கொண்டிருந்தனர். நாட்டின் இன்றைய பிரபலமான நடிகையும் ஓர் அரசியல்வாதிக்குக் கழுத்தை நீட்ட போகும் பலிகடாவுமான குமாரி குசுலக்குமாரிக்கு இவ்வாண்டின் மூன்றாவது பிறந்தநாள் விழா. ஒரே ஆண்டில் அடிக்கடி பிறந்தநாள் கொண்டாடினாலும், நடிக்க வந்து பத்தாண்டுகளில் அதே இருபத்தொன்று வயதைக் கடக்கவில்லையாம்.


கேக்கை வெட்டினாள், அரசியவாதிக்கு ஊட்டினாள். குமாரி குசுலக்குமாரியோடு நடித்த நடிகர்களும், கல்லையும் நடிக்க வைக்க முடியும் என நிரூபித்த இயக்குனர்களும், அவளைத் திரையில் அழகாய் காட்ட முயன்று தோற்றுப்போன ஒளிப்பதிவாளர்களும், அத்தோல்வியைத் தோள் கொடுத்து சுமந்த ஒப்பனையாளர்களும் இன்ன பிற திரைப்பட கலைஞர்களும் அவளோடு இணைந்து புகைப் படம் எடுத்துக் கொண்டனர். மேலே சொன்ன பட்டியலில் தயாரிப்பாளரைத் தனியாக குறிப்பிட தேவையில்லை. அந்த அரசியவாதியைத் தவிர வேறு யார் இவளை நம்பி பணம் முதலீடு செய்திருக்க போகிறார்கள்?

நடிகை என்றதும் அவள் திரைப்பட நடிகை என்று நீங்கள் தவறான எண்ணம் கொண்டிருக்கலாம். அவள் உள்நாட்டு தொலைக்காட்சி நாடக நடிகை. ஆயினும், புகழ் உச்சியில் இருக்கும் திரை நட்சத்திரத்தின் அத்துணை பந்தாவும் அலட்டலும் இவளிடம் காணலாம்.

மக்களிடம் தனது பெயர் எளிதாக சென்றடைய, குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.

குசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.


(கிசுகிசு தொடரும்)

வியாழன், 27 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (7)


எவ்வளவோ தடுக்க முயன்றும், உரைநடையின் இயல்பு தன்மை சுணங்காமல் இருக்க சேர்த்துக் கொள்ளப்பட்ட சில வேற்றுமொழி சொற்களுக்கான தமிழாக்கம் கீழே: (பாகம் 6 மற்றும் பாகம் 7)
போட்டோ - நிழற்படம்
ஷீட் – ச்சீ, எச்சம்
லவ்- காதல், அன்பு
வாவ் – பூரிப்பை உணர்த்தும் ஓர் ஓசை, அடேங்கப்பா
குட் - நன்று, சரி
செமினார் – சொற்பொழிவு
போன் – (தொலை)பேசி, அழைப்பு
குட் லக் - நல்வாழ்த்து
மோட்டார் வண்டிஇரு சக்கர (இயந்திர) வண்டி

வினாக்களோடு சில கனாக்கள் (7)



துவரை மனதுக்குள் பறந்துக் கொண்டிருந்த ஆயிரம் பட்டாம் பூச்சிகள், நொடியில் காணாமல் போய் விட்டன. ஒருவேளை அந்த பட்டாம் பூச்சி பூங்காவுக்குள் பறந்து சென்று கலந்து விட்டனவோ. இதற்கு முன் இருந்த குதூகலம் என்னிடம் இப்போது இல்லை என்பது உண்மை. எனது இத்தனை நாள் கனவு வெறும் கனவாகவே இருந்து விடுமா? இந்த வினாவுக்கு யார் பதில் சொல்வது? கடவுளா? கலிகாலத்தில் அவர் எப்படி தோன்றுவார்?

“நம்மள பத்தியும் அவருக்குத் தெரியும், சொல்லி இருக்கேன்” நல்லவள் பேசினாள்.

“யாரு, கடவுளுக்கா”

“அட இல்லப்பா, வெய்யிலைச் சொன்னேன்”

“என்ன சொல்லுற, நீ என்னை இங்க வந்து சந்திக்கிறது... தெரியுமா அவருக்கு?”
“அவருக்குத் தெரியாமலா? இன்னும் சொல்லப் போனால், உன்னையும் என்னையும் ரொம்பவே பெருமையா நினைக்கிறாரு. நீயே சொல்லு எத்தனை பேரு, காதல் முறிஞ்சாலும் தொடர்ந்து நண்பர்களாய் இருக்காங்க, நம்மள மாதிரி? அதை நினைச்சி ரொம்பவே பூரிச்சு போவாரு”

சுளீரென இருந்தது எனக்கு. இதற்கு இவள் என்னைக் கன்னத்தில் நான்கு அறை விட்டிருக்கலாம்.

“நம்மள மாதிரி எத்தனை பேரு இருக்காங்கன்னு தெரியல. ஆனா, நமது பழைய காதல் தெரிஞ்சும் என்னை சந்திக்க அனுமதி கொடுத்திருக்காரே... இந்த மாதிரி மனுசங்கள பார்க்கிறது தான் அரிது”

மனம் கசப்பில் வாடி போய் இருந்தாலும், அந்த நிதர்சனத்தை நான் ஒப்புக்கொண்டுத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நேரம் பட்டாம் பூச்சிகளோடு நேரத்தைக் கழித்தோம்.
இருட்டுவதற்குள் அவளை விடுதியில் பாதுகாப்பாக விட்டு, நான் வீடு திரும்ப முடிவு செய்தேன். விடுதியை நெருங்க நெருங்க உள்ளம் குமுறியது. நெஞ்சத்தின் எடை கூடியதாய் உணர்வு. வண்டியை விட்டு இறங்கினாள். “எனை விட்டு போகாதே” உதட்டோடே நின்றது வார்த்தை.

“ஹப்பா, நல்...லா இருந்திச்சுல. இந்த மாதிரி சந்தோசமா இருந்ததே இல்ல மறவ். ரொம்ப ரொம்ப நன்றி”

“ஏய், எதுக்கு”

“சுத்திக் காட்டியதுக்கு... அப்படின்னு சொல்லமாட்டேன். நமக்குள்ள இதுக்கு எல்லாம் நன்றி சொல்லிக்கலாமா? நன்றி சொன்னது, நீ இன்னைக்கு எல்லா ப்ளானையும் எனக்காக தூக்கிப் போட்டுட்டு என்னோடு வந்ததுக்கு”

“ச்சே... அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல”

“இல்லப்பா, நீ இல்லாட்டி இன்னைக்கு நான் திண்டாடி போய் இருப்பேன்”

“சரி நேரமாகுது, கிளம்புறேன், பத்திரமா இரு. ஏதாவது உதவின்னா உடனே எனக்கு போன் செய்யு”

“உன்னைச் சந்திச்சதுல எனக்கு...”

“உனக்கு?”

“எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம். நீ ரொம்ப நல்லவன்பா”

அடிப்பாவி, அவ்வளவு தானா? வேறு ஏதும் சொல்வாள் என எதிர்பார்த்தேன்; எல்லாம் ஒரு நப்பாசை தான்.

“அப்படியா? இருக்கட்டும். சனிக்கிழமை எப்படி திரும்பி போவ?”

“ஏன் நீ வர மாட்டியா? வந்தா நல்லாருக்கும். இல்லாட்டிக் கூட பரவா இல்லை. கூட பரீட்சை எழுதுற நண்பர்கள் இருக்காங்கல்ல, அவங்க கூட போயிடுவேன். ஆனா, நீ வந்தா நல்லாருக்கும்.”

“பாக்குறேன், செமினார் இல்லாட்டி அவசியம் வரேன். இந்த நாள மறக்க மாட்டேன். குட் லக் - உன் தேர்வுக்கும், உன் எதிர்காலத்துக்கும்”

சொல்லிக் கொண்டே எனது மோட்டார் நகர்ந்தது.


அவள் புன்முறுவலோடு கைகளை அசைத்து வழி அனுப்பி வைத்தாள். அவள் முகத்தில் ஓர் இனம் புரியா சோகம் தெரிந்தது. எதனால்? அட, எதுவாய் இருப்பின் எனக்கென்ன? “என்ன இருந்தப்போதும் அவள் எனதில்லையே, மறந்து போ என் மனமே...” என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.



