பக்கங்கள்

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 பிப்ரவரி, 2009

என்னமோ

என்னமோ

இருட்டு, குளிர். அதிகாலை ஆறு. மக்கள் கூட்டம். ஆண், பெண், இளைஞர், குமரி, பொடியன், பிள்ளை, குழந்தை, பெரியவர், கிழவர், காவல் அதிகாரி, சிறப்பு பாதுகாவல் அதிகாரி, தமிழர், ஆங்கில உரையாடல், வடமொழி பிரார்த்தனை, ரதம், காளை, வண்ணக் கொடி, முருகப்பாடல், தேங்காய் குவியல், ஆட்டக் காவடி, வேட்டி, சேலை, தாவணி, தங்க ஆபரணம், ஒப்பனை, பக்தர், வேடிக்கையாளர், அர்ச்சனை தாம்பளம், ஊதுபத்தி, சீனர், வெளிநாட்டவர், ஒளிப்படக் கருவி, ஊடகத்தார்.

ஆம், தைப்பூசத்தின் முதன் நாள், முருக ரத ஊர்வலம் விமரிசையாக அனுசரிக்கப் படுகிறது. அந்நாளைச் செட்டி பூசம் என்றும் அழைக்கப் படுவதுண்டு. இந்தியாவிலிருந்து வணிகத்தை நம்பி வந்தவர்கள் செட்டி என்ற இப்பிரிவினர். ஆரம்பக் காலங்களில் இவர்கள் துவக்கி வைத்த செட்டி பூசமானது, பிற்காலங்களில் மற்ற தமிழ் பக்தர்களாலும் வரையறு இன்றி கொண்டாடப் பட்டு வருகிறது. தைப்பூசத்தன்று வேடிக்கை பார்க்க நினைக்கும் மக்கள், வேண்டுதல் இருப்பின் அதை இந்த செட்டி பூசத்தன்றே செலுத்தி விடுபவர்களும் உள்ளனர்.

பினாங்கு மார்க்கெட் தெருவில் புறப்படும் இந்த முருகன் ரதம், பல மணி நேர பவனிக்குப் பிறகு நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயிலை அடைகிறது. ரதம் வரும் பாதைகளில் தேங்காய் உடைத்து, சாலையைக் குளுமை செய்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலையை நேர்த்தி செய்தனர். சிலர் பக்தர்களுக்குப் பானமும், அண்ணதானமும் வழங்கி புண்ணியம் தேடினர். சிலர் போட்டிக்காக தேங்காய் உடைத்தனர். வாங்கிய தேங்காயை உடைக்க ஆள்பலம் இன்றி சிலர் தத்தளித்தனர். வழக்கம்போல கொம்தாருக்கு எதிரே உள்ளே தெருவில் தேங்காய் குவியலுக்குப் பஞ்சம் இல்லை.
பொருளாதார சரிவு பக்தர்களைத் துளியும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது. அல்லது, பொருளாதார அடியை, கடவுளுக்கு முன் துட்சமாக எண்ணி விட்டனரோ என்னவோ? கல்வி நிதி என்றால் மூக்கால் அழுபவர்கள், கடவுள் நன்கொடைக்குப் பாரி வள்ளலாய் மாறுவது ஏனோ? சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா? கோயிலுக்கு செலவு பண்ண வேண்டாமுன்னு சொல்லலை, கல்விக்கும் அதே அளவு, அல்லது அதில் பாதியை செலவு அளிக்கலாமே?

சரி, நம்ம கதைக்கு வருவோம். சிறு சிறு மேகங்கள் சூரிய ஒளியை 11.30 மணிவரை வடிக்கட்டி அனுப்பி வைத்தன. அதற்குப் பின் அவற்றுக்குச் சோம்பல் வந்ததால் என்னவோ, வரும் என்ற எண்ணிய தூறல் ஓடி ஒழிந்துக்கொண்டது.

நண்பகலுக்கு மேல் வெயிலின் அட்டகாசம், பக்தர்களைப் பாடாய் படுத்தியது. எதற்கும் அஞ்சா நெஞ்சங்கள் முருக பக்தர்கள், தேங்காய் வீச்சில் பின் வாங்கவில்லை.

சுற்றுபயணிகளுக்கு எங்கிருந்து கிடைக்குமோ உயர்தர புகைப்படக்கருவிகள்... தோளில் ஒரு பை, அதில் வித விதமான ஒளிப்பெருக்கி லென்ஸ்கள். ஆளுக்கொன்று ஏந்திக் கொண்டு வளைந்து நெளிந்து போட்டோ எடுத்தனர். அவர்களுக்குப் போட்டியாக பத்திரிக்கையாளர்கள் மாய்ந்து மாய்ந்து போட்டோ எடுத்தனர், நமக்கா தெரியாது, எடுத்தது ஆயிரம் என்றாலும், போடப்போவது ஒன்றோ இரண்டோ...

