நல்லவேளை, வழக்கமா நெரிசலா இருக்கிற பாயான் பாரு சாலை, புக்கில் ஜம்பூல் ரவுண்டபோட் எல்லாம் நெரிசல் இல்லாம இருந்தன. முக்கியமா நெரிசலே கதின்னு கிடக்கும் பினாங்கு பாலத்துல காடிங்க சுமூகமா ஓடிக்கிட்டு இருந்திச்சு. அப்பாடான்னு முறுக்கிக் கிட்டே போனேன்.
ஏதோ ஒரு பருவக் காத்து அடிக்கிறதுனால இப்போல்லாம் ஆள தூக்குற மாதிரி வேகமா வீசுது காத்து. அன்றைக்குன்னு பாத்து மழைக்கான காத்தும் கடல் காத்தும் கூட்டு சேந்துருச்சு. பாலம் ஏறினதும் காத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன். காத்து கருப்பு அடிச்சிடப் போகுதுன்னு பெரியவங்க சொல்றது இதுதான் போல. சின்ன வாகனம்ன்னா பெரிய பெரிய லாரிங்களுக்கு மட்டும் இல்ல, காத்துக்கும் ரொம்ப இளக்காரமா போயிடுச்சு. சிவனேன்னு ஓரமா போனாக் கூட நடு ரோட்டுக்குத் தள்ளி மிரட்டிக்கிட்டு இருந்திச்சு.

பினாங்கு பாலத்துல மோட்டார் ஓட்டிகளுக்கென தனி பாதை ஒதுக்கப் படாதனால, காடிங்களுக்கு நடுவே-நடுவே ஒட்டினாத்தான் பாலத்த கடக்க முடியும். ஏற்கனவே என்னோட மோட்டார், ரோட்டுல அங்கேயும் இங்கேயும் அலசிட்டு இருந்திச்சு, இதுல நடுவுல வேற நான் போகனுமா? நான் மட்டும் தான்னு பார்த்தா, மத்த மோட்டாருங்களும் கூட அலசி அலசித்தான் ஓடிக்கிட்டு இருந்திச்சு. எப்படா இந்த கண்டத்த தாண்டுவேன்னு ஆகிப்போச்சு. ஆடி அலசி ஒரு வழியா பாலத்தைக் கடந்தாச்சு. கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தேன்.
இப்போ முழுசா இருட்டிடுச்சு. பாலத்தை விட்டு இறங்கினதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி சாலைகள் பிரியும். நான் கிழக்குல போக வேண்டும். என்னோட ரெண்டாவது கண்டம் பப்பரப்பான்னு ரோட்டு மேல படுத்து காத்துட்டு இருந்திச்சு. தூரத்திலே பார்த்துட்டேன், ஒரு கருப்பு உருவம் போல ரோட்டு மேல சதுர வடிவில தெரிஞ்சது. தார் ரோட்டை விட கருப்பு. சில நேரத்துல, தார் சாலையை அங்கே இங்கே நோண்டி புதுசா தார் குழைச்சி போட்டு இருப்பாங்க. அதுக்கூட அப்படித்தான் தட்டையா கூடுதல் கருப்பா தெரியும். இல்லாட்டி பக்கத்துல அறிவிப்பு/விளம்பர பலகை இருந்து விளக்கு வெளிச்சம் பட்டு தெரியும் நிழல் கூட அப்படித்தான் இருக்கும். ரோட்டு விளக்கு அங்கே இல்ல. வண்டியோட கீழ்நோக்கு விளக்கும் இல்லாததால துள்ளியமா என்னதான் அங்கே கிடக்குன்னு தெரியல. சரியா அஞ்சே வினாடி தான் இருக்கு அதை நெருங்க. வலப்பக்கம் காடி என் வேகத்துக்கு ஈடு கொடுத்து வந்துக்கிட்டு இருக்கு. இடப்பக்கம் இன்னொரு மோட்டார் வண்டி. ரெண்டு பக்கமும் நகர முடியல.
புது தார் ரோடோ அல்லது நிழலா இருந்தா அது மேலேயே மிதிச்சோ ஏறியோ போயிடலாம், பிரச்சனை இல்ல. வேறு ஏதும் திடப் பொருளா இருந்துட்டா? ஒரு முடிவுக்கு வர நிச்சயமா அந்த 5 வினாடி பத்தல. உடனே பிரேக் பிடிச்சாலும் அதை தாண்டித்தான் நிற்கும். ஆனாலும் பிரேக் பிடிக்கிறத தவிர வேற வழி இல்ல. ரொம்ப கிட்ட போனதும் அது என்னான்னு தெரிஞ்சது. சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும். ஒரு லாரியின் டயர். பாதியா பொசுங்கிப்போய் படுத்தாற்படி கிடந்தது.
