பக்கங்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2008

இவளும் ஒரு சிலந்தியே!


மைதியான இரவு பொழுது அங்கே. மேல் மாடியில் மட்டும் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அங்கே ஓர் இளம் பெண் அமைதிக்குப் புறம்பாக. கையை அடுத்து இப்போது கால்களை வருடிக் கொண்டிருந்தாள். இடையிடையே முதுகையும் தொட முடியாமல் தொட்டுச் சொறிந்துக் கொண்டாள். தினமும் இரவு நேரங்களில் குட்டி ராஜ்ஜியம் நடத்தும் இந்த கொசுக்களின் மீது அவளுக்குத் தீராக் கோபம்தான். ஒவ்வொரு வினாடியும் அவளுக்கு இப்போது முக்கியம். அவசர அவசரமாக பாடத்தை மனனம் செய்துக் கொண்டிருந்தவளின் காதருகே அக்கொசுக்கள் ரீங்காரமிட்டது அவளை ஆங்காரப்படுத்தியது.

புகைந்துக் கொண்டிருந்த கொசுவத்தியைச் சற்றும் பொருட்கொள்ளாமல், புயலாய் வந்த மின் விசிரியின் காற்றுக்கும் அல்வா கொடுத்து விட்டு, அந்த ஒல்லி பிச்சான் குழலியை மட்டும் அவை வட்டமிட்டு புடைச்சூழ்ந்தன. ஆனாலும் கொசுக்களின் முயற்சி அவளைக் கவர்ந்தது.

நாளை அவள் சரியாக எட்டு முப்பது மணிக்கெல்லாம் பள்ளியில் இருக்க வேண்டும். எட்டே முக்காலுக்குத் தேர்வு தொடங்கிவிடும். ஆனாலும் அவளது தோழிகள் யாவரும் காலை ஏழரைக்கெல்லாம் பாடசாலையில் குவிந்து விடுவர். முன்கூட்டியே சென்று, அவர்கள் சொல்லும் ஆருடங்களில் கலந்துக் கொள்ள அவளுக்கு நாட்டம் இல்லை.

அவளது இத்தகைய பதற்றத்திற்குக் காரணம் நாளைய வேதியல் தாள் 2-உடன் அவளுக்கான ஒட்டு மொத்த தேர்வுகளும் முடிவடைகின்றன. இதற்கு முந்தைய தாட்களை எல்லாம் கடலைத் திண்பது போல சுலபமாக எழுதி முடித்தவள் இவள். இந்த தேர்வையும் செம்மையாக எழுத வேண்டுமே! நான்கு பாடங்களிலும் “ஏ” தகுதி பெற்றால்தானே மருத்துவம் பயில இயலும்! அவள் மற்றும் அவளது குடும்பத்தினரின் நீண்ட நாள் கனவும் அதுவே. நான்கு “ஏ” தகுதி இருந்தும், அரசாங்க பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில முடியாமல் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது பிறிதொரு விசயம்.

அவளது பதற்றத்திற்கு இன்னமும் ஒரு காரணம் உண்டு எனலாம். அஃது அவள் ஆழ் மனத்தில் ஊன்றிருக்கும் சோகம். அதை நினைவிற் கூறும் போதெல்லாம் உள்ளம் நிலைக்குத்தியது. இதய துடிப்பு இரட்டித்தது. எஸ்.டி.பி.எம். மாதிரி தேர்வின் போது, அல்லும் பகலும் நன்கு படித்து தயார் நிலையில் போனாள். ஆனால், இதே வேதியல் தேர்வன்று, தான் பயின்ற அனைத்தையும் நொடியில் மறந்தே போனாள். முதல் நாள் தந்தை தவறிப் போன துயரமும் அதனால் விளைந்த மன உளைச்சலும் அவளைச் சுக்கு நூறாக்கின. சுலபமான வினாக்களுக்கும் விடை அறியா பேதையாய்த் தத்தளித்தாள். அக்கெட்ட கனவு அவளது நினைவலைகளை விட்டு அகல மறுத்தது. இம்முறையும் அவ்வாறே நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் உள்ளூர இருந்தது.
இதற்கு இடையில் அவளது அறைக்குள் அழையா வருகை புரிந்துள்ள கொசுக்களின் அட்டகாசம் வேறு. குழலி தான் ஒரு விக்கிரமாதித்தனது வாரிசைப் போன்று தனது முயற்சியில் சற்றும் பின்வாங்காது அயராமல் படித்தாள். குழலியின் இறுதிக்கட்ட மீள் பார்வைக்குத்தான் அம்மேசை விளக்கு இன்னும் ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது. தனது குட்டி குறிப்புகளை ஒருமுறை கண்ணோட்டம் இட்டுக் கொண்டிருந்தாள்.