பக்தர்கள் தார் சாலையைத் தேங்காயால் அடித்து நொறுக்கும் பணியில் திளைத்திருந்தனர், அவ்வப்போது சிறு ரக ட்ராக்டர், உடைப்பட்ட தேங்காய் பிரவாகத்தை ஒரு பக்கமாக குவித்தது. அப்போத்தானே நல்லா உடைக்கலாம். கருமமே கண்ணாய் இருந்த ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர் மெய்மறந்து போட்டோ எடுத்து குவிப்பதில் மூழ்கி போய் இருந்தார். அதி அருகில் சென்று தேங்காய்க்கும் தார் சாலைக்கும் நடக்கும் யுத்தத்தைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வந்த ட்ராக்டரைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை, அவர் கவனித்த நேரத்தில் கால் அவர் வசம் இல்லை; ட்ராக்டரின் வட்டையின் அடியில் அது சிக்கிக் கொண்டது. பரபரப்பு. தெரித்துப் போயிருக்க வேண்டும் ஓட்டுனர், அவரது காலினை உடனடியாக விடுதலை செய்தார். வண்டியை விட்டு இறங்கி திருதிருவென விழித்தார், கலங்கி இருக்க வேண்டும், தவறு முழுக்க முழுக்க அவரோடது இல்லை என்றாலும் கூட.
அடிப்பட்டவரின் எலும்பு நிச்சயம் நொறுங்கி இருக்க வேண்டும். அவர் காலணியைக் கழற்றவே இல்லை. அவர் வலி தாங்காது பக்கத்தில் இருந்த சக நண்பர் தோளில் சாய்ந்தார். தோள் கொடுப்பான் தொழன் என்பது இதுதான் போல.

வடக்கிலும் தெற்கிலும் ஏகப்பட்ட நெரிசல், அம்புலன்ஸ் கூட்டி வருவது அசாத்தியமே, மிதித்த ட்ராக்டரே பரிகாரத்தைத் தேடிக்கொண்டது. அவரை அதிலேயே ஏற்றிக் கொண்டு முதலுதவி இடத்துக்குக் கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவரை வேறொரு சாலையில் பார்த்தோம், காமிராவில் அதே தேங்காய் உடைக்கும் அழகைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார். என்ன கடமை உணர்ச்சி. காலுக்கு ஒன்னும் ஆகலையா? நிச்சயம் கடவுளின் கிருபை என்றே முழங்கி இருப்பார்.

பிறகு உச்சி வெயில். சிவன் கோயிலுக்கு முன் சன்வே விடுதியின் அன்னதான பந்தல். “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” என்ற பக்தி பாடல், புதிதாய் மீள்கலவையில் (ரீமிக்ஸ்) அதிதுரித இசையில் எல்லா பந்தல்களிலும் துள்ளிக் கொண்டிருந்தது. அதிலும் வேடிக்கை, ஒரு நாடோடி வகை பாடல் ஹிப்ஹோப் ரகமாய் மாற்றப்பட்டிருந்தது. இடையிடையே, ரேப் (ஏகாரத்தைத் தவறாக உச்சரித்தால் நான் பொறுப்பிலை) குரல். என்ன கொடுமடா சாமி. (“ஏரிக்கரை ஓரத்திலே, தோசை ஒன்னாங்க, தோசை ரெண்டாங்க” இப்படித்தான் வரும்ன்னு நினைக்கிறேன், அந்த பாட்டு). இன்னொரு விசயம், முதல்ல 4 பையனுங்கத்தான் இந்த பாட்டுக்கு ஆடிச்சு இருந்தானுங்க, அப்புறமா ரெண்டு பொன்னுங்க வந்திச்சுங்க, சுமார் 15-16 வயசு இருக்கும். நெருப்பாட்டம். அதுங்கள பாத்துட்டு, கொஞ்ச நேரத்துல பசங்க குமிஞ்சிட்டாய்ங்க. எல்லார் பார்வையும் அங்கேதான். நல்லவேளை, முதல்ல சொன்ன கடமையான புகைப்படக்காரர் அங்கில்லை, இருந்திருந்தால் எல்லார் மானமும் கப்பல் ஏறியிருக்கும்.

மதியத்துக்கு அப்புறம் நான் வீடு திரும்பிட்டேன், கூட்டாளிங்க எல்லாம் அங்கேயே தங்கி மறுநாள் தான் கிளம்பி வந்தானுங்க, மிச்ச கதைய அவனுங்க கிட்டத்தான் விசாரிக்கனும்.

என்னவோ எழுத வந்து என்னமோ எழுதி முடிச்சிருக்கேன், அதனால தலைப்பு, “என்னமோ”ன்னே வெச்சிக்கலாம், தப்பில்லையே?














புதன், 4 பிப்ரவரி, 2009

இந்த தாகம் பெருசு...

இந்த தாகம் பெருசு!

தாகத்துக்குத் தண்ணி குடிக்கிறோமா? இல்ல சுகத்துக்காக குடிக்கிறோமா? இப்படி ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போலுக்கு... ஏன்ன்னு கேக்குறிங்களா? படையே நடுங்கும்ன்னு சொன்னாங்க பாம்ப பத்தி. இங்க பாம்பையே படியெடுத்து உறிஞ்சி குடிக்கிறாங்க... திடமான மனம் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்...