எல்லாம் சரி, சனிக்கிழமை மீண்டும் அவளைச் சந்தித்தேனா இல்லையா எனபது தானே உங்கள் வினா? அதே குழப்பம் தான் எனக்கும். நாளை விடிந்தால் சனிக்கிழமை. இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன், போகலாமா வேண்டாமா என்று.
நீங்கள் சொல்லுங்கள், நான் போகட்டுமா?

(கனாக்கள் முற்றும்)

வினாக்களோடு சில கனாக்கள் (6)


வினாக்களோடு சில கனாக்கள் (6)
ண்ணத்துப் பூச்சி பூங்காவில் எனக்கு காத்துக் கொண்டிருந்த அதிர்ச்சியைப் பற்றி இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும். அப்பூங்காவுக்கு முன்னம் நாங்கள் சென்ற தலம், பத்து பெர்ரிங்கி கடற்கரை. கடல் அலைகளின் ஓசை, யாரும் இல்லா ரம்மியமான தனிமை, காலை வருடி சென்ற உப்புநீர், உலர்ந்தப் பின் உணரப்பட்ட குளிர் போன்றவை இதமாக இருந்தன. அவளும் அதை என்னோடு சேர்ந்து ரசித்தது, இன்பத்தை இரட்டித்தது.
மனதுக்குள் இதுவரை பூட்டி வைத்திருந்த பல வினாக்களுக்கு அவளிடம் விடை தேட துடித்தது உள்ளம். காதலிக்கும் போது அவளைப் பற்றி நான் கண்ட கனவுகள் மெய்ப்படுவது போல தோன்றியது. என்னையே அறியாமல் அவளை இப்பொழுது எனது சொந்தமாகவே உணரத் தொடங்கி விட்டேன். துளியும் அவள் எனக்கு அன்னியமாய்த் தெரியவில்லை. இந்த உணர்வானது சரியா தவறா என யோசிக்க விருப்பமுமில்லை.


இன்று என்னோடு ஊரெல்லாம் விரும்பி சுற்றி இருக்கிறாள். இப்போது என்னுடன் கடற்கரைக்குக் கூட வந்துள்ளாள். என் மீது அவளுக்கு ஈர்ப்பு இல்லாமலா இருக்கும்? அங்கே என்னுடன் ஓடிப் பிடித்து விளையாடியது, நெருந்தூரம் நடந்தது, தலையில் தட்டி நகைத்தது, சிப்பிகளைக் கொண்டு ஏதோ செய்து எனக்கு பரிசு அளித்தது - எனது மனக்கோட்டையை வலுப்படுத்தின.

எதிர்காலத்தை ஒட்டி அவளிடம் பேச எண்ணினேன்.

“என்னை இன்னமும் காதலிக்கிறாயா?, என்னோடு சேர்ந்து வாழ சம்மதமா? முன்பு என்னை எதற்காக வேண்டாமென ஒதுக்கினாயோ, அதை நான் இப்போது விட்டுக் கொடுத்தால், என்னை மணந்துக் கொள்வாயா?, கோவம் கொஞ்சம் அவ்வப்போது வரும், ஆனால் நல்லவன். கொஞ்சம் சுயநலம். அம்மா சொல்லி திட்டுவாங்க. நீயே நானாகியப் பிறகு, சுயநலம் என்பது நம்மைப் பற்றித்தானே? இதில் என்ன தவறு? உன் முகத்தைப் பார்த்தப் பின்பே இனி எனது ஒவ்வொரு விடியலும் விடியனும், இப்படி என் ஆசை, கனவு எல்லாம் பலிக்குமா?”எனது வினாக்கள் இத்தோடு மட்டும் நிற்கவில்லை, இன்னும் இருக்கின்றன. அதை இங்கே விரிவாக எழுத தயக்கமாய் உள்ளது.

m

மூச்சை இழுத்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பேச்செடுக்க முற்பட்டேன். அத்தருணம் ஒரு முக்கியமான கேள்வி சிந்தையை எட்டியது. “அவளது அந்த புதிய காதலின் நிலைமை என்ன? அவள் இன்னும் அவனோடுதான் உள்ளாளா?”இது தெரியாமல் நான் ஏதாவது எடக்கு மடக்காகப் பேசி தொலைத்தால் என்ன ஆவது? மூச்சை உள்வாங்கிக் கொண்டேன். பொறுமை உடையான் புவி ஆள்வான் என்பது முதுமொழி. பூமி வேண்டாம், என் பொறுமையானது எழில்விழியை ஆள உதவுமாயின் அதுவே போதும்.


அங்கிருந்து கிளம்பினோம். 20 நிமிடங்கள். வண்ணத்துப் பூச்சி பூங்காவை அடைந்தோம். நுழைவுச் சீட்டு தான்தான் வாங்குவேன் என விடாப்பிடி செய்தாள். விட்டு விட்டேன். பணம் எடுக்க அவள் தனது பணப்பையைத் திறக்க, அதிர்ச்சி அதனுள்ளே தான் காத்திருக்கிறது எனக்கு மட்டும் தெரியுமா என்ன? அவள் புகைப் படத்துக்கு அருகே ஓர் ஆடவனின் புகைப் படமும் இருப்பதை கண்டேன். கண்டும் காணாமல் இருக்க முயன்றேன். நல்லவள் நான் பார்க்கும் படி காண்பித்து,


“மறவ், இங்கே பாரேன். இந்த போட்டோல இருப்பது யாருன்னு சொல்லு,”என்றாள்.
வழியில் செல்லும் ஓணானை மடியில் கட்டாமல் விட மாட்டாள் போலிருக்கே. அசடாய் சிரித்துக் கொண்டு,

“உங்கப்பாவோட சிறு வயது போட்டோவா? நல்லா இருக்காரு”

“ஷீட்... கெக்கபுக்க கெக்கபுக்க”சிரித்தாள்

“ஷீட்டா? எங்கே?”

“ஏய் விளையாடாதேப்பா, இதுதான் வெய்யில்”

“வெய்யிலா? எது, மத்தியானம் வானத்துல இருக்குமே அதுவா? என்னாலா சொல்லுற”

“ஐயோ படுத்துறானே... இவர் தான் வெய்யில்முருகன். சொல்லி இருக்கேனே... மறந்துட்டியா?”
எச்சில் தொண்டைக்கும் அடியில் சென்று மறைந்துக் கொண்டது. நாக்கு வரண்டதால், என் பேச்சிலும் தடுமாற்றம் நிலவியது. காட்டிக் கொள்ளவில்லை நான்.

“ஓகோ, அவரா? நல்லா இருக்காரு. இன்னுமா அவரை லவ் பண்ணுற?”விளையாட்டாய் கேட்பது போன்று வினையமாகவே கேட்டேன்.

“ஏய், என்ன கேள்வி இது? படிப்பு முடிஞ்சதும் நிச்சயதார்த்தம் வெச்சிக்கலாமுன்னு வீட்டுல சொல்லி இருக்காங்க”

“வாவ்... குட் குட்”அரை மனதுக் கூட இல்லாமல் சொல்லி வைத்தேன்.

(கனாக்கள் தொடரும்)

புதன், 26 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (5)

வினாக்களோடு சில கனாக்கள் (5)



பினாங்கிற்கு மோட்டார் வண்டியில் செல்வதாக முடிவு செய்தோம். இருசக்கர வண்டி என்பதால், பின்னே அமர்ந்து வர தயங்குவாள் என அஞ்சினேன். அவள் அதைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

30 நிமிட பயணம். வழக்கமாக, ரொம்ப நேரம் பயணிப்பது போல தோன்றும். ஆனால், அவள் அருகில் இருந்ததால் என்னவோ நேரம் நொடிகளுக்குள் சுருங்கியது. 30 நிமிடம் என்பது 30 வினாடிகள் போல இருந்தது.
(கவிதை போன்ற பொய்தான்... கண்டுக்காதிங்க)

சாலையில் பேசிக் கொண்டேதான் போனோம். ஒரே ஒரு முறை மட்டும் அவள் என் தோள்பட்டையைப் பற்றிக் கொண்டாள், தற்காப்பு கருதி. முதலில் வித்தியாசமாக இருந்தது. வித்தியாசமாக இருந்தது என்று நான் சொன்னதற்குப் பிடிக்கவில்லை என்று பொருட்படாது. ஆயினும், அதை ரசித்து ஏற்க மனம் தயங்கியது. அவள் என் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். தற்பெருமை தலைக்கேறியது.
பினாங்கு பால நெடுஞ்சாலையின் மீது அதிகப்படியான கோபம், இவ்வளவு சீக்கிரம் கரையைக் கடக்கச் செய்ததால். அங்கிருந்து அந்த விடுதிக்குச் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. தேடிப் பிடித்து விட்டோம். மையத்தில் பதிவும் செய்தாகிவிட்டது.