ஓரிரு துண்டு தாட்களே இன்னும் எஞ்சி இருந்தன. தடபுடலென அவளது கைத்தொலைப்பேசியின் அலாரம் அலறத் தொடங்கியது. அப்போது நேரம் நள்ளிரவு பன்னிரண்டு. படித்ததை அப்படியே போட்டு விட்டு விளக்கை அணைத்தாள். படிக்கட்டில் மெதுவாக இறங்கினாள்.

“டக்… டக்… டக்…”
“டக்… டக்… டக்…” மீண்டும் அதே ஓசைக் கேட்க விழித்துக் கொண்டார், லூர்துமேரி. தாம் இடுப்பில் கட்டியிருந்த கைலியை ஒருமுறை சரி செய்த பின் கதவை எரிச்சலுடன் திறந்தார். கண்களைத் தேய்த்தவாறே உற்றுப் பார்த்தார்.

“ஏண்டி, நீ இன்னுமா தூங்கல?” “அம்மா, நீங்க தனியா தூங்குறீங்க. தங்கச்சி வேற மாமா வீட்டுக்குப் போயிட்டா. நான் வேணும்னா அந்த படுக்கையில உங்க கூட...”

சிறு அசட்டு நகைப்புக்குப் பின் அம்மா கேட்டார். “என்னடி புதுசா அக்கறை? அவ போய் ரெண்டு வாரம் ஆச்சு. தீடீரென என் மேல என்னடி கரிசணை? சரி சரி வா, வந்துப் படுத்துக்க” அம்மாவுடன் படுத்துக் கொண்டாள். கைத்தொலைப்பேசியில் அலாரம் வைத்துக் கொண்டாள். “அம்மா நாளைக்கு வெல்லென எழுப்பி விட்டுடுங்க. போன் அலாரத்தைச் சில நேரம் நம்ப முடியல.” “அதானெ சோழியும் குடுமியும் சும்மாவா ஆடும்...”

அந்த ஒல்லி பிச்சான், படுக்கையின் மீது தவழ்ந்தவாறே தான் படித்ததைக் காற்றிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள். “டேட்டிவ் போண்ட் இஸ் வீக்கர் தென் ஐயோனிக் போண்ட். சோ தேட் தெ…” “ அடியே, டேட்டிவ் போண்டாவது ஜேம்ஸ் போண்டாவது – பேசாம தூங்குடி. நாளைக்கு நேரத்தோடு பரீட்சைக்குப் போக வேணாமா?” குழலி போர்வையைத் தலையோடு இழுத்து மூடிக் கொண்டாள்.

கடிகாரத்தின் சிறிய முள் எட்டை எட்டிப் பிடிக்க முக்கால் மணி நேரமாக முயன்றுக் கொண்டிருந்தது. சூரியன் தலைப்பட தொடங்கியது. புத்தகப்பையை இடது தோள் பட்டையில் தொங்கவிட்டவாறு குழலி அங்கும் இங்கும் வீட்டின் உள்ளேயே நடமாடிக் கொண்டிருந்தாள். இடை இடையே நேரத்தையும் கவனித்துக் கொண்டாள். சிறிய முள்ளின் விடாமுயற்சியை ரசிக்க அல்ல; மணி எட்டாக இன்னும் அதிக நேரம் இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ள.

பின் அம்மாவிடம் வினவினாள். “அப்பாவோட மோட்டார் சாவி எங்கே?” மேரியின் பதிலுக்குக் காத்திராமல், மாடிக்கு அரக்க பறக்க ஏறினாள் குழலி. மேரி கீழிருந்தவாரே குரல் எழுப்பினார். “குழா, கர்த்தரை நல்லா வேண்டிக்கோடி” “ஓ… அதெல்லாம் நேத்தே பக்காவா பண்ணிட்டேன். வர்ற சேனன்ட்டுக்கு இந்த வாட்டியும்... மெழுகுவர்த்தி பிரார்த்தனை” “ஏன்டி, கர்த்தருக்கே லஞ்சமா... எதிர்பார்ப்போடு கடவுளை அனுகக் கூடாதுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவார்ல...” அவள் அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.