பாம்பு வைன் என்பது ஒருவகை மதுபானம். ஒரு கண்ணாடி குடுவைக்குள் விஷம் பொருந்திய ஒரு முழு பாம்பு அடைக்கப்படுகிறது. இதுவகை பானம் வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்டு தென்கிழக்காசிய பல இடங்களில் கிடைக்கப் பெறுகிறது. பாம்புகள், குறிப்பாக விஷம் பொருந்தியவை, பெரும்பாலும், இறைச்சிக்காக பதம் செய்யப்படுவதில்லை. அவற்றின் விஷத்தை மதுபானத்தில் சேர்ப்பிக்கவே அவை பதப்படுத்தப் படுகின்றன. இருப்பினும், பாம்பின் விஷமானது புரதம் கொண்டிருப்பதால், அவை விரிக்கப்பட்டு (unfolded) செயல் இழந்து கிளாவு இழி (inactivate) நிலை அடைகின்றன. இதற்கு காரணம் எதனோலினால் (ethanol) ஏற்படும் இயற்கை நீக்கத்தின் (denaturation) தாக்கமாகும்.
(பாம்பு படம் எடுக்குது... உசாரய்யா உசாரு)


ஒரு பெரிய விஷப்பாம்பை ஒரு சுண்டக் கஞ்சிக்கான கண்ணாடி ஜாடியில் புகுத்துகின்றனர். பெரும்பாலும் அதனோடு சிறுவகை பாம்புகளும், ஆமைகளும், பூச்சிகளும், பறவைகளும் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப் படுகின்றன. இவ்வகை வைன்கள், நலம் ஊக்கி அல்லது உற்சாக பானமாக சிற்றளவில் பருகப் படுகின்றன.


பாம்பின் உடல் திரவங்கள் வைனில் கலக்கப்பட்டு, அது உடனேயே சிற்றளவில் பருகப்படுகிறது. பாம்பின் குருதி-வைன் எப்படி தயாரிக்கப் படுகிறது? பாம்பின் தசைப் புடைப்புகள் அரியப்பட்டு, அதிலிருந்து வழியும் குருதி சேகரிக்கப் படுகிறது. பிறகு அதைத் தூய எதனாலோடு அல்லது சோற்று வைனோடு (சுண்டக்கஞ்சி???) சேர்த்து கலவைக் கிடங்கில் கலக்கப்படுகிறது. இதே செய்முறையில் பாம்பின் பித்தப் பையிலுள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம்தான் பாம்பு பித்தநீர் வைன். பாம்பின் இறைச்சி, கல்லீரல், மற்றும் தோளால் ஆன உணவுப் பண்டங்கள் இந்த பானத்தோடு சேர்த்து உண்ணப் படுகின்றன.




(வெள்ளைக்கார பெருசு, குடிச்சிட்டு உசுரோட இருந்தியா?)

மேற்கண்ட செய்தி உண்மையா பொய்யான்னு என்னைக் கேட்காதிங்க... பன்னனுப்பி மடல்ல எனக்கு வந்திச்சு, இங்கே போட்டேன்... அவ்வளவுதான்

மொழியில குத்தம் குறை இருந்தா, கீழே மறுமொழியிட்டு குமுறுங்க...

புதன், 28 ஜனவரி, 2009

இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு



இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு


25 ஜனவரி 2009, ஞாயிறு. ஞாயிறைத்தான் தெளிவாகக் காண முடியவில்லை. வானம் மப்பும் (அதற்கு யார் ஊற்றிக் கொடுத்ததோ) மந்தாரமுமாய் சிறுசிறு தூறல்களைச் சிந்திக் கொண்டிருந்தது. அதென்ன மாயமோ மர்மமோ தெரியல, பதிவர் சந்திப்புன்னா, மழையும் அழையா விருந்தினராய் வந்திடுது.

மதியம் இரண்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, மூன்றுக்குத் துவங்கியது. அடிச்சி புடிச்சி ரெண்டு மணிக்கெல்லாம் ஏ.ஆர்.ரகுமான் உணவகத்துக்குப் போயிட்டேன். அங்க, விக்னேஷ் சொன்ன தமிழியல் நடுவம் இருக்கிற அறிகுறி ஏதும் தெரியல. சுத்தி சுத்தி மோட்டர்ல ஊர்வலம் அடிச்சி, அப்புறமா விக்னேசுக்குப் போன் பண்ணேன். அவர் சொன்னாரு, “நீங்களாவாது ஏ.ஆர்.ரகுமான் கடை வரைக்கும் போயிட்டீங்க, நாங்க இன்னமும் ஏ.ஆர்.ரகுமான் கடையைய தேடிட்டு இருக்கோம்.” இதுக்கு ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே... என்ன அது?

சரின்னுட்டு பைக்க ஓரமா நிப்பாட்டிட்டு அவங்களுக்குக் காத்திருந்தேன். பாரிட் புந்தார் (பேராக் மாநிலம்) நகரத்துல சீனப் பெருநாளுக்கான எந்த அலட்டலும் பாதிப்பும் தெரியல. ஒருவேளை அங்கே சீனர்கள் அதிகம் இல்லையோ என்னவோ.

இதற்கிடையில், கடையில் தமிழர்கள் கொஞ்ச பேரு கூட்டமா அமர்ந்து உணவருந்திக்கிட்டு இருந்தாங்க. அவங்க இவங்களா இருக்குமோ? போய் பேச்சு கொடுக்கலாமா? இவங்க அவங்களா இல்லாட்டி? அவங்கக்கிட்ட நீங்க அவங்க தானேன்னு கேட்டு அவங்க நீங்க எவுங்கள அவங்களானு கேட்குறிங்கன்னு கேட்டு குழப்பிட்டா? இப்படி தெளிவாக ஆய்ந்து, சிந்தித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன...? மனம் படர் தாமரையாய் விரிந்தது, சிந்தித்த மூளையை மெச்சியது.

