பக்கங்கள்

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

உளறல் (1)

கல்


உனைத் தூற்றவே
எடுத்தேன் பேனாவை
உன்மீது சினங்கொள்ள
எனக்கென்ன உரிமையாம்
எழுதாமல் நிற்கிறேன்

அதென்ன உன் மேல்
எனக்கு அப்படியொரு
தீராத் தாகம்
பருகிய அனுபவமே
இல்லை என்றாலும்

இத்தனை முறை நீ
எனை மிதித்தும்
பலமுறை வேண்டாம் போ
என்று ஒதுக்கியும்
தீரவில்லை உன்னோடு
நான் கொண்ட மோகம்

அது மோகமா
அல்லது வயதின் வேகமா
மடப் பயலுக்கு
பகுத்தறிய தெரியவில்லை

சுய மரியாதையாம்
அரைசாண் மமதை
பலமுறை இந்த எண்சாணைக்
கட்டி இருத்தியும்
கால ஓட்டத்தில்
உன் காலடி தேடி
வந்திருக்கிறேன் தன்மானத்தை
அடகு வைத்து
அப்போதெல்லாம் தோன்றவில்லை
ஏன் நான் இப்படி என்று

உன்னோடு உறவாடிய
நாட்களைக் காட்டிலும்
ஊடலில் மூழ்கியதே அதிகம்
அச்சோ... ஊடலா?
காதலே இல்லை என்கிறாய்!

உனை விலகிச் செல்வதாய் எண்ணி
இன்னும் நெருங்கி வந்ததுதான் நிஜம்
தனிமை தருணங்கள் - நீ
பேசிய வார்த்தைகளால் அறைகின்றன
அறைகள் வலிக்காமல் போகுமா?
வலியும் சுகப்படாது எனில்
என்ன காதல்???

இவ்வேளை உணர்கிறேன்
நான் கொண்டது வெறும்
ஒருதலை காதல்தானோ!

காலங் கடந்து வருந்தி
என் செய்வேன்
என் விதி அவ்வளவுதான்
ஆறுதல் கூற
சுயம் உண்டு என்வசம்

சிரிப்பதாய் நினைத்து
கரைந்த காலங்கள் போதும்
கரையா கல் நீ என்று
உணர்ந்தப் பின்னும்

குன்றின் மேல் கல்
அவனை வணங்க
ஆயிரங் கோடி பக்தர்

நீயும் அவதாரம்தானோ என்னவோ
அறியாது அவசரப்பட்டது நான்தானோ
ஆதலால் அவதிக் கொள்கிறேன்





சனி, 9 ஆகஸ்ட், 2008

இவளும் ஒரு சிலந்தியே!


மைதியான இரவு பொழுது அங்கே. மேல் மாடியில் மட்டும் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அங்கே ஓர் இளம் பெண் அமைதிக்குப் புறம்பாக. கையை அடுத்து இப்போது கால்களை வருடிக் கொண்டிருந்தாள். இடையிடையே முதுகையும் தொட முடியாமல் தொட்டுச் சொறிந்துக் கொண்டாள். தினமும் இரவு நேரங்களில் குட்டி ராஜ்ஜியம் நடத்தும் இந்த கொசுக்களின் மீது அவளுக்குத் தீராக் கோபம்தான். ஒவ்வொரு வினாடியும் அவளுக்கு இப்போது முக்கியம். அவசர அவசரமாக பாடத்தை மனனம் செய்துக் கொண்டிருந்தவளின் காதருகே அக்கொசுக்கள் ரீங்காரமிட்டது அவளை ஆங்காரப்படுத்தியது.

புகைந்துக் கொண்டிருந்த கொசுவத்தியைச் சற்றும் பொருட்கொள்ளாமல், புயலாய் வந்த மின் விசிரியின் காற்றுக்கும் அல்வா கொடுத்து விட்டு, அந்த ஒல்லி பிச்சான் குழலியை மட்டும் அவை வட்டமிட்டு புடைச்சூழ்ந்தன. ஆனாலும் கொசுக்களின் முயற்சி அவளைக் கவர்ந்தது.

நாளை அவள் சரியாக எட்டு முப்பது மணிக்கெல்லாம் பள்ளியில் இருக்க வேண்டும். எட்டே முக்காலுக்குத் தேர்வு தொடங்கிவிடும். ஆனாலும் அவளது தோழிகள் யாவரும் காலை ஏழரைக்கெல்லாம் பாடசாலையில் குவிந்து விடுவர். முன்கூட்டியே சென்று, அவர்கள் சொல்லும் ஆருடங்களில் கலந்துக் கொள்ள அவளுக்கு நாட்டம் இல்லை.

அவளது இத்தகைய பதற்றத்திற்குக் காரணம் நாளைய வேதியல் தாள் 2-உடன் அவளுக்கான ஒட்டு மொத்த தேர்வுகளும் முடிவடைகின்றன. இதற்கு முந்தைய தாட்களை எல்லாம் கடலைத் திண்பது போல சுலபமாக எழுதி முடித்தவள் இவள். இந்த தேர்வையும் செம்மையாக எழுத வேண்டுமே! நான்கு பாடங்களிலும் “ஏ” தகுதி பெற்றால்தானே மருத்துவம் பயில இயலும்! அவள் மற்றும் அவளது குடும்பத்தினரின் நீண்ட நாள் கனவும் அதுவே. நான்கு “ஏ” தகுதி இருந்தும், அரசாங்க பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில முடியாமல் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது பிறிதொரு விசயம்.