காலையில் எழுந்ததிலிருந்து மாடிக்கு ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளாள் இவள். நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது, தேர்வுக்குச் செல்ல. அம்மா நளினமாகச் சொன்னார். “ஏன்டி, இன்னிக்கும் எப்போதும் போல பேருந்துல போகலாமுல”. “நீங்க எப்பவும் இப்படி தான் மா, ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருங்க”. மீண்டும் அதே வேகத்துடன் படிக்கட்டுகளில் கண் மூடித்தனமாக இறங்கிக் கொண்டிருந்தாள். “அம்மா, சாவிய கா… … .. ஆ… ஆ… ஆ…”. ஒரு பெரிய ஓசை மட்டும் கோரமாகக் கேட்டது. மேரி திரும்பிப் பார்த்தார்.
_____________________________________________________________________________________

ண்களை மெல்ல திறந்தாள் குழலி. இப்போது விழிப் படலங்களைச் சற்று அகல விரித்தாள். இடதுக்கால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளைத் துணியால் அவளது இடது கால் பொட்டலம் மடிக்கப் பட்டிருந்தது. தலையை ஏதொ அழுத்துவதைப் போல ஓர் உனர்ச்சி. மெதுவாக தொட்டுப் பார்த்தாள். தலையைச் சுற்றியும் ஒரு கட்டு. “எல்லாம் போச்சு”. அவள் செவிக்கு மட்டும் விழும்படி மனம் சொன்ன வார்த்தை-தான் அது. அவளால் நன்றாக உணர முடிகிறது. தந்தை புற்று நோயால் இயற்கை எய்தும் போது சுவாசித்த அதே காற்று; அதே சுற்றுச்சூழல். அவள் இப்பொழுது மருத்துவமனையில் கிடத்தி வைத்திருப்பதை மேலும் உறுதி செய்தது - ஆங்காங்கே வெள்ளை சீருடையில் பவனி வந்த தாதியர் கூட்டம்; மருந்து வாசனை.

வலதுப்புறம் அம்மா அமர்ந்து இருந்தார். கையில் நயனம் வார சஞ்சிகை. குழலி சுய நினைவுக்கு வந்ததைப் பார்த்து எழுந்தார். “அம்மா, எனக்கு... என்ன... ஆச்சு...?” “ஒன்னும் இல்லடி பெருசா… கல்ல எலும்பு லேசா தெறிச்சிருக்காம். ரெண்டு மூனு வாரத்துல சரியாயிடுமாம்.” மருத்துவர் சொன்னதில் தனக்குப் புரிந்த்தை மட்டும் மேரி கூறிக் கொண்டிருந்தார். “ரெண்டு வாரமா…” வியந்துப் பார்த்தாள் குழலி.

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுனு நினைச்சிக்கனும்” அவளுக்கு நன்கு பரிட்சயமான குரல் அது. இடது திசை மெதுவாக தலையைத் திருப்ப முயன்றாள். முடியவில்லை-தான், ஆனாலும் விக்கிரமாத்திதனது கடை வாரிசு ஆய்யிற்றே அவள். மெதுவாக திருப்பினாள். அங்கே நின்று கொண்டிருந்தவர் அவளது கணித ஆசான் திரு. சின்ஹா ராமன் குட்டி. முகத்தில் வலிந்து ஒரு புன்முறுவலை ஏற்படுத்திக் கொண்டாள். “வாங்க சார், நீங்க... எங்கே... இங்கே...?” “இப்ப எப்படிம்மா இருக்கு உடம்பு?” “.... .... ஆ... அது...” அவளது வரண்ட தொண்டையில் வார்த்தைகளும் சிக்கின. “நல்லா ஓய்வு எடுங்க, ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதிங்க. டாக்டர் கிட்ட பேசிட்டோம், பேஷன்ட் சம்மதிச்சா நிச்சயம தேர்வு இங்கயே நடத்திடலாம்னு ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் உத்தரவு கொடுத்து இருக்கு. என்னுடன் தேர்வு வாரியத்தைப் பிரதிநிதித்து அதிகாரி ஒருவர் வந்து இருக்காங்க”