பார்வை எதிரே வந்த மகிழுந்தின் மீது பாய்ந்தது. நான்கு பேர், உள்ளிருந்து விக்னேஷ் கையசைத்தார். அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து உணவகத்தின் உள் வரவேற்பு நடந்தது. தரை சிவப்பு நிறமுங்க. விக்னேஷ், து.பவனேஸ்வரி, குமரன், மற்றும் இன்னொரு புதிய நண்பர் வந்திறங்கினர்.

முன்னம் கடையினுள் பார்த்த தமிழ் அன்பர்கள், சந்திப்புக்காக வந்தவர்களே. தெளிவாகச் சொன்னால் – ‘அவங்க’த்தான். மதிய நேரம் இல்லையா, பசிக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தனர். நான் வீட்டிலேயே போதுமெனும் அளவுக்கு நிரப்பியதால், அங்கே சாப்பிடவில்லை. து.பவனேஸ் உண்ணாவிரதம் (அரசியல் நோக்கான்னு தெரியல). கிட்டிய சில நிமிடங்களில்கூட ஏதோ ஒரு நூலை வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டிருந்தார். படிக்கிற புள்ளைங்க.

அனைவரும் உண்டு மகிழும் வரை காத்திருந்தோம். அப்போது உணவருந்திய நம் பதிவர் நண்பர்களின் கட்டணச் சீட்டை ஒருவர் மர்மமாகச் சேகரித்து தாமே செலுத்துவதாக உணவக ஊழியரிடம் கிசிகிசுத்தார். அவர் வேறு யாரும் அல்லர், கோவி. மதிவரன் தான். கோவி நீங்க நிஜமாவே ரொம்ம்ம்ம்ப ரொம்ப நல்லவருங்க.

ஏற்கனவே சிலர் வந்திருக்க, மேலும் ஒரு சிலர் வந்தவுடன் சுப.நற்குணனின் ஆசியால் தமிழியல் நடுவத்துக்கு விரைந்தோம். உணவகத்தை அடுத்து இரண்டு கடைகள் தாண்டி, மூன்றாவது மாடியில் அந்த அறை.

வளமையான மேசை, நாற்காலி, குளிரூட்டி, ஒளிப்பெருக்கித் திரை என அமர்க்களமாக இருந்தது அந்த அறை. திரும்பும் திசை எல்லாம் ஆளுயர சுவரொட்டிகள். திருவள்ளுவரும் வல்லளாரும் கம்பீரமாக ஆங்காங்கே பொன்மொழிகளோடு வீற்றிருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு (ஒலிப்பதிவு வடிவில்) நிகழ்வு தொடங்கியது.

“கும்பிடப் போன தெய்வம்......“ என்ற ஒரு சினிமா பாடலில், முதலில் மெதுவாக ஆரம்பமாகி, “என்னடா இழுவ” என்ற மிரட்டலுக்குப் பிறகு, விறுவிறுப்பாக பாடல் தொடரும் இல்லையா? அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, ஓரிரு செய்யுள்கள் நிறுத்தி நிதானித்து வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டி ‘தொபக்கட்டி’யென சரிந்து விழுந்து கலவரத்தை ஏற்படுத்த, தமிழ்த்தாய் வாழ்த்தும் சூடு பிடித்து விறுவிறுப்புடன் இசைந்தது. (எதுக்கு எத முடிச்சி போடுறதுன்னு விவஸ்த இல்ல – அப்படின்னு நீங்க திட்டுறது காதுல விழுது, மனசுல பட்டத சொன்னேன், அவ்வளவுதான்....) எழுச்சியான வரிகள், ஆர்ப்பாட்டம் இல்லாத இசை. நண்பர்கள் சிலர் பாட்டோடு சேர்ந்து முணுமுணுத்தனர். இதற்கு முன் இப்பாடலைக் கேட்டதாய் ஞாபகம் இல்லை, ஏற்பாட்டு குழு இந்தப் பாடலை இணையத்தில் எப்படி பெறுவது என சொன்னால் நலம்.

அவைத் தலைவராய் கி.விக்கினேசு பொறுப்பேற்றி இருந்தார். நான் இதை சொல்லியே ஆகனும் (உபயம்: ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா) - கி.விக்கினேசு வேறு, விக்னேஷ்வரன் அடைக்கலம் வேறு. கி.விக்கினேசுவும் ஒரு பதிவு எழுதி வருகிறார். கவிதை பிரியர். அவர் பேசும்பொழுது மலேசிய செய்தி வாசிப்பு புகழ் பாண்டிதுரையின் தமிழ் உச்சரிப்பு பாணி ரொம்பவே எட்டிப்பார்த்தது. அழுத்த திருத்தமாக. முக சாயலும் லேசாக சந்தேகத்தைக் கிளப்ப, நிகழ்ச்சி முடியும் தருவாயில், அருகே சென்று கேட்டேன், நீங்க பாண்டிதுரையின் ரசிகரா என்று.... “ஆம்” என்று சொல்லி இருந்தால், உங்களுக்கு அவர் சொந்தமா என்று புரளியைக் கிளப்பி இருக்கலாம். சிரித்துக் கொண்டே அப்படி எல்லாம் இல்லை என சொல்லி நழுவி விட்டார். அடுத்த முறை பேட்டி எடுத்திட வேண்டியதுதான்.