“தேர்வு எப்போ?”

“நாளைக்குக் காலையில”

“அது வரைக்கும் என்ன செய்வே? படிக்கனுமோ...”

“படிக்கிறதா? இது ரொம்ப சுலபமான தேர்வுதான், ஏற்கனவே தயார் பண்ணியாச்சு.”

“ஹ்ம்ம்”

“ஏன், நீ பினாங்கைச் சுத்தி காட்ட மாட்டியா?”

“காட்டலாமே, எப்போ?”

பகட்டாக சொல்லிவிட்டேன் - ஏதோ பினாங்கில் எல்லா இடங்களும் பரிட்சயம் போன்று! ஆடிக்கு ஒரு முறை அமாவசைக்கு ஒரு முறை தான் அக்கரைப் பக்கமே எட்டிப் பார்ப்பேன்.

“இப்போ தான்பா… நேரத்தைக் கடத்த வேண்டாமா?”



மோட்டார் பிறகு பர்மா சாலை, தஞ்சோங் பூங்கா சாலை, நீர்வீழ்ச்சி பூங்கா சாலை என சகட்டு மேனிக்கு பறந்துக் கொண்டிருந்தது. “மெதுவா மெதுவா!” அவளது அலறலை நான் கேட்டாலும், வண்டி செவிமடுப்பதாயில்லை.
எனக்குத் தெரிந்த சில இடங்களை அவளுக்குச் சுற்றி காட்டினேன். பள்ளிக் கொண்ட புத்தர் கோவில், நின்று வீற்றிருக்கும் பர்மா பொன்புத்தர் கோவில், பாம்பு கோவில், நீர்வீழ்ச்சி பூங்கா, பினாங்கு பொருட்காட்சி சாலை, ஜெர்ஜாக் வண்டலின் இக்கரை துறைமுகம், பத்து பெர்ரிங்கி கடற்கரை மற்றும் வண்ணத்துப் பூச்சி பூங்கா. ஏனைய இடங்களுக்குச் செல்ல நேரம் ஒத்துழைக்கவில்லை.

ஆம், வண்ணத்துப் பூச்சி பூங்காவில் எனக்கு காத்துக் கொண்டிருந்த அதிர்ச்சியைப் பற்றி இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும்.

(கனாக்கள் தொடரும்)

செவ்வாய், 25 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (4)

வினாக்களோடு சில கனாக்கள் (4)
ழில்விழியிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
"நான் இப்போ ஜூரு கிட்ட இருக்கேன், 10 நிமிசத்துல அங்க இருப்பேன். "

"20 நிமிசமாவது எடுக்குமே அங்கிருந்து. "
"இல்ல, டிரைவர்தான் சொன்னான். "


"பார்க்கலாம், யார் சொல்றது நடக்குதுன்னு. "

"மறவ், கோவப் படாத. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்"

"கோவம்லாம் இல்ல, பத்திரமா வா அது போதும். " மிகவும் செயற்கையாக.

அதன் பிறகு படிக்க முடிந்திருக்குமா? தாட்களை எல்லாம் பையினுள்ளே போட்டு விட்டு, மீண்டும் பேருந்து நிற்கும் இடத்தை நோக்கினேன். இப்போது அலை அலையாய் மக்கள் கூட்டம். உச்சி வானில் கதிரவன் பற்களைக் காட்டி இழித்துக் கொண்டு. அங்கும் இங்கும் நடந்து கால்கள் அசந்து போயின. 15 நிமிடங்கள் கழித்து பேருந்து வந்தது. உடனே சென்று அவளை வரவேற்கவில்லை. தூரத்தில் இருந்தே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


ஒல்லியாக ஒருத்தி இறங்கினாள்; மார்கழி தென்றல் என்னை வருடியதாய் கனா. முதுகில் ஒரு துணி மூட்டை. அட, அவளேதான். அவளுக்கு என்னை சரியாக அடையாளம் தெரியாது என்ற நம்பிக்கையில், வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டே இருந்தேன், நேரே வந்து "ஹாய், எப்படி இருக்கே?" என் பெயரையும் குறிப்பிட்டாள். ஹ்ம்ம்... தெளிவாகத்தான்யா இருக்கா. மறு புன்முறுவலிட்டு வரவேற்றேன்.



என்னைவிட மூன்று செண்டிமீட்டர் குள்ளம்; அவளது இரு புருவங்களை வகுத்து நின்றது - மயிர் நுணியளவு நுண்ணிய பொட்டு ஒன்று. கொண்டையை விட்டு பிரிந்து காதருகே நடனமாடிய அடங்காத கூந்தல் குழல். அவள் அணிந்திருந்த இருக்கமான முழுக்கை மேற்சட்டை. அதை ஒரு பாதியாக மறைத்து கொண்ட குளிராடை. சிம்ரனிடம் வாடகை வாங்கிய ஜீன்ஸ் காற்சட்டை. அணிந்திருந்த ஆடை அவளது நவ நாகரிகத்தைக் கதை கதையாய் சொன்னாலும், கண் சுளிக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை. நிசமாகத்தான். அப்படியே இருந்திருந்தாலும் அதை குற்றம் சொல்லும் அளவுக்கு நான் நல்லவனும் அல்லன்.


சிரிக்கும்போது முந்தி நிற்கும் முயல் பற்கள் இரண்டு, அவற்றையும் போட்டி போட்டுக் கொண்டு வெளியே தள்ளி நின்றது – அவள் பொறுத்தி இருந்த பல் வரிசையை நெறிப்படுத்தும் கம்பி. இப்போது அவளது மெல்லிய, சிவந்த அதரங்கள் விரிந்து அசைகின்றன.

"ரொம்ப வெயிட் பண்ணிட்டல்ல?" சிங்கையில் சிலைகள் பேசுமா? இல்லை இல்லை, இது என் தோழி எழில்விழி. சுய நினைவுக்கு வந்துவிட்டேன்.

"ஊகூம். ஹவ் வாஸ் தெ ஜெர்னி?" (இல்லை, பயணம் எவ்வாறு அமையப் பெற்றது?)

"ஒரே குளிர். "

"திரும்பி போறதுக்கு டிக்கெட் எடுத்திடலாமா? இல்ல முதல்ல பசியாற போறியா?"

"இங்க பக்கத்துல வாஷ் ரூம் எங்கே இருக்கும்? "


போகும் வழியில் என் பின்னே வாகனம் வர, "ஏய், காடி வருது, பாத்து பாத்து” என அவள் சிறுகூச்சலிட்டது என் மேல் உள்ள அக்கறையைக் காட்டியது. நான் மெய் சிலிர்த்துப் போனேன். திரும்பிச் செல்ல பயணச்சீட்டு வாங்கியாகி விட்டது, அவள் பசியாற்றி விட்டாள். சரியாகத் தூங்காததால், எனக்குத் தூக்கம் தூக்கமாக வந்தது. அவள் போக வேண்டிய தேர்வு மையமோ பினாங்கு தீவில் உள்ளது.

“சரி அப்புறம், உன்னை பஸ்ல இல்லாட்டி பெர்ரில ஏத்தி விட்டுட்டு கிளம்பட்டா?” நான் கேட்டேன்.

“ஏன்பா நீ வரலையா?”

“நான் எதுக்கு, விழி?”

“நீதான் இன்னிக்கி ப்ளான் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டீயே, வந்து அந்த விடுதி வரைக்கும் விட்டுட்டு போய்டு”

“தூக்கம் தூக்கமா வருதுலா”

"புது இடம், பயமா இருக்கு. மலாய் வேற சரியா பேச வராது”

கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து நிறைய பேசினோம். நான் பேசுவதைப் பொறுக்க முடியாத நல்லவள் போல

“சனியனே, காலங் காத்தாலயேவா”

“அப்படி சொல்லக்கூடாது,” நான்.