இந்த நிலைமையில் பரீட்சையா? ஒழுங்காக பதில் அளிக்க இயலுமா? இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே. இந்த இரண்டு வருட கால படிப்பு வீணாகி விடுமே. சற்று தயங்குவதைப் போல செய்தால் குழலி. உமிழை மென்று விழுங்கி அம்மாவை நோக்கினாள். “அம்மா, எனக்குப் படக் படக்குனு அடிச்சிக்குது. நான் நல்லா செய்வேனா?” பின் கெஞ்சவும் செய்தாள். இது போன்ற தருணத்தில் தாயிடமிருந்து ஆறுதல் வார்த்தைகளை அவள் எதிர்ப்பார்த்ததில் தவறு ஏதும் அல்லவே. ஆனால் நிலைமை அங்கே முற்றும் வேறுப்பட்டிருந்தது.

சட்டென இருக்கையை விட்டு எழுந்த லூர்து மேரி, விடுக்கென நயனம் புத்தகத்தை மெத்தை மேல் வீசினார். மகளை எரிச்சலாய் நோட்டமிட்டு விட்டு பின் தனது அனல் மொழிகளைக் கக்கினார். “இதோ பாருடி, நீ எதுக்குமே லாயக்கு இல்லாதவ. உனக்கு ஒரு மண்ணும் வராது. எப்ப பார்த்தாலும் இப்படியே-தான் எதாவது பன்னுற. இப்ப என்ன நடந்திருச்சு பெருசா? இது அன்றைக்கே தெரிஞ்சிருந்தா இவ்வளவு இரைச்சிருக்க வேணாமே. எதையாவது செய். என்னை விடு.” எரியும் நெருப்பில் நெய் ஊற்றியது போல இருந்தது. தோள் பையை வாரித் தன் கக்கத்துக்குள் சொருகிக்கொண்டு அலட்டலாக வெளியே நடையைக் கட்டினார் மேரி. நல்ல வேளை இதையெல்லாம் அந்த ஆசிரியர் கவனிக்கவில்லை. சற்று தொலைவில் தேர்வு அதிகாரியோடு ஏதோ அலவலாவிக் கொண்டிருந்தார்.

அம்மாவா அப்படி வார்த்தையை விட்டது? அளந்து அளந்துப் பேசுபவர் ஆயிற்றே. “நான் என்ன அப்படி தவறாக பேசிவிட்டேன்? அவளால் அதை விளையாட்டாகக் கூட நம்ப முடியவில்லை. கண்களை ஒரு நிமிடம் மூடினாள். முன்பு அப்பா சொன்ன வார்த்தை அவளுக்கு அப்போது ஒலித்தது. “நம்மலால முடியாதது ஒன்னுமே இல்ல, அப்பாக்கு எதாச்சும் ஆச்சுனா குடும்பம் உனக்கு பின்னாடி தான்... போராட்டம் இல்லனா வாழ்க்கையில ருசி இல்லமா”. இந்த தாரக மந்திரம்தான் அவள் இது வரை எந்தவொரு தடைக்கல்லையும் கடந்து வர உதவி வருகிறது.
அருவியாய் ஊற்றெடுத்த கண்ணீரைத் துடைத்து எறிந்தாள். கண்களைத் திறந்தாள். உலகமே அவளுக்கு வெளிச்சமாகத் தெரிந்தது. இனி ஒரு மாத்திரை கூட அவள் தாமதிக்க விரும்பவில்லை. அம்மாவின் வார்த்தைகளையே சவாலாக எடுத்துக் கொண்டாள். தொலைவில் நின்றுக் கொண்டிருந்த திரு.சின்ஹாவை மெதுவாக அழைத்தாள். “சார்... சார்...”

மருத்துவ மனையிலேயே ஒரு சிறப்பு அறை இருந்தது. இங்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான தற்காலிக தேர்வு அறை அஃது. மருந்தக ஊழியன் அவளை அந்த அறைக்குத் தள்ளுவண்டியில் மெதுவாக அழைத்துச் சென்றான். அங்கே ஒரு கண்காளிப்பாணி காத்துக் கொண்டிருந்தார். மறுக்கும் ஊசி செலுத்தப்பட்டும் தலை லேசாக அலுத்திக் கொண்டே இருந்த்தது அவளை. மடக்க முடியாத நிலையில் இடது கால் தள்ளு நாற்காலியின் சிறப்பு பட்டையில் ஓய்வு எடுத்துக் கொண்டது. இருப்பினும் தனக்கு வந்த இந்த சோதனையையும் வேதனையயும் கண்டு அவள் சற்றும் தளரவில்லை.