வரவேற்புரை வழங்கியவர், திரு சுப. நற்குணன். நிறைய செய்திகளையும், கருத்துகளையும் பக்குவப்பட்ட பேச்சாளர் பாணியில் பகிர்ந்துக் கொண்டார். வலைப்பூக்களுக்கு சிலர் வைத்துள்ள வேடிக்கையான அல்லது காலித்தனமான பெயர்களைச் சுட்டி வந்திருந்த செம்பருத்தி இதழின் ஒரு கட்டுரையைப் படித்துக் காட்டினார். சிரிப்பலை பொங்கியது.

தமிழ்ப்பதிவர்களின் வலைப்பதிவுகளைச் சுமந்து பவர்பாயிண்ட் படைப்பு ஒன்று கணினித்திரையில் காட்டப்பட்டது. அதைச் சேகரித்தமைக்கும், ஒவ்வொரு பதிவுக்கும் கவிதையான அறிமுகத் தலைப்பு இட்டமைக்கும் நிச்சயம் ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்டியே தீரவேண்டும்.

பிறகு வழக்கம் போல அறிமுகச் சுற்று. ஒருவர் பின் ஒருவராக அறிமுகம். ஏறக்குறைய முப்பது பேர் கொண்ட கூட்டம். பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர் கல்லூரி மாணாக்கர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசு அதிகாரிகள்/ஊழியர்கள், பொது சேவையாளர்கள், தனியார் ஊழியர்கள் என பல தரப்பட்ட பதிவர்களும், பதிவ எண்ணம் கொண்டிருந்தோரும் அதில் அடங்குவர். போம்பா ரவியின் ஆய்வுக் கட்டுரை, தமிழ்மாறனின் குழந்தைகளுக்கான வலைப்பூ, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முன் கருத்தை மட்டுறத்த வேண்டுமா என்ற பல ஐயங்களும், கேள்விகளும் வெளிக்கொணரப் பட்டன. (குறிப்பெடுக்க இயலவில்லை, எல்லார் பேசியதையும் நினைவில் வைக்க முடியவில்லை, வருந்துகிறேன்)

சிறப்புரை ஆற்றியவர் “மலேசிய இன்று” சி.ம.இளந்தமிழ். அப்பப்பா, என்ன தன்னடக்கம். இயன்றவரை தூய தமிழில் தகவல் தொழில்நுட்பத்தை அவர் பேச முற்பட்டது போற்றுதலுக்கு உரியது. பல விசயங்களைத் தடையின்றி மறைவின்றி பகிர்ந்துக் கொண்டார்.

விக்னேஷ்வரன் முந்தைய சந்திப்பின் மணித்துளிகளைப் பகிர்ந்துக்கொண்டார். உள்ளூர் நாளிதழில் தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தைச் சொன்னார். இணைய ஊடகத்தின்பால் அச்சு ஊடகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைக் கோடி காட்டினார்.

பிறகு விக்னேஷ்வரன் அடைக்கலம் சில நிமிட ஆசானாக வேடம் பூண்டார்; கையில் பிரம்பு தான் இல்லை. புதிதாய் வலைப்பதிவு துவங்க எண்ணும் அன்பர்களுக்கு வழிகாட்டினார்.

(நன்றி: புகைப்படம் - மலேசிய இன்று)


பிறகு சிறு அளவளாவல். சிரித்த முகத்தோடு முடிவுரை வழங்கியவர் ரொம்ப நல்லவர் - கோவி மதிவரன். திருக்குறள், செய்யுள் என அவரது உரை மிளிர்ந்தது. இவரது வலைப் பதிவில் கேள்வி அங்கம் இருக்கிறதாம். நண்பர்களே, கேள்வி இருந்தால் உடனே இவரை நாடுவோம். (விவேக் கேட்பது போன்ற ‘தாஸ்’ கேள்விகள் கேட்பதாயினும் கோவி கோவிக்காமல் பதில் சொல்லுவார்)

பிறகு விடை பெறும் நேரம். சுப நற்குணன் அனைவருக்கும் தமிழ் நாட்காட்டியையும், ‘நாள் வழிபாடு’ என்னும் கையடக்க நூலையும் அன்பளிப்பாக அளித்தார். அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டேன்.

து.பவனேஸ் அந்த கவிதாவைக் கூட்டி வரவே இல்லை, கேட்டதுக்கு அவரது தோள்பைக்குள்ளே இருப்பதாய் சொல்லி ஏமாற்றி விட்டார். விக்னேஷ் அடைக்கலத்திடம் இம்முறை அதிகமாகப் பேச முடியவில்லை. சென்ற முறை சந்தித்த பதிவ நண்பர்கள் டாக்டர் சிந்தோக், மு.வேலன், இனியவள் புனிதா, கவிஞர் பிரான்சிஸ், மூர்த்தி முதலியோர் மிஸ்ஸிங். விவேகானந்தர் சதீசு, தேடுபவன், மைஃப்ரண்ட் அனுராதா, ஆய்தன் போன்றோரை இம்முறையும் காண முடியவில்லை.

(எனது கட்டுரையில் ஏதும் அங்கம் அல்லது கருத்து விடுபட்டிருப்பின் அது எனது ஞாபக மறதியே தவிர, இருட்டடிப்போ அல்லது நுண்ணரசியலோ அல்ல.)

மேலும் விபரம் அறிய ஏனைய நண்பர்களின் வலைப்பதிவையும் வலம் வரவும்.

இந்த கட்டுரையைப் பொறுமையுடன் வாசித்தவரா நீங்கள்? அப்படியானால், உடனே கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்.