(கனாக்கள் தொடரும்)


எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியாமல் விழுந்த சில வேற்றுமொழி சொற்களுக்கான - தமிழாக்கம் கீழே:
டிரைவர் – ஓட்டுனர்

ஜீன்ஸ் - சாக்குத்துணி

ப்ளான் – திட்டம், அலுவல்

கேன்சல் – நிறுத்தம்

வாஷ்ரூம் - கழிப்பறை

பஸ் - பேருந்து

பெர்ரி – நீருந்து, பயணிகள் படகு

வெயிட் - காத்திருப்பு

டிக்கெட் – (பயணச்)சீட்டு
இழப்பு யார் பொறுப்பு?


- ஒரு தமிழ் தலைவரின் உண்மை சம்பவம்



(தமிழினத்தைப் பற்றி எழுதக் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது. உடனே எழுத சரக்கு இல்லாத்தால், என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு கட்டுரை கீழே. விஞ்ஞான உலகில் கொடி கட்டி பறக்கும் ஒரு தமிழரின் கட்டுரை.)



ஒரு தலைவருக்குத் தெரிய வேண்டும் – இழப்பை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று”ஒரு விஞ்ஞானியின் செவ்வி


கேள்வி : உங்கள் சுய அனுபவத்தைக் கொண்டு, எப்படி ஒரு தலைவன் ஓர் இழப்பை நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு தர முடியுமா?


பதில் : எனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறேன் . 1973றாம் ஆண்டில், இந்திய செயற்கைகோள் பாய்ச்சும் செயல் திட்டத்துக்கு இயக்குனரானேன். எங்கள் இலக்கு 1980தாம் ஆண்டுக்குள் “ரோகினி” செயற்கைகோளை விண்வட்டத்தில் சேர்த்திட வேண்டுமென்பது. போதுமான மானியம் மற்றும் மனித வளம் எனக்கு அளிக்கப்பட்டது. – ஆனால், 1980க்குள் செயற்கைகோள் விண்வெளிக்குப் பாய்ச்சப்பட வேண்டும். அறிவியலாளர்கள், தெழில் நுட்ப வல்லுனர்கள் என ஆயிரக் கணக்ககானோர் அவ்விலக்கை நோக்கி செயல்பட்டனர்.

1979தாம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் – நாங்கள் நினைத்தோம் நாங்கள் தயார் என்று. செயல்திட்ட இயக்குனர் என்ற முறையில், அதைப் பாய்ச்ச நான் இயக்கம் செய்யும் மையத்துக்குச் சென்றேன். பாய்ச்சுவதற்கு 4 மணித்துளிகள் முன்னம், கணினி அனைத்து செயலிகளின் நிலைத்தன்மையைச் சரி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழிந்தப்பின், அந்த கணினியானது பாய்ச்சலை நிறுத்தியது; திரையில், சில கட்டுபடுத்தும் மின்பொறிகள் செயலிழந்துள்ளதாகக் காட்டப்பட்டது. எனது வல்லுனர்கள் – 4கிலிருந்து 5 பேர் வரை என்னுடன் இருந்தனர் – என்னைத் துவண்டு விட வேண்டாம் எனக் கூறினர். அவர்களது கணக்குப்படி போதிய எரிவாயு உள்ளது என்றனர். ஆதலால், நான் கணினியின் உதவி இன்றி, நேரிடையாக விண்கலனைப் பாய்ச்சினேன். முதல் படியில் அனைத்தும் செவ்வனே நடந்தன. இரண்டாம் படியில் பிரச்சனை உருவெடுத்தது. விண்வட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டிய செயற்கைகோள், முழுவதுமாக வங்கக் கடலில் புதைந்தது. அது பேரிழப்பு.


அதே நாள், இந்திய விண் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் சத்தீசு தவான், செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். செயற்கைகோள் பாய்ச்சப் பட்டது காலை 7.00. கூட்டம் நடந்தேறியது காலை 7.45க்கு – ஸ்ரீஹரிகோத்தாவில். அமைப்பின் தலைவர் என்ற முறையில், பேராசிரியர் தவான் அவர்களே பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அந்த இழப்புக்கு முழு பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். “இந்த குழு கடுமையாக உழைத்துள்ளது, ஆனால் இன்னும் தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுகிறது,”என கூறினார். இன்னும் ஒரே ஆண்டில், இந்த குழு வெற்றி அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். உண்மையில், நான்தான் அந்த இழப்புக்குக் காரணமானவன், இருப்பினும் பழியை அமைப்பின் தலைவர் சுமந்துக்கொண்டார்.


அடுத்த ஆண்டு, ஜூலை 1980டில், நாங்கள் மீண்டும் செயற்கைகோள் பாய்ச்ச முயன்றோம், இம்முறை வெற்றி கொண்டோம். நாடே குதூகலித்தது. மீண்டும் பத்திரிக்கையாளர் சந்த்திப்பு நிகழ்ந்தது. பேராசிரியர் தவான் என்னை ஓரமாக அழைத்துச் சொன்னார். “இன்றைக்கு சந்திப்பை நீ நடத்து.”

அன்றைக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுக்கொண்டேன். ஓர் இழப்பு என்றதும் அதை அதன் தலைவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், வெற்றி கிட்டிய போது, அதை அவரது குழுவிற்குச் சேர்த்து விட்டார். ஒரு சிறந்த நிர்வாக கல்வியை நான் ஒரு நூலிலிருந்து கற்கவில்லை. அந்த அனுபத்திலிருதே.


(செவ்வியைப் படித்து முடிக்கும் முன்னரே, அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டவர் யார் என்று உங்களில் பலர் அனுமானித்து இருப்பீர்கள்... ஆம் அவரேதான். மேற்கண்ட செவ்வி எனக்குப் பன்னனுப்பி மடலில் வந்தது, உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி)

ஞாயிறு, 23 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (3)

வினாக்களோடு சில கனாக்கள் (3)

மைதியான, வெளிச்சமான ஓர் இடத்தை தேடி அங்கே அமர்ந்தேன். என் புத்தகப்பையில் இருந்து சில விரிவுரை குறிப்புகளை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு சில தாட்கள் மட்டுமே படிக்க முடிந்தது, அவளை நெருங்கப் போகும் இன்பத் தருணங்கள் அவ்வப்போது கண் முன் வந்து மறைந்தன.

எழில்விழியோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம், நட்பு, இருதலை காதல் (அவளது குற்றச்சாட்டு - அவளிடமிருந்து நான் எதிர்பார்த்தது வெறும் உடல் இச்சையாம்), மோதல், மீண்டும் காதல், மீண்டும் மோதல்.... இப்படி பல பரிமாணங்களைக் கடந்து இறுதியாக மீண்டும் ‘நட்பு’ என்று சங்கிலி பூர்த்தியாகி உள்ளது. வெறும் நான்கே ஆண்டுகளில் இத்துணையும். எல்லாம் இணைய அளவே, இதுவரை நேரில் கண்டு பேசியதெல்லாம் இல்லை. தொலைபேசி, குறுந்தகவல், இணைய அரட்டை இவ்வாறு தான் எங்கள் உறவு இந்நாள் வரை நீடித்திருந்தது. ஆனாலும், புகைப்படங்களிலிலும் வலைக்காட்சியிலும் (வெப்கேம்) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதுண்டு.

பிற்காலத்தில், என் காதலை நிராகரித்து விட்டு, அவள் இன்னொருவனிடம் காதல் பூண்டதை என்னால் அப்போது ஏற்று கொள்ள முடியவில்லை. அவளைக் குற்றம் சொல்வதா, என்னை வைவதா அல்லது சூழ்நிலையைத் தூற்றுவதா? தெரியவில்லை. எனக்கு எந்த இழப்பும் இல்லையே என்று சொல்லி பல முறை என் மனசாட்சியையே ஏமாற்றிக் கொண்டேன். துரோகி நான், மனசாட்சியை ஏமாற்றியதால். சில இரவுகள் உள்ளுக்குள்ளே புளுங்கி உள்ளேன். கோழை நான், புளுங்கியதால். யாரிடம் சொல்லி அழ முடியும்? காலப் போக்கில் அவளது முடிவு அனைவரது நன்மைக்கே என உண்மையாக சமாதானமானேன். அவளுக்கு ஏற்ற துணையோடு வாழட்டும் என வழி விட்டு விலகி நின்றேன். ஒரு முட்டாள் தியாகி நான், காதலை விட்டுக் கொடுத்ததால். கிட்டாதாயின் வெட்டென மற என சொல்வார்கள்; காதலில் அது எத்தகைய சாத்தியம்? நானறியேன்.