தேர்வு அதிகாரி கேள்வி தாளை நீட்டினார். சற்றும் தாமதிக்காமல் கேள்விகளுக்கு விடை அளிக்க தொடங்கினாள். தனது அவசர குணம் ஏற்படுத்திய உடல் வலியையும் ஆசை அம்மா ஏற்படுத்திய மன வலியையும் தூர எறிந்தாள். எஸ்.டி.பி.எம். நான்கு “ஏ” என கருமமே கண்ணாய் இருந்த்தாள். ஆந்த தேர்வு அதிகாரி நிச்சயம் கர்த்தர் அனுப்பி வைத்தவராகத்தான் இருக்க வேன்டும். இல்லாவிடில், அவளுக்கு மேற்கொண்டு அரை மணி நேரம் கொடுத்திருப்பாரா? அதைச் செவ்வனே பயன் படுத்திக் கொண்டாள். நன்றாக விடை எழுதினாள்.

தேர்வு முடியும் நேரம். வாசலில் மதிய உணவோடு காத்திருந்தார் தாயார். நம்பிக்கையோடு வெளியேறினாள் குழலி, வேக வேகமாக தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு. இதழ் முழுக்க எழுச்சி புன்னகை. எதையோ சாதித்த ஒளி வட்டம் அவள் முகத்தில்.

“நல்லா செஞ்சியாடி... வலி இப்போ எப்படி இருக்கு... இதோ பாரு உனக்கு புடிச்ச நண்டு கறி... அப்புறம்...” குழலி அம்மாவை இடைமறித்து, “உண்மையா உங்களுக்கு என் மேல கோவம் இல்லையே?” “சீ... போடி, நீ என் பொண்ணுடி... அப்படி கடிஞ்சா தான் நீ ஒரு வேகத்தோட எழுதுவன்னு தெரியும்... அதான் அப்படியே வீட்டுக்குக் கிளம்பி போய் உனக்கு சமைச்சிட்டு வந்தேன்”

“அம்மா, இருந்தாலும் உங்க பொண்ணு நான், சிலந்தி போல... எத்தனை இன்னல் வந்தாலும் சோர்ந்து போகாது வலை பின்னி கிட்டே தான் இருப்பேன்.” “நீ எட்டு காலு பூச்சி இல்லடி, ஒல்லி குச்சி!” மேரி சிரித்துக் கொண்டே மகளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்.
(கதாப்பாத்திரங்கள் யாவும் வெறும் கற்பனையே. நன்றி.)

4 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

உங்கள் கதையில் மூழ்கியபோது, நான் தேர்வுக்கு படித்த அந்த நினைவுகளை மீட்டெடுத்து விட்டேன்.. அது ஒரு கனா காலம்.. கற்பனைக் கதையாயினும், நிஜத்தோடு ஒன்றியுள்ள வரிகள்.. வாழ்த்துகள் ஆனந்தன்.. :)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

புனைவு அருமைங்க... ஆங்காங்கே நீங்கள் கொடுத்திருந்த வர்ணனைகள் மிக அழகு. இரசித்தேன். வாழ்த்துக்கள்...

A N A N T H E N சொன்னது…

//சதீசு குமார் said...
உங்கள் கதையில் மூழ்கியபோது, நான் தேர்வுக்கு படித்த அந்த நினைவுகளை மீட்டெடுத்து விட்டேன்.. அது ஒரு கனா காலம்.. கற்பனைக் கதையாயினும், நிஜத்தோடு ஒன்றியுள்ள வரிகள்.. வாழ்த்துகள் ஆனந்தன்.. :)//

- நன்றி... உங்கள் ஆதரவுக்கு.
இது சென்ற ஆண்டு மலாயா பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை போட்டிக்காக எழுதப் பட்டது

A N A N T H E N சொன்னது…

//VIKNESHWARAN said...
புனைவு அருமைங்க... ஆங்காங்கே நீங்கள் கொடுத்திருந்த வர்ணனைகள் மிக அழகு. இரசித்தேன். வாழ்த்துக்கள்...//

- நன்றி விக்னேஷ்...