திங்கள், 15 டிசம்பர், 2008

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு




14 டிசம்பர் 2008 - மலேசிய தமிழ் வலைப்பதிவர் வரலாற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நாளாகவே இனி வருங்காலங்களில் உணரப்படும். தலைநகரில் செந்தூல் என்ற சிற்றூரில் முதலாவது மலேசிய தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடைப்பெற்றது.



கெடாய் காரி கெப்பாலா ஈக்கான் (மீன் தலைக்கறி கடை) என்ற உணவகத்தில் மதிய நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. இடத்தை தேடிப் பிடிக்கவே படாத பாடு பட்டோம், எங்களில் பலர். நான் பினாங்கில் இருந்து பேருந்தில் சென்று புடுராயா பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அங்கே விக்னேசும் டாக்டர் சிந்தோக்கும் காத்துக் கொண்டிருந்தனர். மெது உணவு அருந்திவிட்டு செந்தூலுக்கு எல்.ஆர்.டீ மூலம் சென்றோம். அங்கே இனியவள் புனிதாவும் உணவகத்தைத் தேடும் வேட்டையில் இணைந்துக் கொண்டார். மழை தூற, பக்கத்தில் இருந்த ஓர் உணவகத்தில் தஞ்சம் புகுந்தோம். அந்த உணவகம்தான் “மீன் தலைக்கறி கடை” என பின்பு உறுதி செய்யப்பட்டது.

னி விவரங்கள் செய்தி வடிவில்:


அங்கே எழுத்தாளரும் கவிஞருமான திரு ஏ.எஸ்.பிரான்சிஸ் காத்துக் கொண்டிருந்தார். ஓர் அகண்ட மேசையில் அமர்ந்தோம். ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வந்து சேர்ந்தனர். இடைப்பட்ட நேரத்தில், கவிஞர் பிரான்சிஸ் தமது “சாசனம்” மற்றும் “மக்கள் சக்தி” புத்தகங்களை எங்களிடம் விநியோகித்தார். ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ள அறிமுக சுற்று நடந்தது. பள்ளிகளில் ஒரியேண்டேஷன் என்பார்களே... அது போல
உணவகம் என்றாலே கூச்சலுக்கும் இரைச்சலுக்கும் பஞ்சம் இருக்காது. அங்கேயும் அதே நிலைதான். ஆதலால், அறிமுக சுற்றில் எல்லார் பேசியதையும் ஒரு குத்து மதிப்பாகக் கேட்டு தான் இங்கே எழுதி உள்ளேன், பொறுத்தருள்க, சந்திப்பில் கலந்துக் கொண்ட நண்பர்கள் - திருத்த தயாராய் இருங்கள்.


முதலில் கவிஞர் பிரான்சிஸ் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார். இதுவரை இருபது புத்தகங்கள் எழுதியுள்ளார். அண்மையில்தான் இணைய வலைப்பூவில் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்தார். “கயல்விழி” இவரது கைவண்ணத்தில் மலரும் வலைப்பூ.


அவரை அடுத்து திரு மு.வேலனின் அறிமுகம். “அரங்கேற்றம்” இவரது பதிவேற்றம். ஆக்டோபரில் பிள்ளையார் சுழியிட்டு இன்றுவரை எழுதி வருகிறார். பொதுவாக தன்னைச் சுற்றி நிகழ்வதை மையமாக வைத்தே தனது வலைப்பூ பின்னப் படுவதாகச் சொன்னார். பன்னிரண்டு காலமாக இணையத்தில் வெறும் வாசகராகவே இருந்தவர். வலைப் பதிவு மக்களிடையே நல்ல கருத்து பரிமாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மூன்றாவது அறிமுக நண்பர், திரு ஜேஷாண்ட் (பெயர் சரியாக எழுதப்பட்டுள்ளதா என நண்பர்களே, சரிபாருங்கள்). இவர் இன்னும் வலைப்பூ தொடுக்காத நண்பர், விரைவில் துவங்குவார். “இங்கே எதுக்கு வந்திருக்கேன்ன்னு எனக்கே தெரியலை” என்று சிரிக்காமல் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


இவரை அடுத்து குமாரி பவானிஸ்-இன் அறிமுகம்“கனைகள்” என்ற ஒரு மாத வயதான வலைப்பூவின் உரிமையாளர். கவிதைகள் நிறைய எழுதுவாராம். தன்னை வலை உலகத்துக்கு இட்டு சென்ற வேலனை அப்போது நினைவு கூர்ந்தார். பலருக்கு வலைப்பதிவைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று வருத்தப் பட்டார். பதிவர்களின் மொழி திறன் தன்னைப் பிரமிக்க வைப்பதாகச் சொன்னார்.


குமாரி இனியவள் புனிதா என்னைப் போலவே அமைதியாகவே இருந்தவரில் ஒருவர். ஈராயிரத்தாறில் இருந்து இவர் எழுதி வரும் வலைப்பூ – “ஜில்லென்று ஒரு மலேசியா" . இவர் ஓர் அரசாங்க அதிகாரி, ஆக நண்பர்களே சற்று கவனம்...


அடுத்து திரு அனந்தனின் அறிமுகம். என்னைப் பற்றி என்ன சொல்வது? வெறும் நான்கு மாதமாகத்தான் “முடிவிலானின் எழுத்துக்கள்” என்ற வலைப்பூவின் மூலம் எழுதி வருகிறேன். சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.