அவளது பதற்றத்திற்கு இன்னமும் ஒரு காரணம் உண்டு எனலாம். அஃது அவள் ஆழ் மனத்தில் ஊன்றிருக்கும் சோகம். அதை நினைவிற் கூறும் போதெல்லாம் உள்ளம் நிலைக்குத்தியது. இதய துடிப்பு இரட்டித்தது. எஸ்.டி.பி.எம். மாதிரி தேர்வின் போது, அல்லும் பகலும் நன்கு படித்து தயார் நிலையில் போனாள். ஆனால், இதே வேதியல் தேர்வன்று, தான் பயின்ற அனைத்தையும் நொடியில் மறந்தே போனாள். முதல் நாள் தந்தை தவறிப் போன துயரமும் அதனால் விளைந்த மன உளைச்சலும் அவளைச் சுக்கு நூறாக்கின. சுலபமான வினாக்களுக்கும் விடை அறியா பேதையாய்த் தத்தளித்தாள். அக்கெட்ட கனவு அவளது நினைவலைகளை விட்டு அகல மறுத்தது. இம்முறையும் அவ்வாறே நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் உள்ளூர இருந்தது.
இதற்கு இடையில் அவளது அறைக்குள் அழையா வருகை புரிந்துள்ள கொசுக்களின் அட்டகாசம் வேறு. குழலி தான் ஒரு விக்கிரமாதித்தனது வாரிசைப் போன்று தனது முயற்சியில் சற்றும் பின்வாங்காது அயராமல் படித்தாள். குழலியின் இறுதிக்கட்ட மீள் பார்வைக்குத்தான் அம்மேசை விளக்கு இன்னும் ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது. தனது குட்டி குறிப்புகளை ஒருமுறை கண்ணோட்டம் இட்டுக் கொண்டிருந்தாள்.

ஓரிரு துண்டு தாட்களே இன்னும் எஞ்சி இருந்தன. தடபுடலென அவளது கைத்தொலைப்பேசியின் அலாரம் அலறத் தொடங்கியது. அப்போது நேரம் நள்ளிரவு பன்னிரண்டு. படித்ததை அப்படியே போட்டு விட்டு விளக்கை அணைத்தாள். படிக்கட்டில் மெதுவாக இறங்கினாள்.

“டக்… டக்… டக்…”
“டக்… டக்… டக்…” மீண்டும் அதே ஓசைக் கேட்க விழித்துக் கொண்டார், லூர்துமேரி. தாம் இடுப்பில் கட்டியிருந்த கைலியை ஒருமுறை சரி செய்த பின் கதவை எரிச்சலுடன் திறந்தார். கண்களைத் தேய்த்தவாறே உற்றுப் பார்த்தார்.

“ஏண்டி, நீ இன்னுமா தூங்கல?” “அம்மா, நீங்க தனியா தூங்குறீங்க. தங்கச்சி வேற மாமா வீட்டுக்குப் போயிட்டா. நான் வேணும்னா அந்த படுக்கையில உங்க கூட...”

சிறு அசட்டு நகைப்புக்குப் பின் அம்மா கேட்டார். “என்னடி புதுசா அக்கறை? அவ போய் ரெண்டு வாரம் ஆச்சு. தீடீரென என் மேல என்னடி கரிசணை? சரி சரி வா, வந்துப் படுத்துக்க” அம்மாவுடன் படுத்துக் கொண்டாள். கைத்தொலைப்பேசியில் அலாரம் வைத்துக் கொண்டாள். “அம்மா நாளைக்கு வெல்லென எழுப்பி விட்டுடுங்க. போன் அலாரத்தைச் சில நேரம் நம்ப முடியல.” “அதானெ சோழியும் குடுமியும் சும்மாவா ஆடும்...”

அந்த ஒல்லி பிச்சான், படுக்கையின் மீது தவழ்ந்தவாறே தான் படித்ததைக் காற்றிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள். “டேட்டிவ் போண்ட் இஸ் வீக்கர் தென் ஐயோனிக் போண்ட். சோ தேட் தெ…” “ அடியே, டேட்டிவ் போண்டாவது ஜேம்ஸ் போண்டாவது – பேசாம தூங்குடி. நாளைக்கு நேரத்தோடு பரீட்சைக்குப் போக வேணாமா?” குழலி போர்வையைத் தலையோடு இழுத்து மூடிக் கொண்டாள்.

கடிகாரத்தின் சிறிய முள் எட்டை எட்டிப் பிடிக்க முக்கால் மணி நேரமாக முயன்றுக் கொண்டிருந்தது. சூரியன் தலைப்பட தொடங்கியது. புத்தகப்பையை இடது தோள் பட்டையில் தொங்கவிட்டவாறு குழலி அங்கும் இங்கும் வீட்டின் உள்ளேயே நடமாடிக் கொண்டிருந்தாள். இடை இடையே நேரத்தையும் கவனித்துக் கொண்டாள். சிறிய முள்ளின் விடாமுயற்சியை ரசிக்க அல்ல; மணி எட்டாக இன்னும் அதிக நேரம் இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ள.