சென்ற வாரம், சிங்கையில் ஒரு வேலை காலி இருப்பதாக இணையத்தில் விளம்பரம் பார்த்தேன், அந்த தொழிற்சாலையைப் பற்றி யாரிடம் விசாரிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது அங்கு வசிக்கும் எழில்விழியின் ஞாபகம் வந்தது. அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.

அதே இரவு, வெளியூர் அழைப்பு வந்தது என் கைத்தொலைப்பேசிக்கு. திரையில் எண் காட்டப்படவில்லை. யாராக இருக்கும்? பாதி தூக்கத்திலே பேசுகிறேன், ஆம் அது அவளேதான். என் தேவதை. மன்னிக்க, எனது முன்னாள் தேவதை.

“ஹலோ மறவன்” “ஆ…ம், ஹலோ”

“எப்படி இருக்கே”

“நல்லாருக்கேன், நீ…?”

“ஆம், எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை அனுப்பினேன், பார்க்கலையா?”

“இல்ல, தூங்கிட்டேன்”

“அடுத்த வாரம் பினாங்கு வரேன், என்னுடைய தேர்வு ஒன்னு அங்க எழுத வேண்டி இருக்கு. பினாங்குல எனக்கு என்ன இடம் தெரியும், நீ இருக்கேன்ற நம்பிக்கையில தான் வரேன்” மோதல் காலத்தில் அவளை இனி வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்றெல்லாம் (மனதுக்குள்) சபதம் போட்டுள்ளேன்.

“என்றைக்கு?”

“வியாழன், வெள்ளி, சனி மூனு நாள்”

வார இறுதியில் வெற்று நேரம் இருக்கும், ஆனால் இந்த சனிக்கிழமை பார்த்து கல்லூரியில் சொற்பொழிவு இருக்கிறதே? முடியாது என்றால் என்ன நினைப்பாளோ? இவ்வளவு பக்கம் வந்தும் போய் பார்க்கவில்லை எனில் அது தப்பு மாதிரி தெரிந்தது. உள்ளூர அவளைப் பார்க்க வேண்டும் என்ற தசையாட்டம் இல்லாமல் இல்லை. நிலைமையை எடுத்துரைத்தேன், அவள் சமாதானமாகவில்லை. உரிமையாக வர வேண்டி உத்தரவிட்டாள். போதாக் குறைக்கு ஒரு பழமொழி சொன்னாள் ஆங்கிலத்தில், அதற்கு ஈடாக தமிழில் -

“மனம் உண்டானால் மார்க்கமுண்டு”

“எல்லாம் நேரம்டா சாமி” நான்!


(கனாக்கள் தொடரும்)

வியாழன், 20 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (2)

வினாக்களோடு சில கனாக்கள் (2)


ருவழியாக பேருந்து நிலையத்தை அடைந்து விட்டேன். நேரம் அப்போது சரியாக காலை 6.32. ஐயகோ, அரை மணி நேரம் தாமதமாகி விட்டேனே; அவள் காத்துக் கொண்டிருப்பாளே! பதற்றம் இருந்தப் போதிலும் முகத் தோற்றத்தைச் சீர் படுத்த சில நிமிடங்கள் தேவைப்பட்டன. மோட்டாரை இருத்தி விட்டு, பொது கழிப்பறைக்குள் நுழைந்து படிந்து போய்விட்ட முடிகளைக் கோதி விட்டு ஏதோ செய்தேன். இது நல்லா இருக்கே!அந்த நல்ல கண்ணாடிக்கு நன்றி நவிழ்த்து, விரைவு பேருந்து வந்து நிற்கும் இடத்தை அடைந்தேன்.

அதிகாலை என்பதால், கதிரவ ஒளி இன்னும் மும்முறமாகவில்லை. மக்களின் கூட்டமும் கணிசமாக இல்லை. அவளை அங்கே தேடினேன், காணவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவளது கைத்தொலைபேசிக்கு இணைப்பு சாத்தியமானது.

"விழி, எங்க இருக்க? நான் இங்க வேயிட் பண்ணிட்டிருக்கேன்"

"இன்னும் பஸ்சுலத்தான்பா... சயின் போர்டு பார்த்தேன், இன்னும் கே.எல் போறதுக்கு 21 கிலோ மீட்டர் இருக்குதாம். பினாங்கு (பட்டர்வொர்த்) வர 140 கிலோ மீட்டர் இருக்குப்பா "

"விளையாடாதே, பின்னே ஏன் 6 மணின்னு சொன்னே?"

"தெரியலப்பா... அங்க ஒருத்தன் அப்படித்தான் சொன்னான்.
அது யாரு?"

அவள் ஏதோ பெயர் சொன்னாள், அதை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் நிதானம் என்னிடம் இல்லை.


140கி.மி.யா? இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கனும்? அதற்குள் கதிரவ ஒளி தலைப்பட எனக்குள் இருந்த கோபம், வேகம், வருத்தம், அதிருப்தி என பல தீய குணங்கள் சூழ்ந்து குருதியின் வெப்பத்தைத் துரிதப் படுத்தி விட்டன. வயிறு ஒருப்பக்கம் காற்றை அங்கும் இங்கும் தள்ளி விளையாட்டு காட்டியது. நேரே உணவு கடைக்குள் நுழைந்தேன். ஒரு தட்டு நாசி லெமாக்கை உள்ளே தள்ளினேன். எழில்விழியிடமிருந்து குறுந்தகவல், "கோச்சுக்காதே, நாலு வருசம் காத்திருந்தோம், ரெண்டு மணிநேரம் பொறுக்க முடியாதா?"
அதற்கு மறுமொழி நான் இப்படி இட்டேன், சுயத்தை முழுமையாக ஏமாற்றிய வண்ணம் -
"நான் தணிந்துதான் இருக்கேன், நல்ல பிரயாணம் அமையட்டும், கவனம்."

நிஜத்தில் சுவாசக் காற்றின் வெப்பம் தணிந்தப்பாடில்லை. பெனடோல் (காய்ச்சல் மருந்து) ஒன்றை போட்டு விழுங்கி, தேவையில்லா மன உளைச்சலைப் போக்க முயன்றேன்.
(கனாக்கள் தொடரும்)

திங்கள், 17 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள்

வினாக்களோடு சில கானாக்கள் (1)



* பின்வரும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனை உலகின் பிம்பங்களே. யாரினது மனத்தைப் புண்செய்யும் நோக்கில் இது புனையப் படவில்லை. நன்றி.






ள்ளிரவு நேரம் 12.36. சவரம் செய்துவிட்டு முகத்தில் புது பொழிவு ஏதும் தெரிகிறதா என்ற கேள்வியை நிழற் கண்ணாடியிடம் முன்வைத்தேன். “சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்” என்ற பழமொழி அதற்கு யார் கற்பித்ததோ... என்னிடம் அப்படியே ஒப்புவித்தது. வெறுத்துப் போனேன்.


பக்கத்து அறை நண்பனின் கதவைத் தட்டி அவனிடம் இருக்கும் இன்னொரு தலைக் கவசத்தை நாளைக்குப் பயன்படுத்த அனுமதி கேட்டேன், பிறகு கல்லூரி நூலகத்தில் ஒப்படைக்க வேண்டிய புத்தகத்தையும் அவனிடமே கொடுத்து, சேர்த்து விட சொன்னேன்.
“ஏன் நாளைக்குக் கம்பஸ்க்கு வரலையா?”
“இல்ல, ஒரு விசயமா பட்டர்வொர்த் போறேன்”
“ஹெல்மட் எதுக்கு?”
“வந்து சொல்லுறேன்,” ஒரு திருட்டுப் புன்னகையோடு.
ஏதோ புரிந்துக் கொண்டவனாய், அவன் எனக்கு விளங்காத மொழியில் தலையசைத்துச் சென்றான். நேரம் பின்னிரவு 1.06. கைத்தொலைபேசியில் அலாறத்தை வைத்து விட்டு உறங்க சென்றேன்; இல்லை, முயன்றேன். நடக்குமா நடக்காதா என்றிருந்த தருணம், நாளை நடக்கப் போகிறதே என்ற ஆவலும் குதூகலமும் என் இரவு தூக்கத்தைக் கூறு போட்டன.


அலாறம் அலறியது, என்னை அறியாமலே தூங்கி இருக்கிறேன். நேரம் அதிகாலை 4.30. பாதரசமே உறைந்துப் போயிருக்கும், அப்படி ஒரு குளிர்.
“பச்சைத் தண்ணியில குளிக்கனுமாடா?”
“குளிச்சித்தானே ஆகனும்”
“சரி நேரத்த கடத்தாதே... ஆறு மணிக்கெல்லாம் பட்டர்வொர்த் பஸ் ஸ்டேசன புடிச்சி ஆகனும்”
“முடியலடா” என் சுயத்தோடுதான் இந்த உரையாடல்.


மணி இப்போது காலை 5:40. என் இருப்பிடத்தில் இருந்து பட்டர்வொர்த்துக்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். மூன்று முறை முகம் பார்த்தாகி விட்டது கண்ணாடி முன். ஆம், அதே நையாண்டி பேர்வழியிடம்தான். மோட்டாரை முறுக்கிய வண்ணம் நேரத்திடம் போட்டியிட்டு விரைந்தேன், தெற்கை நோக்கி. இருட்டு, குளிர் என இரண்டும் என்னை விரட்டிக் கொண்டிருக்க “இது நல்லபடியா அமையுமா? என்ன பேசுறது... என்ன சொல்லி வரவேற்பது? அந்த இடத்துக்கு வழி மட்டும் சொன்னால் போதுமா? அல்லது கூட்டிக் கொண்டு போக சொல்வாளா? போகாவிடில் கோவிப்பாளே... என்னை நேரில் பார்த்தால் அவளுக்குப் பிடிக்குமா? பிடித்துப் போய் என்ன பயன்? வரம்பு மீறாமல் பழகனுமே நான், முடியுமா?” இப்படி விடை தெரியா பல கேள்விகளோடு எனது வேட்டை தொடர்ந்தது.

(கனாக்கள் தொடரும்)

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

உளறல் (1)

கல்


உனைத் தூற்றவே
எடுத்தேன் பேனாவை
உன்மீது சினங்கொள்ள
எனக்கென்ன உரிமையாம்
எழுதாமல் நிற்கிறேன்

அதென்ன உன் மேல்
எனக்கு அப்படியொரு
தீராத் தாகம்
பருகிய அனுபவமே
இல்லை என்றாலும்

இத்தனை முறை நீ
எனை மிதித்தும்
பலமுறை வேண்டாம் போ
என்று ஒதுக்கியும்
தீரவில்லை உன்னோடு
நான் கொண்ட மோகம்

அது மோகமா
அல்லது வயதின் வேகமா
மடப் பயலுக்கு
பகுத்தறிய தெரியவில்லை

சுய மரியாதையாம்
அரைசாண் மமதை
பலமுறை இந்த எண்சாணைக்
கட்டி இருத்தியும்
கால ஓட்டத்தில்
உன் காலடி தேடி
வந்திருக்கிறேன் தன்மானத்தை
அடகு வைத்து
அப்போதெல்லாம் தோன்றவில்லை
ஏன் நான் இப்படி என்று

உன்னோடு உறவாடிய
நாட்களைக் காட்டிலும்
ஊடலில் மூழ்கியதே அதிகம்
அச்சோ... ஊடலா?
காதலே இல்லை என்கிறாய்!

உனை விலகிச் செல்வதாய் எண்ணி
இன்னும் நெருங்கி வந்ததுதான் நிஜம்
தனிமை தருணங்கள் - நீ
பேசிய வார்த்தைகளால் அறைகின்றன
அறைகள் வலிக்காமல் போகுமா?
வலியும் சுகப்படாது எனில்
என்ன காதல்???

இவ்வேளை உணர்கிறேன்
நான் கொண்டது வெறும்
ஒருதலை காதல்தானோ!

காலங் கடந்து வருந்தி
என் செய்வேன்
என் விதி அவ்வளவுதான்
ஆறுதல் கூற
சுயம் உண்டு என்வசம்

சிரிப்பதாய் நினைத்து
கரைந்த காலங்கள் போதும்
கரையா கல் நீ என்று
உணர்ந்தப் பின்னும்

குன்றின் மேல் கல்
அவனை வணங்க
ஆயிரங் கோடி பக்தர்

நீயும் அவதாரம்தானோ என்னவோ
அறியாது அவசரப்பட்டது நான்தானோ
ஆதலால் அவதிக் கொள்கிறேன்





சனி, 9 ஆகஸ்ட், 2008

இவளும் ஒரு சிலந்தியே!


மைதியான இரவு பொழுது அங்கே. மேல் மாடியில் மட்டும் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அங்கே ஓர் இளம் பெண் அமைதிக்குப் புறம்பாக. கையை அடுத்து இப்போது கால்களை வருடிக் கொண்டிருந்தாள். இடையிடையே முதுகையும் தொட முடியாமல் தொட்டுச் சொறிந்துக் கொண்டாள். தினமும் இரவு நேரங்களில் குட்டி ராஜ்ஜியம் நடத்தும் இந்த கொசுக்களின் மீது அவளுக்குத் தீராக் கோபம்தான். ஒவ்வொரு வினாடியும் அவளுக்கு இப்போது முக்கியம். அவசர அவசரமாக பாடத்தை மனனம் செய்துக் கொண்டிருந்தவளின் காதருகே அக்கொசுக்கள் ரீங்காரமிட்டது அவளை ஆங்காரப்படுத்தியது.

புகைந்துக் கொண்டிருந்த கொசுவத்தியைச் சற்றும் பொருட்கொள்ளாமல், புயலாய் வந்த மின் விசிரியின் காற்றுக்கும் அல்வா கொடுத்து விட்டு, அந்த ஒல்லி பிச்சான் குழலியை மட்டும் அவை வட்டமிட்டு புடைச்சூழ்ந்தன. ஆனாலும் கொசுக்களின் முயற்சி அவளைக் கவர்ந்தது.

நாளை அவள் சரியாக எட்டு முப்பது மணிக்கெல்லாம் பள்ளியில் இருக்க வேண்டும். எட்டே முக்காலுக்குத் தேர்வு தொடங்கிவிடும். ஆனாலும் அவளது தோழிகள் யாவரும் காலை ஏழரைக்கெல்லாம் பாடசாலையில் குவிந்து விடுவர். முன்கூட்டியே சென்று, அவர்கள் சொல்லும் ஆருடங்களில் கலந்துக் கொள்ள அவளுக்கு நாட்டம் இல்லை.

அவளது இத்தகைய பதற்றத்திற்குக் காரணம் நாளைய வேதியல் தாள் 2-உடன் அவளுக்கான ஒட்டு மொத்த தேர்வுகளும் முடிவடைகின்றன. இதற்கு முந்தைய தாட்களை எல்லாம் கடலைத் திண்பது போல சுலபமாக எழுதி முடித்தவள் இவள். இந்த தேர்வையும் செம்மையாக எழுத வேண்டுமே! நான்கு பாடங்களிலும் “ஏ” தகுதி பெற்றால்தானே மருத்துவம் பயில இயலும்! அவள் மற்றும் அவளது குடும்பத்தினரின் நீண்ட நாள் கனவும் அதுவே. நான்கு “ஏ” தகுதி இருந்தும், அரசாங்க பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில முடியாமல் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது பிறிதொரு விசயம்.

அவளது பதற்றத்திற்கு இன்னமும் ஒரு காரணம் உண்டு எனலாம். அஃது அவள் ஆழ் மனத்தில் ஊன்றிருக்கும் சோகம். அதை நினைவிற் கூறும் போதெல்லாம் உள்ளம் நிலைக்குத்தியது. இதய துடிப்பு இரட்டித்தது. எஸ்.டி.பி.எம். மாதிரி தேர்வின் போது, அல்லும் பகலும் நன்கு படித்து தயார் நிலையில் போனாள். ஆனால், இதே வேதியல் தேர்வன்று, தான் பயின்ற அனைத்தையும் நொடியில் மறந்தே போனாள். முதல் நாள் தந்தை தவறிப் போன துயரமும் அதனால் விளைந்த மன உளைச்சலும் அவளைச் சுக்கு நூறாக்கின. சுலபமான வினாக்களுக்கும் விடை அறியா பேதையாய்த் தத்தளித்தாள். அக்கெட்ட கனவு அவளது நினைவலைகளை விட்டு அகல மறுத்தது. இம்முறையும் அவ்வாறே நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் உள்ளூர இருந்தது.
இதற்கு இடையில் அவளது அறைக்குள் அழையா வருகை புரிந்துள்ள கொசுக்களின் அட்டகாசம் வேறு. குழலி தான் ஒரு விக்கிரமாதித்தனது வாரிசைப் போன்று தனது முயற்சியில் சற்றும் பின்வாங்காது அயராமல் படித்தாள். குழலியின் இறுதிக்கட்ட மீள் பார்வைக்குத்தான் அம்மேசை விளக்கு இன்னும் ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது. தனது குட்டி குறிப்புகளை ஒருமுறை கண்ணோட்டம் இட்டுக் கொண்டிருந்தாள்.

ஓரிரு துண்டு தாட்களே இன்னும் எஞ்சி இருந்தன. தடபுடலென அவளது கைத்தொலைப்பேசியின் அலாரம் அலறத் தொடங்கியது. அப்போது நேரம் நள்ளிரவு பன்னிரண்டு. படித்ததை அப்படியே போட்டு விட்டு விளக்கை அணைத்தாள். படிக்கட்டில் மெதுவாக இறங்கினாள்.

“டக்… டக்… டக்…”
“டக்… டக்… டக்…” மீண்டும் அதே ஓசைக் கேட்க விழித்துக் கொண்டார், லூர்துமேரி. தாம் இடுப்பில் கட்டியிருந்த கைலியை ஒருமுறை சரி செய்த பின் கதவை எரிச்சலுடன் திறந்தார். கண்களைத் தேய்த்தவாறே உற்றுப் பார்த்தார்.

“ஏண்டி, நீ இன்னுமா தூங்கல?” “அம்மா, நீங்க தனியா தூங்குறீங்க. தங்கச்சி வேற மாமா வீட்டுக்குப் போயிட்டா. நான் வேணும்னா அந்த படுக்கையில உங்க கூட...”

சிறு அசட்டு நகைப்புக்குப் பின் அம்மா கேட்டார். “என்னடி புதுசா அக்கறை? அவ போய் ரெண்டு வாரம் ஆச்சு. தீடீரென என் மேல என்னடி கரிசணை? சரி சரி வா, வந்துப் படுத்துக்க” அம்மாவுடன் படுத்துக் கொண்டாள். கைத்தொலைப்பேசியில் அலாரம் வைத்துக் கொண்டாள். “அம்மா நாளைக்கு வெல்லென எழுப்பி விட்டுடுங்க. போன் அலாரத்தைச் சில நேரம் நம்ப முடியல.” “அதானெ சோழியும் குடுமியும் சும்மாவா ஆடும்...”

அந்த ஒல்லி பிச்சான், படுக்கையின் மீது தவழ்ந்தவாறே தான் படித்ததைக் காற்றிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள். “டேட்டிவ் போண்ட் இஸ் வீக்கர் தென் ஐயோனிக் போண்ட். சோ தேட் தெ…” “ அடியே, டேட்டிவ் போண்டாவது ஜேம்ஸ் போண்டாவது – பேசாம தூங்குடி. நாளைக்கு நேரத்தோடு பரீட்சைக்குப் போக வேணாமா?” குழலி போர்வையைத் தலையோடு இழுத்து மூடிக் கொண்டாள்.

கடிகாரத்தின் சிறிய முள் எட்டை எட்டிப் பிடிக்க முக்கால் மணி நேரமாக முயன்றுக் கொண்டிருந்தது. சூரியன் தலைப்பட தொடங்கியது. புத்தகப்பையை இடது தோள் பட்டையில் தொங்கவிட்டவாறு குழலி அங்கும் இங்கும் வீட்டின் உள்ளேயே நடமாடிக் கொண்டிருந்தாள். இடை இடையே நேரத்தையும் கவனித்துக் கொண்டாள். சிறிய முள்ளின் விடாமுயற்சியை ரசிக்க அல்ல; மணி எட்டாக இன்னும் அதிக நேரம் இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ள.

பின் அம்மாவிடம் வினவினாள். “அப்பாவோட மோட்டார் சாவி எங்கே?” மேரியின் பதிலுக்குக் காத்திராமல், மாடிக்கு அரக்க பறக்க ஏறினாள் குழலி. மேரி கீழிருந்தவாரே குரல் எழுப்பினார். “குழா, கர்த்தரை நல்லா வேண்டிக்கோடி” “ஓ… அதெல்லாம் நேத்தே பக்காவா பண்ணிட்டேன். வர்ற சேனன்ட்டுக்கு இந்த வாட்டியும்... மெழுகுவர்த்தி பிரார்த்தனை” “ஏன்டி, கர்த்தருக்கே லஞ்சமா... எதிர்பார்ப்போடு கடவுளை அனுகக் கூடாதுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவார்ல...” அவள் அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.

காலையில் எழுந்ததிலிருந்து மாடிக்கு ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளாள் இவள். நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது, தேர்வுக்குச் செல்ல. அம்மா நளினமாகச் சொன்னார். “ஏன்டி, இன்னிக்கும் எப்போதும் போல பேருந்துல போகலாமுல”. “நீங்க எப்பவும் இப்படி தான் மா, ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருங்க”. மீண்டும் அதே வேகத்துடன் படிக்கட்டுகளில் கண் மூடித்தனமாக இறங்கிக் கொண்டிருந்தாள். “அம்மா, சாவிய கா… … .. ஆ… ஆ… ஆ…”. ஒரு பெரிய ஓசை மட்டும் கோரமாகக் கேட்டது. மேரி திரும்பிப் பார்த்தார்.
_____________________________________________________________________________________

ண்களை மெல்ல திறந்தாள் குழலி. இப்போது விழிப் படலங்களைச் சற்று அகல விரித்தாள். இடதுக்கால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளைத் துணியால் அவளது இடது கால் பொட்டலம் மடிக்கப் பட்டிருந்தது. தலையை ஏதொ அழுத்துவதைப் போல ஓர் உனர்ச்சி. மெதுவாக தொட்டுப் பார்த்தாள். தலையைச் சுற்றியும் ஒரு கட்டு. “எல்லாம் போச்சு”. அவள் செவிக்கு மட்டும் விழும்படி மனம் சொன்ன வார்த்தை-தான் அது. அவளால் நன்றாக உணர முடிகிறது. தந்தை புற்று நோயால் இயற்கை எய்தும் போது சுவாசித்த அதே காற்று; அதே சுற்றுச்சூழல். அவள் இப்பொழுது மருத்துவமனையில் கிடத்தி வைத்திருப்பதை மேலும் உறுதி செய்தது - ஆங்காங்கே வெள்ளை சீருடையில் பவனி வந்த தாதியர் கூட்டம்; மருந்து வாசனை.

வலதுப்புறம் அம்மா அமர்ந்து இருந்தார். கையில் நயனம் வார சஞ்சிகை. குழலி சுய நினைவுக்கு வந்ததைப் பார்த்து எழுந்தார். “அம்மா, எனக்கு... என்ன... ஆச்சு...?” “ஒன்னும் இல்லடி பெருசா… கல்ல எலும்பு லேசா தெறிச்சிருக்காம். ரெண்டு மூனு வாரத்துல சரியாயிடுமாம்.” மருத்துவர் சொன்னதில் தனக்குப் புரிந்த்தை மட்டும் மேரி கூறிக் கொண்டிருந்தார். “ரெண்டு வாரமா…” வியந்துப் பார்த்தாள் குழலி.