என்னை அடுத்து, திரு ஜி.எஸ்.ஷான் அவர்களின் அறிமுகம். இன்னும் வலைப்பதிவு ஏற்படுத்திக் கொள்ளாதவர். தன்னை ஓர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். திரு சதீசின் மூலம் இந்த சந்திப்பு தெரிய வந்ததாகச் சொன்னார். வலைப்பதிவில் காலடி வைக்க நிறைய உழைக்க வேண்டும் போல என புன்னகையோடு சொன்னார்.


அடுத்த அறிமுகம், வந்தவர்களில் பலருக்கு ஏற்கனவே அறிமுகம். இன்னும் சொல்லப் போனால் இந்த சந்திப்பின் காந்தம், திரு விக்கினேஷ்வரன் அடைக்கலம். “வாழ்க்கை பயணம்” இவரின் வலைப்பூ. 2006ல் இருந்து வாசிக்கத் துவங்கியவர் இவ்வாண்டு எழுதத் துவங்கி உள்ளார். இணையத் தாக்கம் இளையோரிடம் குறைந்துக் காணப்படுவதாகத் தெரிவித்தார். சிங்கை வலைப்பதிவர்களின் கன எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டினார். நமது வலைப்பதிவர்களின் கருத்து சுதந்திரத்தைப் பற்றியும் கேள்வி எழுப்பினார்.


அடுத்த அறிமுகம் டாக்டர் சிந்தோக். தனக்கென தனி வலைப்பதிவு ஒன்றைப் பின்னாமல் இருந்தாலும், நிறைய வலைப்பதிவை இன்றுவரை வாசித்து வருவதாகவும், வலைப்பூக்களுக்கு மறுமொழி இடுவதில்தான் தனக்கு விருப்பம் அதிகம் என சொன்னார். 2003 துவங்கி இவரது இணைய வலைப்பூ வாசிப்பு பழக்கம் இன்றுவரை நீடித்து வருகிறது. இணையத்தைப் பற்றியும் இணையத்தில் தமிழ் ஊடுருவல் பற்றியும் நிறையவே சொன்னார். “ஏன் நீங்கள் ஒரு தனி வலைப்பூ பின்னக்கூடாது?” - சபையில் எழுந்தக் கேள்விக்கு “சேம்பேறித்தனம்தான் காரணம்” என நகைச்சுவையோடு சமாளித்தார். வலைப் பதிவாளர்களுக்கு ஒரு முன்னோடி டாக்டர் சிந்தோக் என வர்ணித்தார், விக்னேஷ்.


திரு குமரன் மாரிமுத்து வேறொரு நிகழ்வில் கலந்துக் கொண்டு, கிட்டிய நேரத்தில் நம்மோடு இணைந்தார். விரைவில் வலைப்பூ துவங்க ஆவலாய் இருப்பதாய் சொன்னார். இவர் முன்பு வானொலியில் பேசி உள்ளதாகவும் தெரிவித்தார். நாளேடுகளுக்கு தான் அனுப்பும் எழுத்துக்கள் துண்டாடப் படுவதாகவும், இணையமே இனி நடுநிலை ஊடகம் என கோடி காட்டினார்.


திரு நேசா, ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதுபவர். கூடிய விரைவில் தமிழிலும் எழுதவுள்ளார். தமிழில் தட்டச்சு செய்வதைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டார், இங்கே கூடி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாய் தெரிவித்தார்.


சந்திப்பில் சஞ்சிகை வெளியீடு பற்றி பேசப்பட்டது. ஆண்டுக்கு இரு மலர்கள் என மு.வேலன் முன்மொழிந்தார். அச்சு இதழ்கள் எப்படி முறைப்படி செய்வது என விக்னேஷ், கவிஞர் பிரான்சிஸின் ஆலோசனையை நாடினார். பதிவர்கள் ஒருமித்த நோக்கத்தோடு எழுத வேண்டும் என பவானிஸ் முன்மொழிந்தார். அவ்வாறு செய்வதால், எழுத்தாளர் சுதந்திரம் மறித்துப் போகலாம் என விக்கினேஷ் தெரிவித்தார். பொது மக்களிடையே பதிவர் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என பவானிஸ் மேலும் கருத்து தெரிவித்தார். டாக்டர் சிந்தோக் பேசுகையில் இணையமே இனி மக்களுக்கு சிறந்த ஊடகம் என் ஆணித்தரமாகச் சொன்னார்.


முக்கிய அலுவல் இருப்பதால் பவானிஸ், முவேலன் மற்றும் ஜேஷாண்ட் விடைபெற்றனர்.


விக்னேஷும் டாக்டர் சிந்தோக்கும் வலைப்பூ எப்படி பதிவது, எவ்வாறு பின்னுவது போன்ற சூட்சமங்களைப் புதியவர்களுக்காக கற்று கொடுத்தனர்.
சில நேரம் கழித்து, எங்கே எங்கே என தேடப்பட்ட திரு மூர்த்தி வந்தார். கலகலப்பாக பேசினார். அவர் தான் அந்த சந்திப்புக்கான இடத்தை தேர்ந்தெடுத்தவர். அவர் அன்றைய இறுதி மற்றும் பன்னிரண்டாவது அறிமுகம். சித்த வைத்தியர். விக்னேஷின் தீவிர ரசிகர் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.


அடுத்த சந்திப்பு பற்றி பேசப்பட்டது. மேலும் சில நிமிடங்கள் பேசினோம், புகைப் படம் எடுத்துக் கொண்டோம். பின்பு மகிழ்ச்சியுடன் கிளம்பினோம்.