பின் அம்மாவிடம் வினவினாள். “அப்பாவோட மோட்டார் சாவி எங்கே?” மேரியின் பதிலுக்குக் காத்திராமல், மாடிக்கு அரக்க பறக்க ஏறினாள் குழலி. மேரி கீழிருந்தவாரே குரல் எழுப்பினார். “குழா, கர்த்தரை நல்லா வேண்டிக்கோடி” “ஓ… அதெல்லாம் நேத்தே பக்காவா பண்ணிட்டேன். வர்ற சேனன்ட்டுக்கு இந்த வாட்டியும்... மெழுகுவர்த்தி பிரார்த்தனை” “ஏன்டி, கர்த்தருக்கே லஞ்சமா... எதிர்பார்ப்போடு கடவுளை அனுகக் கூடாதுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவார்ல...” அவள் அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.

காலையில் எழுந்ததிலிருந்து மாடிக்கு ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளாள் இவள். நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது, தேர்வுக்குச் செல்ல. அம்மா நளினமாகச் சொன்னார். “ஏன்டி, இன்னிக்கும் எப்போதும் போல பேருந்துல போகலாமுல”. “நீங்க எப்பவும் இப்படி தான் மா, ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருங்க”. மீண்டும் அதே வேகத்துடன் படிக்கட்டுகளில் கண் மூடித்தனமாக இறங்கிக் கொண்டிருந்தாள். “அம்மா, சாவிய கா… … .. ஆ… ஆ… ஆ…”. ஒரு பெரிய ஓசை மட்டும் கோரமாகக் கேட்டது. மேரி திரும்பிப் பார்த்தார்.
_____________________________________________________________________________________

ண்களை மெல்ல திறந்தாள் குழலி. இப்போது விழிப் படலங்களைச் சற்று அகல விரித்தாள். இடதுக்கால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளைத் துணியால் அவளது இடது கால் பொட்டலம் மடிக்கப் பட்டிருந்தது. தலையை ஏதொ அழுத்துவதைப் போல ஓர் உனர்ச்சி. மெதுவாக தொட்டுப் பார்த்தாள். தலையைச் சுற்றியும் ஒரு கட்டு. “எல்லாம் போச்சு”. அவள் செவிக்கு மட்டும் விழும்படி மனம் சொன்ன வார்த்தை-தான் அது. அவளால் நன்றாக உணர முடிகிறது. தந்தை புற்று நோயால் இயற்கை எய்தும் போது சுவாசித்த அதே காற்று; அதே சுற்றுச்சூழல். அவள் இப்பொழுது மருத்துவமனையில் கிடத்தி வைத்திருப்பதை மேலும் உறுதி செய்தது - ஆங்காங்கே வெள்ளை சீருடையில் பவனி வந்த தாதியர் கூட்டம்; மருந்து வாசனை.

வலதுப்புறம் அம்மா அமர்ந்து இருந்தார். கையில் நயனம் வார சஞ்சிகை. குழலி சுய நினைவுக்கு வந்ததைப் பார்த்து எழுந்தார். “அம்மா, எனக்கு... என்ன... ஆச்சு...?” “ஒன்னும் இல்லடி பெருசா… கல்ல எலும்பு லேசா தெறிச்சிருக்காம். ரெண்டு மூனு வாரத்துல சரியாயிடுமாம்.” மருத்துவர் சொன்னதில் தனக்குப் புரிந்த்தை மட்டும் மேரி கூறிக் கொண்டிருந்தார். “ரெண்டு வாரமா…” வியந்துப் பார்த்தாள் குழலி.

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுனு நினைச்சிக்கனும்” அவளுக்கு நன்கு பரிட்சயமான குரல் அது. இடது திசை மெதுவாக தலையைத் திருப்ப முயன்றாள். முடியவில்லை-தான், ஆனாலும் விக்கிரமாத்திதனது கடை வாரிசு ஆய்யிற்றே அவள். மெதுவாக திருப்பினாள். அங்கே நின்று கொண்டிருந்தவர் அவளது கணித ஆசான் திரு. சின்ஹா ராமன் குட்டி. முகத்தில் வலிந்து ஒரு புன்முறுவலை ஏற்படுத்திக் கொண்டாள். “வாங்க சார், நீங்க... எங்கே... இங்கே...?” “இப்ப எப்படிம்மா இருக்கு உடம்பு?” “.... .... ஆ... அது...” அவளது வரண்ட தொண்டையில் வார்த்தைகளும் சிக்கின. “நல்லா ஓய்வு எடுங்க, ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதிங்க. டாக்டர் கிட்ட பேசிட்டோம், பேஷன்ட் சம்மதிச்சா நிச்சயம தேர்வு இங்கயே நடத்திடலாம்னு ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் உத்தரவு கொடுத்து இருக்கு. என்னுடன் தேர்வு வாரியத்தைப் பிரதிநிதித்து அதிகாரி ஒருவர் வந்து இருக்காங்க”

இந்த நிலைமையில் பரீட்சையா? ஒழுங்காக பதில் அளிக்க இயலுமா? இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே. இந்த இரண்டு வருட கால படிப்பு வீணாகி விடுமே. சற்று தயங்குவதைப் போல செய்தால் குழலி. உமிழை மென்று விழுங்கி அம்மாவை நோக்கினாள். “அம்மா, எனக்குப் படக் படக்குனு அடிச்சிக்குது. நான் நல்லா செய்வேனா?” பின் கெஞ்சவும் செய்தாள். இது போன்ற தருணத்தில் தாயிடமிருந்து ஆறுதல் வார்த்தைகளை அவள் எதிர்ப்பார்த்ததில் தவறு ஏதும் அல்லவே. ஆனால் நிலைமை அங்கே முற்றும் வேறுப்பட்டிருந்தது.

சட்டென இருக்கையை விட்டு எழுந்த லூர்து மேரி, விடுக்கென நயனம் புத்தகத்தை மெத்தை மேல் வீசினார். மகளை எரிச்சலாய் நோட்டமிட்டு விட்டு பின் தனது அனல் மொழிகளைக் கக்கினார். “இதோ பாருடி, நீ எதுக்குமே லாயக்கு இல்லாதவ. உனக்கு ஒரு மண்ணும் வராது. எப்ப பார்த்தாலும் இப்படியே-தான் எதாவது பன்னுற. இப்ப என்ன நடந்திருச்சு பெருசா? இது அன்றைக்கே தெரிஞ்சிருந்தா இவ்வளவு இரைச்சிருக்க வேணாமே. எதையாவது செய். என்னை விடு.” எரியும் நெருப்பில் நெய் ஊற்றியது போல இருந்தது. தோள் பையை வாரித் தன் கக்கத்துக்குள் சொருகிக்கொண்டு அலட்டலாக வெளியே நடையைக் கட்டினார் மேரி. நல்ல வேளை இதையெல்லாம் அந்த ஆசிரியர் கவனிக்கவில்லை. சற்று தொலைவில் தேர்வு அதிகாரியோடு ஏதோ அலவலாவிக் கொண்டிருந்தார்.

அம்மாவா அப்படி வார்த்தையை விட்டது? அளந்து அளந்துப் பேசுபவர் ஆயிற்றே. “நான் என்ன அப்படி தவறாக பேசிவிட்டேன்? அவளால் அதை விளையாட்டாகக் கூட நம்ப முடியவில்லை. கண்களை ஒரு நிமிடம் மூடினாள். முன்பு அப்பா சொன்ன வார்த்தை அவளுக்கு அப்போது ஒலித்தது. “நம்மலால முடியாதது ஒன்னுமே இல்ல, அப்பாக்கு எதாச்சும் ஆச்சுனா குடும்பம் உனக்கு பின்னாடி தான்... போராட்டம் இல்லனா வாழ்க்கையில ருசி இல்லமா”. இந்த தாரக மந்திரம்தான் அவள் இது வரை எந்தவொரு தடைக்கல்லையும் கடந்து வர உதவி வருகிறது.
அருவியாய் ஊற்றெடுத்த கண்ணீரைத் துடைத்து எறிந்தாள். கண்களைத் திறந்தாள். உலகமே அவளுக்கு வெளிச்சமாகத் தெரிந்தது. இனி ஒரு மாத்திரை கூட அவள் தாமதிக்க விரும்பவில்லை. அம்மாவின் வார்த்தைகளையே சவாலாக எடுத்துக் கொண்டாள். தொலைவில் நின்றுக் கொண்டிருந்த திரு.சின்ஹாவை மெதுவாக அழைத்தாள். “சார்... சார்...”

மருத்துவ மனையிலேயே ஒரு சிறப்பு அறை இருந்தது. இங்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான தற்காலிக தேர்வு அறை அஃது. மருந்தக ஊழியன் அவளை அந்த அறைக்குத் தள்ளுவண்டியில் மெதுவாக அழைத்துச் சென்றான். அங்கே ஒரு கண்காளிப்பாணி காத்துக் கொண்டிருந்தார். மறுக்கும் ஊசி செலுத்தப்பட்டும் தலை லேசாக அலுத்திக் கொண்டே இருந்த்தது அவளை. மடக்க முடியாத நிலையில் இடது கால் தள்ளு நாற்காலியின் சிறப்பு பட்டையில் ஓய்வு எடுத்துக் கொண்டது. இருப்பினும் தனக்கு வந்த இந்த சோதனையையும் வேதனையயும் கண்டு அவள் சற்றும் தளரவில்லை.

தேர்வு அதிகாரி கேள்வி தாளை நீட்டினார். சற்றும் தாமதிக்காமல் கேள்விகளுக்கு விடை அளிக்க தொடங்கினாள். தனது அவசர குணம் ஏற்படுத்திய உடல் வலியையும் ஆசை அம்மா ஏற்படுத்திய மன வலியையும் தூர எறிந்தாள். எஸ்.டி.பி.எம். நான்கு “ஏ” என கருமமே கண்ணாய் இருந்த்தாள். ஆந்த தேர்வு அதிகாரி நிச்சயம் கர்த்தர் அனுப்பி வைத்தவராகத்தான் இருக்க வேன்டும். இல்லாவிடில், அவளுக்கு மேற்கொண்டு அரை மணி நேரம் கொடுத்திருப்பாரா? அதைச் செவ்வனே பயன் படுத்திக் கொண்டாள். நன்றாக விடை எழுதினாள்.

தேர்வு முடியும் நேரம். வாசலில் மதிய உணவோடு காத்திருந்தார் தாயார். நம்பிக்கையோடு வெளியேறினாள் குழலி, வேக வேகமாக தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு. இதழ் முழுக்க எழுச்சி புன்னகை. எதையோ சாதித்த ஒளி வட்டம் அவள் முகத்தில்.

“நல்லா செஞ்சியாடி... வலி இப்போ எப்படி இருக்கு... இதோ பாரு உனக்கு புடிச்ச நண்டு கறி... அப்புறம்...” குழலி அம்மாவை இடைமறித்து, “உண்மையா உங்களுக்கு என் மேல கோவம் இல்லையே?” “சீ... போடி, நீ என் பொண்ணுடி... அப்படி கடிஞ்சா தான் நீ ஒரு வேகத்தோட எழுதுவன்னு தெரியும்... அதான் அப்படியே வீட்டுக்குக் கிளம்பி போய் உனக்கு சமைச்சிட்டு வந்தேன்”

“அம்மா, இருந்தாலும் உங்க பொண்ணு நான், சிலந்தி போல... எத்தனை இன்னல் வந்தாலும் சோர்ந்து போகாது வலை பின்னி கிட்டே தான் இருப்பேன்.” “நீ எட்டு காலு பூச்சி இல்லடி, ஒல்லி குச்சி!” மேரி சிரித்துக் கொண்டே மகளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்.
(கதாப்பாத்திரங்கள் யாவும் வெறும் கற்பனையே. நன்றி.)

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

வளைவுகளில்லா மலைப்பாதையா


ருண்ட வானம் தேய்ந்துப் போக, மொட்டை வெயில் மண்டையைப் பிளந்தது. பெய்யும் என எதிர்ப்பார்த்த மழை பெய்யவில்லை. வளைந்து நெளிந்த தார் சாலை. அதன் மேல் எனது மோட்டார் வண்டி முன்னோக்கிச் சென்றது. எனது எண்ணங்கள் மெல்ல பின்னோக்கின.


கடந்த மூன்று மாதங்கள் என்பது என் வாழ்வில் நான் இதுவரை காணாத வசந்த காலம். இனி வரும் காலம் அப்படியொரு சுற்றம் அமையுமா – அது கேள்விக்குறியே. அந்த மூன்று மாதக் காலம் நொடிகளுக்குள் சுருங்கியது. அவர்களை எல்லாம் விட்டு விலக வேண்டிய நிர்பந்தம். விலகும் தருணம் நெஞ்சம் கணக்கிறது. கண்கள் சொட்டு விட முயல்கின்றன. அதை நடித்துக் கட்டுப்படுத்தவே அதிக மனபலம் தேவைப்படுகிறது. “இந்த பாழாய்ப் போன மனசுக்குள்ளே பாசத்தை விதைத்து விட்டானே,” என படைத்தவனைத் தூற்ற தோன்றியது.



பார்வை மட்டும் சாலையில் இருக்க, சிந்தனை இறந்தகாலத்தில் லயித்துக் கொண்டிருந்த்து. பினாங்கு பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு புகழ்பெற்ற மின்பொருள் உற்பத்தி தொழிற்சாலையில் மூன்று மாத கால பயிற்சி பெற பல்கலைக்கழகத்தின் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பிடம் தைப்பிங். நெடுஞ்சாலையில் பயணித்தால் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தேவைப்படும் வேலைக்குச் செல்ல. உடனே, பினாங்கில் வசிக்கும் சின்னம்மாவின் ஞாபகம் வந்தது.



சுற்று வட்டாரத்தில் வாடகைக்கு அறை கிடைக்குமா என்று விசாரிக்க, சின்னம்மா மகன் பாரி அண்ணனைத் தொடர்பு கொண்டதுதான் குற்றம். அண்ணன் விடாப்பிடியாக அவர்களோடுதான் தங்க வேண்டும் என்று சொல்லி விட்டார். என் அம்மாவும் அவர் தங்கை கோபித்துக் கொள்வார் என்று, என்னை அங்கேயே தங்கச் சொன்னார். என் சுதந்திரம் எல்லாம் போச்சு பெரு மூச்சைவிட்டு சொன்னேன். சின்னம்மாவுக்கு பாரியைத் தவிர இரண்டு பெண்களும் உள்ளனர். மூத்தவர் மாதுளையாள் அக்காள், இளையவள் எனக்குத் தங்கை முறை – மழைநங்கை.



அம்மா வழி உறவுகள் என்றாலும், நான் அவ்வளவு நெருக்கமாக யாரிடமும் இருந்ததில்லை. ஒரே மகன் என்பதால் தனியே வாழ்ந்து பழக்கப்பட்டவன். அவர்கள் வீட்டில் முதல் நாள் அனுபவத்தைப் பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும். எனது மோட்டார் சத்தம் கேட்டதும் அண்ணன், அக்கா, தங்கை, சின்னம்மா என அனைவரும் புன்னகையும் மகிழ்ச்சியும் பொங்க வாசலில் வந்து என்னைக் கட்டித் தழுவி வரவேற்றனர். செயற்கையாக ஒரு புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டேன். என் மூட்டை முடிச்சி ஒன்றை மழைநங்கை ஏந்திக்கொண்டு உள்ளே சென்றாள். “பரவாயில்ல வெச்சிடு நானே எடுத்துக்குவேன்” “அடடடா... இதுல என்னா இருக்கு”நங்கை. “நீ உள்ள வாய்யா,” சின்னம்மா.



பயணத்தைப் பற்றி சின்னம்மா விசாரித்தார். பின்னே சமையற்கட்டுக்குள் நுழைந்தார். கேள்வி, கிண்டல், கூத்து, கும்மாளம் என இருந்தனர் அண்ணன், அக்கா மற்றும் நங்கை. முற்றிலும் புதிய சூழல். புதிய மக்கள். மணிக் கணக்கில் அங்கேயே அமர்ந்திருக்க ஏதோ போல இருந்தது. கை உதறியது, சிகரட் பிடிக்க. அடக்கிக் கொண்டேன். ஒவ்வொரு அசைவையும் யோசித்து யோசித்து செய்ய வேண்டியதாயிற்று. புதிய மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம்தான். “எப்பத்தான் இந்த மூனு மாசம் முடியுமோ,” சலித்துக் கொண்டேன். ஆனால் இன்று, அவர்களை விட்டு எப்படி இருப்பேனோ ஏக்கமாக உள்ளது. அம்மா அப்பாவைப் பிரிந்துப் பல்கலைக்கழகம் சென்றபோது கூட இப்படி கணத்தது இல்லை நெஞ்சம்.



பொதுவாக வேலை பயிற்சி முடிந்து வீடு வர மணி ஐந்து அல்லது ஆறு ஆகிவிடும். சற்று தாமதமாகி விட்டால் போதும்; வரிசையாக தொலைபேசி அழைப்பு வந்த வண்ணம் இருக்கும். அன்றாடம் சின்னம்மா விடியற்காலையிலே எழுந்து விடுவார். வேலைக்குப் போகும் அவர் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி எனக்கும் சேர்த்து சிற்றுண்டி செய்துவிடுவார். சில நேரங்களில் நங்கை எழுந்துக் குறைந்த பட்சம் கொட்டை நீர் பானமாவது கலக்கி வைத்துவிடுவாள். அவர்கள் என் மேல் காட்டிய அக்கறை மெய் சிலிர்க்க வைத்தது.



ஒருநாள் வீட்டில் இறால் சம்பால். பெரியவகை இறால் என்பதால் நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் சம்பாலை மட்டும் சோற்றில் சேர்த்துக் கொண்டேன். இதைக் கண்டு சின்னம்மா வினவ, பெரிய இறால் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என சொன்னேன். அவ்வளவுதான். அவர்களும் இறால் சமைப்பதை அன்றோடு நிறுத்திவிட்டார். இதுபோலவே எனக்குப் பிடிக்காத சில மீன் வகைகளைச் சமைப்பதையும் நிறுத்திவிட்டார். யாரோ ஒருவனுக்காக ஒரு குடும்பமே இப்படி தியாகம் செய்வது சில சமயங்களில் என்னைத் தர்ம சங்கடப் படுத்தியுள்ளது. நானும் அவருக்கு ஒரு பிள்ளையைப் போலத்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் சின்னம்மா.



எந்த நிமிடத்திலிருந்து அவர்களோடு ஒன்றித்தேன் என சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர்களோடு உறவாடிய ஒவ்வொரு நிமிடமும் சொர்க்கத்தை உணர்த்தியது.
முன்னே செல்லும் வாகனங்கள் மெதுவாகச் செல்லத் தொடங்கின. ஏனென்று பார்க்கையில் சமிக்ஞை சிவப்பு நிறத்திற்கு மாறியிருந்தது. சடார் என மிதித்தேன் பிரேக்கை. கொஞ்சம் தட்டுத் தடுமாறி மொட்டார் வண்டி நின்றது. கீழே விழுவதற்குள் சுதாகரித்துக் கொண்டேன். அப்போது சில வாரங்களுக்கு முன்பு நான் சிக்கிய சாலை விபத்து ஞாபகத்தை எட்டியது.



கூர்மையான வளைவில் வேகமாக சென்று வளைந்ததால், செம்மண்ணில் மோட்டார் சக்கரம் மாட்டிக் கொண்டு நானும் தேய்ந்துக் கொண்டே கவிழ்ந்தேன். சொற்ப காயங்களோடு வீட்டை அடைந்தேன். என் கோலத்தைக் கண்ட சின்னம்மா, பதறிப் போனார். இரவு வேலைக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்த அண்ணன் வேலைக்கு மட்டம். என்னை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே. அரக்க பறக்க சின்னம்மா குளித்துவர, மருந்தகத்திற்கு விரைந்தோம். மருத்துவர் புண்ணின் மேல் சலம் வைக்காமல் இருக்க ஒரு காட்டமான ஸ்ப்ரே பாய்ச்சினார். ஐயோ, சொல்ல முடியாத எரிச்சல். வலியால் துடிக்கும் என்னைக் கண்டு சின்னம்மா கண்ணீர் சொட்டு விட்டார். “எல்லாம் சரியாகிடும், மோட்டரப் பத்தி கவலைப் படாதே, அண்ணன் நாளைக்கு போய் செஞ்சிட்டு வந்திடுவான்,” அவர் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் வலியை மறக்க வைத்தன. அந்த புண் ஆறும் வரை வீட்டில் இன்னொரு முக்கிய உணவும் தடை செய்யப் பட்டிருந்தது - முட்டை.



இப்படி உணவில் மட்டுமின்றி மற்ற செயல்களிலும் கூட என் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்த நவீனமய உலகில் பல குடும்பங்களில் இரவு நேரங்களில் சண்டை சச்சரவு எழுவது தொலைக்காட்சி அலைவரிசைகளால். ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் என இருக்கும். இரவு எட்டு மணி தொடங்கி இந்த சின்னத் திரை நாடகங்களின் அழுகை ஆக்கிரமிப்பு. சின்னம்மா ஒரு சில நாடகங்களுக்கு அடிமை. இருப்பினும், “நீ என்னய்யா பார்க்க போற,”என்று கேட்பார். “பந்து விளையாட்டு” எனப் பட்டெண்று மனம் சொல்ல துடிக்கும். அவர்களுக்கு என்னால் முடிந்த மகிழ்ச்சி, “நீங்க பாருங்கம்மா, எனக்கு எதுன்னாலும் ஓகே”நல்லவன் போல பாசாங்கு. மறுநாள் வேலையிடத்தில் இணயத்தில் ஸ்கோர் தெரிஞ்சிக்கிட்டா போச்சு – என்னைச் சமாதானப் படுத்திக் கொள்வேன்.



வேலை முடிந்து வீடு வந்ததும் அதிக நேரம் செலவிடுவது மழைநங்கயோடுதான். சில நேரங்களில், அண்ணனோடு கால்பந்து விளையாட்டுப் பற்றியும் அக்காவோடு இசையைப்பற்றியும். நங்கையும் நானும் நண்பர்கள் போல பேசிக் கொள்வோம். கேளியும் நையாண்டியுமென மாறி மாறி செய்துக் கொள்வோம். பொது இடங்களில் வழிப் போக்கர்களைப் பார்த்து விமர்சிப்பது, தொலைக்காட்சியில் பார்த்த சம்பவங்களை நினைவிற் கொண்டு சிரிப்பது, அப்படியும் பொழுது போகவில்லையென்றால் நகைச்சுவை நடிகர்களைப் போல பேசிக் கொள்வது என இன்னும் என்னென்னவோ அரட்டை அடிப்போம். அடிக்கடி இதில் அக்காவும் அண்ணனும் இணைந்துக் கொள்வர்.



இதுவரை காணாத என்னை நான் இப்பொழுது காண்கிறேன்; குதூகலத்துடனும் சுறுசுறுப்புடனும். இரண்டு வருடங்களாகச் செதுக்கிய எனது காதலைக்கூட இந்த மூன்று மாதக் காலம் காரணமின்றி மறக்க வைத்தது. தினம் குறைந்தது இருபது குறுஞ்செய்திகளாவது பகிர்ந்துக் கொள்வோம் முன்பு. காலப் போக்கில் அவளது குறுஞ்செய்திக்கு மறுமொழி அனுப்பக்கூட மறந்திருக்கிறேன். இப்படி பாசமான மக்களோடு ஒன்றித்ததால் என்னவோ காதல் கூட இரண்டாம் பட்சமானது. கம்பத்து நண்பர்களிடம் எப்போதாவது தொலைபேசியில் உரையாடுவதுதான். இரவு உணவு அருந்தியதும் புகைப் பிடிக்கும் பழக்கம் அதுவாகவே மறைந்தது.



பன்னிரண்டாவது வாரம் அது. வந்த முதல் வாரமே சொல்லிவிட்டேன், பன்னிரண்டு வாரங்களோடு பயிற்சி முடிந்து விடுமென்று. ஆனால் கால ஓட்டத்தில் அவர்கள் மறந்திருக்கக் கூடும். எப்படி நினைவு படுத்துவது? அன்று திங்கட்கிழமை. வேலை முடிந்து வீடு செல்லும் வழியிலே மேக் டோனல்ட் விரைவுணவு வாங்கிச் சென்றேன். இன்றைக்கு இரவு உணவு என் செலவு என்று சொன்னேன் சின்னம்மாவிடம். எல்லோரும் குடும்பமாக உணவு அருந்த அமர்ந்தோம். அண்ணன் கேட்டார், “ஏன் திடீர்ன்னு கோழியெல்லாம்.” இதுதான் தருணம் “சொல், சொல்” என்றது மனம். அக்கா இடைமறித்து, “கடைசி வாரம் என்பதால....,”என இழுத்தார். சின்னம்மா குறுக்கிட்டு“என்னய்யா கணக்கு செட்டல் பண்ணுறியா?” என்ன சொல்வது தெரியாமல் “அப்படி இல்லம்மா, நான் சந்தோசமா வாங்கித் தரேன்... கூடாதா”சின்ன புன்முறுவலோடு நான் சொன்னேன். சின்னம்மா மௌனமானார்.“அப்ப அடுத்த வாரத்திலிருந்து திரும்பவும் படிக்க போயிடனுமா?” அண்ணன் கேட்டார். ஆமாம் என்று தலையை ஆட்டினேன். “நீ இல்லன்னா எங்களுக்கு போர் அடிக்குமே” மாதுளையாள் அக்கா சொன்னார். மழைநங்கை மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அதிர்ச்சியோடு என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.