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுனு நினைச்சிக்கனும்” அவளுக்கு நன்கு பரிட்சயமான குரல் அது. இடது திசை மெதுவாக தலையைத் திருப்ப முயன்றாள். முடியவில்லை-தான், ஆனாலும் விக்கிரமாத்திதனது கடை வாரிசு ஆய்யிற்றே அவள். மெதுவாக திருப்பினாள். அங்கே நின்று கொண்டிருந்தவர் அவளது கணித ஆசான் திரு. சின்ஹா ராமன் குட்டி. முகத்தில் வலிந்து ஒரு புன்முறுவலை ஏற்படுத்திக் கொண்டாள். “வாங்க சார், நீங்க... எங்கே... இங்கே...?” “இப்ப எப்படிம்மா இருக்கு உடம்பு?” “.... .... ஆ... அது...” அவளது வரண்ட தொண்டையில் வார்த்தைகளும் சிக்கின. “நல்லா ஓய்வு எடுங்க, ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதிங்க. டாக்டர் கிட்ட பேசிட்டோம், பேஷன்ட் சம்மதிச்சா நிச்சயம தேர்வு இங்கயே நடத்திடலாம்னு ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் உத்தரவு கொடுத்து இருக்கு. என்னுடன் தேர்வு வாரியத்தைப் பிரதிநிதித்து அதிகாரி ஒருவர் வந்து இருக்காங்க”

இந்த நிலைமையில் பரீட்சையா? ஒழுங்காக பதில் அளிக்க இயலுமா? இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே. இந்த இரண்டு வருட கால படிப்பு வீணாகி விடுமே. சற்று தயங்குவதைப் போல செய்தால் குழலி. உமிழை மென்று விழுங்கி அம்மாவை நோக்கினாள். “அம்மா, எனக்குப் படக் படக்குனு அடிச்சிக்குது. நான் நல்லா செய்வேனா?” பின் கெஞ்சவும் செய்தாள். இது போன்ற தருணத்தில் தாயிடமிருந்து ஆறுதல் வார்த்தைகளை அவள் எதிர்ப்பார்த்ததில் தவறு ஏதும் அல்லவே. ஆனால் நிலைமை அங்கே முற்றும் வேறுப்பட்டிருந்தது.

சட்டென இருக்கையை விட்டு எழுந்த லூர்து மேரி, விடுக்கென நயனம் புத்தகத்தை மெத்தை மேல் வீசினார். மகளை எரிச்சலாய் நோட்டமிட்டு விட்டு பின் தனது அனல் மொழிகளைக் கக்கினார். “இதோ பாருடி, நீ எதுக்குமே லாயக்கு இல்லாதவ. உனக்கு ஒரு மண்ணும் வராது. எப்ப பார்த்தாலும் இப்படியே-தான் எதாவது பன்னுற. இப்ப என்ன நடந்திருச்சு பெருசா? இது அன்றைக்கே தெரிஞ்சிருந்தா இவ்வளவு இரைச்சிருக்க வேணாமே. எதையாவது செய். என்னை விடு.” எரியும் நெருப்பில் நெய் ஊற்றியது போல இருந்தது. தோள் பையை வாரித் தன் கக்கத்துக்குள் சொருகிக்கொண்டு அலட்டலாக வெளியே நடையைக் கட்டினார் மேரி. நல்ல வேளை இதையெல்லாம் அந்த ஆசிரியர் கவனிக்கவில்லை. சற்று தொலைவில் தேர்வு அதிகாரியோடு ஏதோ அலவலாவிக் கொண்டிருந்தார்.

அம்மாவா அப்படி வார்த்தையை விட்டது? அளந்து அளந்துப் பேசுபவர் ஆயிற்றே. “நான் என்ன அப்படி தவறாக பேசிவிட்டேன்? அவளால் அதை விளையாட்டாகக் கூட நம்ப முடியவில்லை. கண்களை ஒரு நிமிடம் மூடினாள். முன்பு அப்பா சொன்ன வார்த்தை அவளுக்கு அப்போது ஒலித்தது. “நம்மலால முடியாதது ஒன்னுமே இல்ல, அப்பாக்கு எதாச்சும் ஆச்சுனா குடும்பம் உனக்கு பின்னாடி தான்... போராட்டம் இல்லனா வாழ்க்கையில ருசி இல்லமா”. இந்த தாரக மந்திரம்தான் அவள் இது வரை எந்தவொரு தடைக்கல்லையும் கடந்து வர உதவி வருகிறது.
அருவியாய் ஊற்றெடுத்த கண்ணீரைத் துடைத்து எறிந்தாள். கண்களைத் திறந்தாள். உலகமே அவளுக்கு வெளிச்சமாகத் தெரிந்தது. இனி ஒரு மாத்திரை கூட அவள் தாமதிக்க விரும்பவில்லை. அம்மாவின் வார்த்தைகளையே சவாலாக எடுத்துக் கொண்டாள். தொலைவில் நின்றுக் கொண்டிருந்த திரு.சின்ஹாவை மெதுவாக அழைத்தாள். “சார்... சார்...”

மருத்துவ மனையிலேயே ஒரு சிறப்பு அறை இருந்தது. இங்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான தற்காலிக தேர்வு அறை அஃது. மருந்தக ஊழியன் அவளை அந்த அறைக்குத் தள்ளுவண்டியில் மெதுவாக அழைத்துச் சென்றான். அங்கே ஒரு கண்காளிப்பாணி காத்துக் கொண்டிருந்தார். மறுக்கும் ஊசி செலுத்தப்பட்டும் தலை லேசாக அலுத்திக் கொண்டே இருந்த்தது அவளை. மடக்க முடியாத நிலையில் இடது கால் தள்ளு நாற்காலியின் சிறப்பு பட்டையில் ஓய்வு எடுத்துக் கொண்டது. இருப்பினும் தனக்கு வந்த இந்த சோதனையையும் வேதனையயும் கண்டு அவள் சற்றும் தளரவில்லை.

தேர்வு அதிகாரி கேள்வி தாளை நீட்டினார். சற்றும் தாமதிக்காமல் கேள்விகளுக்கு விடை அளிக்க தொடங்கினாள். தனது அவசர குணம் ஏற்படுத்திய உடல் வலியையும் ஆசை அம்மா ஏற்படுத்திய மன வலியையும் தூர எறிந்தாள். எஸ்.டி.பி.எம். நான்கு “ஏ” என கருமமே கண்ணாய் இருந்த்தாள். ஆந்த தேர்வு அதிகாரி நிச்சயம் கர்த்தர் அனுப்பி வைத்தவராகத்தான் இருக்க வேன்டும். இல்லாவிடில், அவளுக்கு மேற்கொண்டு அரை மணி நேரம் கொடுத்திருப்பாரா? அதைச் செவ்வனே பயன் படுத்திக் கொண்டாள். நன்றாக விடை எழுதினாள்.

தேர்வு முடியும் நேரம். வாசலில் மதிய உணவோடு காத்திருந்தார் தாயார். நம்பிக்கையோடு வெளியேறினாள் குழலி, வேக வேகமாக தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு. இதழ் முழுக்க எழுச்சி புன்னகை. எதையோ சாதித்த ஒளி வட்டம் அவள் முகத்தில்.

“நல்லா செஞ்சியாடி... வலி இப்போ எப்படி இருக்கு... இதோ பாரு உனக்கு புடிச்ச நண்டு கறி... அப்புறம்...” குழலி அம்மாவை இடைமறித்து, “உண்மையா உங்களுக்கு என் மேல கோவம் இல்லையே?” “சீ... போடி, நீ என் பொண்ணுடி... அப்படி கடிஞ்சா தான் நீ ஒரு வேகத்தோட எழுதுவன்னு தெரியும்... அதான் அப்படியே வீட்டுக்குக் கிளம்பி போய் உனக்கு சமைச்சிட்டு வந்தேன்”

“அம்மா, இருந்தாலும் உங்க பொண்ணு நான், சிலந்தி போல... எத்தனை இன்னல் வந்தாலும் சோர்ந்து போகாது வலை பின்னி கிட்டே தான் இருப்பேன்.” “நீ எட்டு காலு பூச்சி இல்லடி, ஒல்லி குச்சி!” மேரி சிரித்துக் கொண்டே மகளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்.
(கதாப்பாத்திரங்கள் யாவும் வெறும் கற்பனையே. நன்றி.)