அதற்குள்ளே இடப்பக்கம் இருந்த குறுகிய பாதையில மோட்டார செலுத்திட்டேன். அது டயர்ன்னு தெரிஞ்சப்போ ஈரக்குலையே கலங்கிடுச்சு. அதைத் தாண்டி கடக்கும் போது லேசா என்னோட வலது காலு அந்த டயர்ல உரசினப்போது 1% தாக்கம் உடல் முழுக்க பரவுனுச்சு. மிச்சம் 99 சதவீதத்த நினைச்சப்போ நிஜமாவே சுறுங்கிடுச்சு. இப்படி சாலையில கண்ட பொருட்களைப் சிதற விட்டு போகும் ஆட்களையும் சாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பாளர்களையும் வாய்க்கு வந்த மாதிரி திட்டிக் கிட்டே போனேன். அப்பக்கூட ஆத்திரம் தீரல.
அதிர்ச்சியிலேந்து மீள முடியல. “ஒரு வேளை அந்த டயர் மேல நான் ஏறி இருந்தா?” இந்த கேள்வி என்னை விரட்டிக்கிட்டே வந்திச்சு. எப்படியோ ரெண்டாவது கண்டத்துலேந்தும் தப்பியாச்சு, மீண்டும் கடவுளுக்கு நன்றி.
வீட்டுக்குப் போக வேண்டிய நெடுஞ்சாலை ஏறிட்டேன். நிம்மதி அடுத்த 5 நிமிசம் கூட நீடிக்கல. திடுதுப்புன்னு மழை. எந்த அறிகுறியும் இல்ல. என்னோட மழை உடையைப் போடுறதும் போடாம இருக்குறதும் ஒன்னு, எப்படியும் நனயத்தான் போறேன். வீட்டுக்குத்தானே போவப்போறென்னு தெனாவெட்டா இருந்திட்டேன்.
வழியில சில பேரு வண்டிய நிறுத்தி, மழை உடை அணிந்துக்கிட்டு இருந்தாங்க. இன்னும் ஆறு - ஏழு நிமிசத்துல வீடு வந்திடுமுன்னு அசல்ட்டா இருந்திட்டேன். பேய்ஞ்சது உங்க ஊட்டு மழையும் இல்ல, எங்க ஊட்டு மழையும் இல்ல... செம்ம மழை, அடிச்சி பிச்சி எடுத்துருச்சு. நான் தொப்பரையா ஆயிட்டேன். முன்னுக்கு போற காடிங்க சரியாக் கூட தெரியல, வெளிச்சத்த வெச்சி குத்து மதிப்பா ஓட்டுனேன்.
அப்போ நிஜமா நண்பர் விக்கி அண்மையில் எழுதின “வான் துளிகள்” ஞாபகத்துக்கு வந்திச்சு. கோவம் கோவமா வந்திச்சு. உடனே மழையைக் கண்ணா பின்னான்னு திட்டி ஒரு கவிதை எழுதனுமுன்னு தோணுச்சு. சரி வேண்டாம், நம்மள விட பெரியவங்க வள்ளுவர், பாரதில்லாம் மழையைப் போற்ற சொல்லி இருக்காங்க. பொங்கல் வேற வருது. பொங்கலுக்குக் காரணம் பயிர் விளைச்சல்ன்னா, விளைச்சலுக்கு காரணம் நல்ல மழை, இல்லியா? அதனால அந்த எண்ணத்தைக் கை விட்டுட்டேன் (கவிதை எழுத சொன்னா ‘கவுஜ’ எழுதுவேன்றது இன்னொரு விசயம், அத நம்ம இங்க விவாதிக்க வேணாம்).
அப்புறம், வீட்டுல இன்னும் காணுமேன்னு போனுக்கு மேல போன். எங்க எடுக்குறது? அது பாட்டுக்கு பாக்கெடுக்குள்ள துடிச்சிக்கிட்டு இருந்திச்சு. வீட்டுக்குப் போய் சேர்ந்தப்போ இன்னொரு கண்டம் மீண்டு வந்த மாதிரி இருந்திச்சு.
ஆனா அந்த பெரிய டயர தாண்டி வந்தேன் பாருங்க... அத நினைச்சா இன்னமும் பயங்கரமா அதிர்ச்சியா இருக்கு. நண்பர்களே, இதைப் படிச்ச பிறகாவது சாலையில் செல்லுகையில் குப்பைகளைச் சிந்தாமல், சிதறடிக்காமல் ஒழுக்கமாக, பொறுப்பாக பயணம் செய்வோம். நாம் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வரலாம். நாம் செய்யும் சிறுபிள்ளைத்தனத்தால் சிக்குண்டு கிடக்கப்போகும் அப்பாவிகளை நினைவில் கொள்வோம்.

பதிவைப் படித்த நண்பர்களுக்கு மட்டும் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
மற்றவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து மட்டும்தான், பொங்கல்லாம் இல்ல...