அன்றிலிருந்து அவள் சரியாகப் பேசுவதில்லை என்னிடம். “அண்ணன், அண்ணன்” என்று பின்னாலே வருபவள் நங்கை. என்ன ஆனது. அறையை விட்டு அவள் வெளியே வருவது இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அறைக்குள் சென்றால், படித்துக் கொண்டேதான் இருப்பாள். சரி படிக்கட்டும் என்று வந்து விடுவேன்.



வெள்ளிக்கிழமை அன்று. வேலையிடத்து நண்பர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தேன், சோகத்தோடு. எனது அறைக்குள் நுழைந்தேன். ஒரு வாழ்த்து அட்டை, பிரமாண்டமான கைவண்ணத்தோடு மேசையின் மேல் இருந்தது. ‘வீ மிஸ் யூ’ (நாங்கள் உன்னை நினைத்து ஏங்குகிறோம்) என்று அட்டையின் முதல் பக்கம் எழுதப் பட்டிருந்தது. முழுக்க முழுக்க நங்கையின் கைவேலைப்பாடு. பூரிப்பில் கை நடுங்கியது திறந்து படிக்க. உள்ளே எனது பெயர் சிறு சிறு குச்சிகளால் பொறிக்கப் பட்டிருக்க, காய்ந்த இலைகளிலும் வண்ணத் தாட்களிலும் இதர இடங்கள் அலங்கரிக்கப் பட்டிருந்தன. நிச்சயம் பல நாள் உழைப்பு அதிலே பளிச்சிட்டது. அனைவரது கையோப்பமும் அங்கே இடம் பெற்றிருந்தது.



அட்டையைக் கையில் ஏந்திக் கொண்டு வெளியே வந்தேன். அவர்கள் அனைவருக்கும் எப்படி நன்றி நவிழ்வது என்று புரியவில்லை. நங்கை கண்கள் கணக்க ஒரு கேள்வி கேட்டாள்.
“இனி வர மாட்டிங்கல்ல? என்னோட பேச யாரும் இருக்க மாட்டாங்கல்ல?”
“ஏன் அப்படி சொல்ற, லீவு கிடைச்சா வராமலா போய்டுவேன்?”


பொருட்களை எல்லாம் மூட்டை கட்டினேன். அம்மா, அக்கா மற்றும் அண்ணன் ஆகியோரோடு விடைப் பெற்றுக் கொண்டு இறுதியாக நங்கையிடம் போனேன். அவள் முகம் கொடுத்தே பேசவில்லை. வேறு புறமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தாள். சின்னம்மா அவளைக் கண்டிக்க, “போய்ட்டு வா...........ங்க,” என சொல்லும்போதே அழுகை கொப்பளித்திக் கொண்டு வந்தது அவளுக்கு. அவள் அழ, அம்மா அக்கா இருவரும் சேர்ந்து அழுதனர். எனக்காக அவர்கள் கண்ணீர் சிந்தும்போது அடிவயிற்று பிசைந்தது. ஊற்றெடுத்த கண்ணீரைக் கட்டுப்படுத்தி அங்கிருந்துக் கிளம்பினேன்.




பிரிய மனமில்லை; ஆயினும் கட்டாயம். பாசம் கூட கரைய வைக்கும் என்பதை இன்று உணர்ந்துக் கொண்டேன். இன்னும் அரை மணி நேரத்தில் தைப்பிங் வீடு வந்து விடும். என் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளையாகவே என்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? என்னைப் பதப்படுத்திக் கொண்டேன்.



“மலைப்பாதை என்றால் அது கண்டிப்பாக வளைந்து நெளிந்துதான் போகும். வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் கலந்தது. இன்பத்திலிருந்து வரும் சங்கடமும் உண்டு. வாழ்க்கை பயணம் அனுபவம் நிறைந்தது,” என எப்போதோ தாத்தா சொன்னது அப்போது ஒலித்தது. கார்மேகம் வானத்தை மூட, மீண்டும் இருண்டது சாலை. மழைக்கு முன் வீடு சேர வேண்டுமென்று மோட்டார் பிடியை முறுக்கினேன்.




பொருளுணர்வு:

தார் : சாலை அமைப்பில் பயன்படுத்தப்படும் கெட்டியான கருநிற எரித் திரவம் (tar)
மோட்டார் வண்டி : இருசக்கர இயந்திர வண்டி (motorcycle)
சம்பால் : மிளகாயில் செய்யப்படும் உறைப்பு குழம்பு வகை
ஓகே : ஏற்புடையது, பரவாயில்லை (okay / o.k.)
ஸ்கோர் : தேர்ச்சி, மதிப்பெண் (score)
மேக் டோனல்ட் : ஒரு விரைவு உணவகத்தின் பெயர். (Mc Donald’s)
செட்டல் : நிவர்த்தி (settle)
போர் : வெறுமை உணர்வு (bore)
பிரேக் : நிறுத்தும் விசை (brake)
சிகரட் : சுருட்டு, புகைத்தண்டு (cigarette)
ஸ்ப்ரே : காற்றைப் பாய்ச்சும் எளிய கருவி (spray)
கம்பம் : சிற்றூர், கிராமம்