மேலும் விரிவான செய்திகளைப் பெற இதர நண்பர்களின் வலைப்பூக்களை வலம் வரவும்.


இப்போது கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்!

செவ்வாய், 25 நவம்பர், 2008

இழப்பு யார் பொறுப்பு?


- ஒரு தமிழ் தலைவரின் உண்மை சம்பவம்



(தமிழினத்தைப் பற்றி எழுதக் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது. உடனே எழுத சரக்கு இல்லாத்தால், என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு கட்டுரை கீழே. விஞ்ஞான உலகில் கொடி கட்டி பறக்கும் ஒரு தமிழரின் கட்டுரை.)



ஒரு தலைவருக்குத் தெரிய வேண்டும் – இழப்பை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று”ஒரு விஞ்ஞானியின் செவ்வி


கேள்வி : உங்கள் சுய அனுபவத்தைக் கொண்டு, எப்படி ஒரு தலைவன் ஓர் இழப்பை நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு தர முடியுமா?


பதில் : எனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறேன் . 1973றாம் ஆண்டில், இந்திய செயற்கைகோள் பாய்ச்சும் செயல் திட்டத்துக்கு இயக்குனரானேன். எங்கள் இலக்கு 1980தாம் ஆண்டுக்குள் “ரோகினி” செயற்கைகோளை விண்வட்டத்தில் சேர்த்திட வேண்டுமென்பது. போதுமான மானியம் மற்றும் மனித வளம் எனக்கு அளிக்கப்பட்டது. – ஆனால், 1980க்குள் செயற்கைகோள் விண்வெளிக்குப் பாய்ச்சப்பட வேண்டும். அறிவியலாளர்கள், தெழில் நுட்ப வல்லுனர்கள் என ஆயிரக் கணக்ககானோர் அவ்விலக்கை நோக்கி செயல்பட்டனர்.

1979தாம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் – நாங்கள் நினைத்தோம் நாங்கள் தயார் என்று. செயல்திட்ட இயக்குனர் என்ற முறையில், அதைப் பாய்ச்ச நான் இயக்கம் செய்யும் மையத்துக்குச் சென்றேன். பாய்ச்சுவதற்கு 4 மணித்துளிகள் முன்னம், கணினி அனைத்து செயலிகளின் நிலைத்தன்மையைச் சரி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழிந்தப்பின், அந்த கணினியானது பாய்ச்சலை நிறுத்தியது; திரையில், சில கட்டுபடுத்தும் மின்பொறிகள் செயலிழந்துள்ளதாகக் காட்டப்பட்டது. எனது வல்லுனர்கள் – 4கிலிருந்து 5 பேர் வரை என்னுடன் இருந்தனர் – என்னைத் துவண்டு விட வேண்டாம் எனக் கூறினர். அவர்களது கணக்குப்படி போதிய எரிவாயு உள்ளது என்றனர். ஆதலால், நான் கணினியின் உதவி இன்றி, நேரிடையாக விண்கலனைப் பாய்ச்சினேன். முதல் படியில் அனைத்தும் செவ்வனே நடந்தன. இரண்டாம் படியில் பிரச்சனை உருவெடுத்தது. விண்வட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டிய செயற்கைகோள், முழுவதுமாக வங்கக் கடலில் புதைந்தது. அது பேரிழப்பு.


அதே நாள், இந்திய விண் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் சத்தீசு தவான், செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். செயற்கைகோள் பாய்ச்சப் பட்டது காலை 7.00. கூட்டம் நடந்தேறியது காலை 7.45க்கு – ஸ்ரீஹரிகோத்தாவில். அமைப்பின் தலைவர் என்ற முறையில், பேராசிரியர் தவான் அவர்களே பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அந்த இழப்புக்கு முழு பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். “இந்த குழு கடுமையாக உழைத்துள்ளது, ஆனால் இன்னும் தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுகிறது,”என கூறினார். இன்னும் ஒரே ஆண்டில், இந்த குழு வெற்றி அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். உண்மையில், நான்தான் அந்த இழப்புக்குக் காரணமானவன், இருப்பினும் பழியை அமைப்பின் தலைவர் சுமந்துக்கொண்டார்.


அடுத்த ஆண்டு, ஜூலை 1980டில், நாங்கள் மீண்டும் செயற்கைகோள் பாய்ச்ச முயன்றோம், இம்முறை வெற்றி கொண்டோம். நாடே குதூகலித்தது. மீண்டும் பத்திரிக்கையாளர் சந்த்திப்பு நிகழ்ந்தது. பேராசிரியர் தவான் என்னை ஓரமாக அழைத்துச் சொன்னார். “இன்றைக்கு சந்திப்பை நீ நடத்து.”

அன்றைக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுக்கொண்டேன். ஓர் இழப்பு என்றதும் அதை அதன் தலைவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், வெற்றி கிட்டிய போது, அதை அவரது குழுவிற்குச் சேர்த்து விட்டார். ஒரு சிறந்த நிர்வாக கல்வியை நான் ஒரு நூலிலிருந்து கற்கவில்லை. அந்த அனுபத்திலிருதே.


(செவ்வியைப் படித்து முடிக்கும் முன்னரே, அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டவர் யார் என்று உங்களில் பலர் அனுமானித்து இருப்பீர்கள்... ஆம் அவரேதான். மேற்கண்ட செவ்வி எனக்குப் பன்னனுப்பி மடலில் வந்தது, உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி)